மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

1 (20)மொழி இழந்தால் நிலம் இழப்போம்  என்று தருண் விஜய் எம்.பிக்கான பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து  எச்சரிக்கை விடுத்தார்.இதோ அவரது பேச்சு

”தமிழும் ஆட்சிமொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. இன்று அதைச் சொல்கிற குரல்தான் புதியது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். மாநிலங்களவை உறுப்பினர்; ஆர்.எஸ்.எஸ் காரர் என்று அறியப்பட்டவர். இந்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்துக் குரல் கொடுக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டுக்கு ஆனந்தம் கலந்த ஆச்சரியம்.

வடக்கு என்றாலே தமிழை மறுப்பது; இந்தியை ஆதரிப்பது என்ற கருத்து தருண் விஜய் அவர்களால் இன்று உடைக்கப்படுகிறது.

எல்லாவற்றிலும் விதிவிலக்கு உண்டு. எல்லா ரத்தமும் சிவப்பல்ல, வெட்டுக்கிளிக்கு வெள்ளை ரத்தம் என்பதுபோல வடநாட்டார் எல்லாம் தமிழுக்கு விரோதிகள் அல்லர். விதிவிலக்காக வாய்த்திருக்கிறார் தருண் விஜய்.

நம்முடைய முன்னோடிகளும், தலைவர்களும் மொழியை ஏன் முன்1 (9)னிறுத்திப் போராடினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மொழி இருக்கும் நீளம் வரைக்கும்தான் நிலம் நமக்குச் சொந்தம். ஒரு காலத்தில் தமிழ்பேசும் நிலப்பரப்பு குமரி முனைக்குத் தெற்கே 700மைல் நீண்டிருந்ததாக அடியார்க்கு நல்லார் தெரிவிக்கிறார்.

‘வடவேங்கடம்’ வரைக்கும் நீண்டுகிடந்த தமிழ் நிலம் இன்று வெறும் 50,216 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டது. மொழியை இழந்தால் இருக்கும் சின்னப் பரப்பையும் இழந்து போவோம்.

இலங்கையில் இனம் அழிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மொழியும் நசுக்கப்பட்டால் தமிழர்கள் நிலம் – முகம் இரண்டையும் இழந்து போவார்கள்.

அதிகார மையங்களிலும் – கல்வி நிலையங்களிலும் – ஊடகங்களிலும் தமிழ் நிலை பெற்றால்தான் நாம் இருக்கும் நிலத்தை இழக்காமல் இருப்போம்.

இந்தத் தொலைநோக்குப் பார்வைக்குத் தோள்கொடுக்க வந்திருக்கும் தருண் விஜய் அவர்களைத் தமிழ் உலகம் பாராட்டுகிறது. அவரது கோரிக்கைகளுக்கு இந்தக் கூட்டம் கைதட்டிக் கைகொடுக்கிறது.

தெற்கே இருந்து வருவது தென்றல், வடக்கே இருந்து வருவது வாடை என்பார்கள். இன்று வடக்கே இருந்து தென்றலாய் வந்தவரை வாழ்த்துகிறோம்.” இவ்வாறு வைரமுத்து பேசினார்.