யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி!

உண்மையான நட்பைப் போற்றுவதில், பொக்கிஷமாகப் பாதுகாப்பதில் பெயர் பெற்ற நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.

கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் வெளியாகவிருக்கும் விருமன் உள்ளிட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்திருப்பவர் யுவன். அவருக்கு இந்த விலையுயர்ந்த பரிசை தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், அந்தப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் கார்த்தி.

விருமன் படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா விரைவில் தொடங்கவுள்ளார், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 அன்று விருமன் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே, விருமானுக்காக யுவன் இசையமைத்து சித் ஸ்ரீராம் பாடிய கஞ்சா பூவு கண்ணால பாடலின் அழகான முன்னோட்டம், சுமார் 3.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று இன்னும் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விருமன் தவிர, இன்னும் இரண்டு திரைப்படங்கள் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வன் மற்றும் மித்ரன் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லரான சர்தார் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சர்தார் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்கவுள்ளது.