மைக்கேல் ஜாக்சனுக்கு பளிங்கு கல்லில் சிலை பிரபுதேவா திறந்து வைத்தார்!!

micheal-பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி..அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன்.. நடனத்திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன்.. மண்ணை விட்டு மறைந்தாலும், உலக இசை ரசிகர்களின் மனதை விட்டு மறையாக மாயவித்தைக்காரன் மைக்கேல் ஜாக்சன்..
மைக்கேல் ஜாக்சனின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவர் தான் சென்னையில் இயங்கி வரும் ஆர்.சி.கோல்டன் கிரானைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சந்திரசேகரன். காலத்தை வென்ற கலைஞனுக்கு காலத்தால் அழிக்க முடியாத மரியாதை செய்ய வேண்டும் என்ற சந்திரசேகரனின் கனவு தான், இன்று பளிங்கு கல்லில் நிமிர்ந்து நிற்கும் மைக்கேல் ஜாக்சன் சிலை உருவாக காரணம்..
மூன்றரை டன் எடையில், 10 அடி உயரத்தில் ஐந்தரை அடி அகலத்தில் அதிபிரமாண்டமாய் கருப்பு கிரானைட் கற்களில் உருவாகியுள்ளது மைக்கேல் ஜாக்சனின் சிலை. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனகபுரா என்ற ஊரில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கருப்பு கிரானைட் கல், காஞ்சிபுரத்தில் வைத்து 45 நாட்கள் கைவினைக் கலைஞர்கள் பார்த்து பார்த்து ஜாக்சனின் சிலையை செதுக்கியுள்ளனர்.
12 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைக்கேல் ஜாக்சன் சிலை, பார்ப்பவர் கண்களை விரியச் செய்கிறது. அமெரிக்காவில் பிறந்த கலைஞனுக்கு உன்னத ரசிகனின் அன்பு அடையாளம் என பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் உருவாகி உள்ளது இந்த சிலை.
இப்படிப்பட்ட பிரமாண்ட சிலையை ஆர்.சி.கோல்டன் கிரானைட் நிறுவனத்தினர் சென்னை பல்லாவரத்தில் இயங்கி வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் திரு.ஐசரி கணேஷ் அவர்களுக்கு வழங்கியுள்ளார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் வேல்ஸ் பிலிம் கிராப்ட் என்ற இரண்டு நாள் கருத்தரங்கில் இந்த சிலை பல்கலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா அவர்களும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கணேஷ்  அவர்களும் இந்த சிலையை திறந்து வைத்தனர். மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த வண்ணமிகு விழாவில் கலந்து கொண்டனர்.