’ராஜாவுக்கு செக்’விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) நீண்ட நேரம் தூங்கும் வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

மகள் மேல்படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல தயாராகிறார். வெளிநாட்டிற்குச் செல்லும் முன்பு 10 நாட்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குகிறார் சேரன். மறுநாள் வெளிநாட்டிற்கு புறப்படவுள்ள நிலையில் மகள் கடத்தப்படுகிறார். ஒரு கட்டத்தில் மகளை கடத்தியது யார் என்று சேரனுக்குத் தெரிகிறது.அதிர்ச்சி அடைகிறார். ஆள் தெரிந்தாலும், எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது சேரனுக்குத் தெரியவில்லை.

கடத்தல்காரர்கள் சேரன் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி தகவல் தொடர்பு சாதனங்களை வைத்துக் கொண்டு கிடுக்கிப்பிடி சூழலை உருவாக்குகிறார்கள்.இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எல்லாமும் தாண்டி அவர் தன் மகளை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

மனைவியை பிரிந்ததாலோ என்னவோ பாட்டிலும் கையுமாக இருக்கிறார்.

அப்பா, மகள் பாசக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சேரனின் நடிப்பு அருமை.ஒரு பெண்ணைப் பெற்ற தந்தையாக அவர் படும் பாடும் அவரது மனப் போராட்டங்களும் நடிப்பில் காட்டி நடிப்பில் பலபடிகள் மேலேறி நிற்கிறார். அப்போது படத்தில் தெரிவது சேரன் அல்ல பெண்ணைப் பெற்ற ஓர் தந்தை என்று உணர வைக்கிறார்.நீண்ட நேரம் சேரன் மட்டுமே தோன்றும் காட்சியில் அவரது தவிப்பும் போராட்டங்களும் உணர்ச்சிகளும் அட டா. நடிப்பில் புதிய எல்லையையே தொட்டு ஒன் மேன் ஆர்மியாக ஸ்கோர் செய்துள்ளார்.

ஸ்ருஷ்டி டாங்கே சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். இர்பான் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படியே தொடர்ந்தால் வில்லனாக ஒரு பெரிய ரவுண்டு வரலாம்.

படம் தொடங்கியதும் மெல்ல நகர்கிறது.போகப்போக டாப் கியரில் பறக்க ஆரம்பிக்கிறது.கிளைமாக்ஸ் நெருங்க, நெருங்க புலிப் பாய்ச்சலில் வேகமெடுக்கிறது. அந்தளவுக்குத் திரைக்கதையை சுவாரசியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சாய் ராஜ்குமார். படத்தில் வரும் பெண்கள் படும் துன்பங்களை காட்டும் பயங்கரமான காட்சிகளைப் பார்த்து பெற்றோர்கள் விழிப்பு அடைவார்கள். அறிவியல் முன்னேற்றம் நவீன தொழில்நுட்ப வசதிகள் என்று மகிழ்ச்சி அடைய கூடிய இந்தகாலகட்டத்தில் அதன் அபாய முகத்தை படத்தில் காட்டியுள்ளார் இயக்குநர். படத்தை இளைஞர்கள் ,பெற்றோர்கள் இருதரப்பாருமே பார்க்கலாம். பார்க்க வேண்டும்.

பார்க்கலாம்.