இசை வெளியிட்ட நிமிடம் முதல் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் உள்ள ‘இடம் பொருள் ஏவலி’ல் வைரமுத்து எழுதியுள்ள 6 பாடல் வரிகள் விவரம்

idam-porulஇசை வெளியிட்ட நிமிடம் முதல் ஐ-டியூன்ஸ் பாடல்கள் தரவிறக்கத்தில் “இடம் பொருள் ஏவல்” முதல் இடத்தில் உள்ளது.

‘யுவன்சங்கர் ராஜா,கவிஞர்  வைரமுத்து கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்த உலக தமிழ் சொந்தங்களுக்கு நன்றி  ‘என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில்   சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் வைரமுத்து எழுதியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ஆறு பாடல்களின் வரிகளையும் இங்கே வழங்கியுள்ளோம் .

பாடல்: 1

பல்லவி
அத்துவானக் காட்டுக்குத்
தப்பிவந்த ஆட்டுக்குத்
தாய் மடி அமைஞ்சதடா
கல்லிருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொண்ணு வாய்த்ததடா
ஊரோ உறவோ
வறண்டே கெடக்கு
உசுர நனைக்க
மழையும் இருக்கு
பெத்தவ இல்லையே
மத்தவ இல்லையா?
இவ சாமி சொல்லி வந்தவ

சரணம் 1
அவஎன்ன தாயா
நீயென்ன மகனா
அடடா பாசம் துளிர்விடுமே
கருங்கல்லு இடுக்கில்
காக்கை இட்ட எச்சத்தில்
ஆலமரமே வருமே!
தேசம்விட்டுப் போகும் போதும்
வானம் என்ன நீலம்தான்
பாசமுள்ள சேலையில் எல்லாம்
தாய்ப்பாலின் வாசந்தான்
பச்ச மொளகாயில்
பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ
சோத்துல வீசுதே

சரணம் 2
இடம்பொருள் ஏவல்
அமைவதைப் பொறுத்தே
உறவோ பிரிவோ ஏற்படுமே
யாருமற்ற காட்டில்
பேச்சுத்துணை யாரு
சிட்டுக்குருவி போதுமே
ஒத்தமரம் ஆகிப்போனா
இத்துப்போன பொம்பள
மகுந்துதான் பூத்துப்போனா
மகன்வந்த தெம்புல
நஞ்சுபோன வாழ்க்கை
சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும்
மழைக்குப் போதுமே

vairamuthu3

பாடல்: 2
பெண்        :   ஈரக் காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுக்குள்ள ஓர் கூத்து
மேகங்கொண்டு வான் சாத்து
ஆண்        :    மலங்காட்டு மயிலே
மச்சமுள்ள முயலே
முள்ளுமேல துணிகாயப் போடுற
தஞ்சம்வந்து கெடக்கேன்
தப்பிவந்து பொழைக்கேன்
தும்பத்துக்கு வாக்கப்படப் பாக்குற

பெண்        :    பாசத்த உள்ள வெச்சு – ஒரு
பாசாங்கு பண்ணாதீக
மண்ணுக்குள் நூக்கோல் போல – என்னக்

கண்ணுக்குள் மூடாதீக
ஆண்        :    மலையில் ஒதுங்கத் தானே – நான்
இரவில் பனியா வந்தேன்
பனியக் குடிக்கத்தானே – நீ
பகலில் வெயிலா வந்த

சரணம் 1
பெண்        :    செஞ்சுவச்ச கல்லானேன்
ஒன்னால
சேலகட்டும் பொண்ணானேன்
எஞ்சேல அழுக்காக்க வா
உள்கூடு வேர்வை பூக்க வா நீ வா

ஆண்        :    ஆம்பளைக்குச் சேலைகட்டி
வந்தாக்காப்
பொம்பளன்னு நம்பணுமா?

சொல்லாம வழிபாத்துப் போ    கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ!

பெண்        :    அட உசுர உள்வாங்கும் காத்துக்கு
என் கூந்தல் போர்வை ஆகுமே
ஆண்        :    ஆட்டுத் தோலு என்போர்வை ஆகலாம்

வெள்ளாடு போர்வை ஆகுமா?

பெண்        :    செல்லக் கருப்பா
என்ன கொழுப்பா
உண்மை சொல்லு…

சரணம் 2
ஆண்        :    உண்ணிப் பூச்சி எப்போதும்
காம்போட
ஒட்டிக்கிட்டாப் போகாது
என்னுசுர உறிஞ்சாதடி
எம்பொழப்பில் ஈரம் இல்ல போடி

பெண்        :    செக்குப்பட்ட எள்போலே
சும்மா நீ
நொக்குப் பெத்துப் போகாதே
எம்பேச்ச நீ கேளய்யா
எந்தோளில் தேமல் பாத்துப் போய்யா
ஆண்        :    ஒரு தலையே இல்லாத பூச்சிநான் – நீ
கிரீடம் சூட்டப் பாக்குற
பெண்        :    தன் தலைய மண்ணோடு மூடுற
தீக்கோழி போல ஏய்க்கிற
ஆண்        :    என்ன மடக்க
மார்பில் இடுக்கப்
பாக்குறியா ?

 

vairamuthu3

பாடல்: 3

பல்லவி

எந்தவழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்குத் தெசை இருக்கா?
எந்தச்சொந்தம் மாறுமோ
எந்தபந்தம் கூடுமோ
வாழ்வுக்குக் கணக்கிருக்கா?
கல்லுச்சாங் குருவி
முள்ளுக்குள் ஒறங்கும்
வெள்ளந்தி மனசு
துன்பத்தில் மயங்கும்
வேருக்கு மண்தொண
மண்ணுக்கு வேர்தொண
தனியாக ஏதும் வாழாது
சரணம் 1
வெளுத்தது பாலு
கறுத்தது காக்கா
இதுதான் இதுதான் ஏழமக்க
ஒருசொட்டுக் கண்ணீர்
உள்ளங்கையில் விழுந்தா
உசுர்தரும் பாவிமக்க
நேத்துவச்ச கூழுமட்டும்
சொத்துசொகம் ஆகுமே
அந்தக் கூழப் பகிர்ந்துகொள்ள
ஆளும் பேரும் தேடுமே
பாசக்கார சாதி
எங்க கூட்டமே
நேசம் காட்டுனா
நெஞ்சுல ஒட்டுமே

சரணம் 2

இத்துப்போன வாழ்க்கை
இஞ்சிப்போன உசுரு
ஒனக்கு நீயே பாரமப்பா!
ஒத்தையில கெடந்தா
நெத்திதொட்டுப் பாக்கத்
தொத்த உயிர் வேணுமப்பா
ரத்தபந்தம் பாத்திருந்தா
பத்துநூறு சொந்தந்தான்
சித்தபந்தம் கூடிவந்தா
சேந்ததெல்லாம் சொந்தந்தான்
சேலகட்டும் கூட்டம்
எல்லாம் தாயிதான்
சோறு போட்டவ
யாருமே சாமிதான்

vairamuthu3

பாடல்: 4

பல்லவி

பெண்        :    குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா!
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்?
இன்பத்துப்பால் சொல்லும் இளையவேந்தே!
பொருட்பாலை எப்போது காட்டுவாய்?
ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்காலக் காதல் உருவாகும்
ரேஷன் எழுதிய அட்டைகளில்
தற்காலக் காதல் உருவாகும்
நல்ல வேலி செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டு வா

ஆண்        :    குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்துப் பால் கொஞ்சம் படித்தபின்னே
பொருட்பாலை உன்னோடு யோசிப்பான்
ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்காலக் காதல் உருவாகும்
ரேஷன் எழுதிய அட்டைகளில்
தற்காலக் காதல் உருவாகும்
சிறு தாலி செய்த பின்னே
ஒரு வேலி நானும் நல்குவேன்

சரணம் 1
பெண்        :    சதை மோகம் என்னும் மேகம்
இரு கண்ணை மூடுமே!
பசி தாகம் வந்து காதை மூட
உண்மை தோணுமே!
ஆண்        :    இது அவ்வையாரின் கேள்வி
ஏன் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும் போது
அழகாய் வைகிறாய்
பெண்        :    இல்லறம் கொள்ள
வினைத்தொகையும் அளபெடையும் உதவாது
ஆண்        :    சத்தியமடி
தமிழ்நமக்கு உணவளிக்கும் தடையேது?
பெண்        :    பொய்யா? சொல்வது மெய்யா?
நம்ப வா… வா…

சரணம் 2
ஆண்        :    உன் மூளை கொண்டு பார்த்தால்
அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும் போது
நேசம் தோன்றுமே
பெண்        :    விழி மூடிக் கொண்டு காண
என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண
மூளை வேணுமே
ஆண்        :    கணிதமேதை
ராமானுஜம் பெத்தபொண்ணு நீதானா?
பெண்        :    கற்பனைபண்ணும்
மகாகவி கம்பன் மகன் நீதானா?
ஆண்        :    அம்மே! தமிழில் எம்மே(எம்.ஏ)
நம்பி வா… வா…

vairamuthu3

பாடல்: 5

பல்லவி

கொண்டாட்டமே – நம் வாழ்வே
கொண்டாட்டமே
துன்பங்களும் – நம் வாழ்வின்
முன்னேற்றமே

உன் கால்களின் கீழே
நதி நடக்கும்
உன் தாகத்தைக் கண்டு
விதி சிரிக்கும்

முன்னேறி வா – என் தோழா
முள்ளேறி வா
வென்றாட வா – உன் வாழ்வில்
நின்றாட வா

சரணம் 1
துளி எல்லாம் கடல் ஆவதில்லை
துளி இன்றிக் கடல் ஏதுமில்லை
வேர்வை எல்லாம் வெற்றிபெறவில்லை
வேர்வை இன்றி வெற்றி ஏதுமில்லை
நிலா மேலே கல்லை வீசிப்பார்
விண்மீன் ரெண்டு வந்து வீழலாம்
உன்
கடவுள் கண்திறக்க
உழைப்பே ஒற்றை வழி
தன்னை வென்றோன்
மண்ணை வென்றெடுப்பான்
முன்னேறி வா – என் தோழா
முள்ளேறி வா
வென்றாட வா – உன் வாழ்வில்
நின்றாட வா
சரணம் 2
இந்தி தமிழ் எதுசொன்ன போதும்
எல்லாக் காதும் கேட்பதுமில்லை
காசு மட்டும் முணுமுணுத்தாலோ
காது கேளா மனிதர்கள் இல்லை
கட்சி இல்லை நம்மை ஆள்வது
காசு பணம் தானே ஆளுது
உன்
காதல் வெற்றி கொள்ள
காந்தி நோட்டு வேணும்
காசு போட்டால்
லோகம் சுத்துமடா
முன்னேறி வா – என் தோழா
முள்ளேறி வா
வென்றாட வா – உன் வாழ்வில்
நின்றாட வா

vairamuthu3

பாடல்: 6

பல்லவி

ஆண்        :    வையம்பட்டி
வாளக்குட்டி
தப்பாட்டம் ஆடு வேஷங்கட்டி
பாட்டுக்கட்டி
நீ ஆடுனா
மேகங்க போடும் ஆலங்கட்டி

பெண்        :    மலைமேல ஒழப்பு
பள்ளத்தில் பொழப்பு
மலஜாதி முன்னேறுமா?
குழு        :    முன்னேறுமா?

ஆண்        :    பணக்காரக் கரண்டி
மலையெல்லாம் சுரண்டி
வனம்காடு பழுதாச்சம்மா
குழு        :    பலகாலமா

பெண்        :    மலைக்குப் போயி மொட்டை போடு
மலைக்கே மொட்டை போட வேண்டாம்
மலையும் மரமும் நம்ம சாமி
கொண்டாடுங்க
குழு        :    கூத்தாடுங்க

சரணம் 1
பெண்        :    தாய்மாமன் காத்து தாய்ப்பால் ஊத்து
உசுரு பொழைக்க இதுபோதும்
மும்மாரி கூட மோசம் செஞ்சாலும்
கையே எதிர்காலம்
ஆண்        :    தேகத்தில் வலுவுண்டு மானே – இங்கே
தினையோடு சாப்பாடு தேனே
பெண்        :    மேகத்தின் போர்வைக்குக் கீழே – நாங்க
காதல் செய்வோம்
களவும் செய்வோம்
ஆண்        :    புல்லோடு தூங்கும் பனித்துளி சேர்த்து
சூரிய ஒளியில் கோர்ப்போமே
சந்தோசம் உண்டு சாதிக இல்ல
சமுத்துவம் காண்போமே

சரணம் 2

ஆண்        :    தென்னாட்டு தாகம் தீர்க்கும் தெய்வம்
மேற்குத் தொடர்ச்சி மலைதானே
மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே
வாழ்ந்த மலைதானே
பெண்        :    பறவைகளின் எச்சம்தான் காடு – எங்க
பண்பாட்டில் காடேதான் வீடு
ஆண்        :    மரமொன்று மலைமேலே சாஞ்சா – நாங்க
தூக்கம் கெட்டுத்
துக்கம் கேட்போம்
பெண்        :    தன்வீட்டு மேலே தீவைக்கும் மனுசா
நம்மோட காட்டை அழிக்காதே
பேராசை புடிச்ச பேய்மனக்காரா
தாய்முலை அறுக்காதே