ரெயின்ட்ராப்ஸ் அனுசரித்த உலக பசித்தவர்கள் தினம் !

rain112உலக பசித்தவர்கள் தினத்தன்று ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் பசித்த ஏழை மக்களுக்கு வாகனம் மூலம் இலவசமாக உணவு, இளநீர் மற்றும் கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது.

உலக பசித்தவர்கள் தினம் என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பியிருக்கத் தேவையில்லை. மக்கள் ஒவ்வொருவரும் சமூகத்தை நோக்கி தங்கள் பங்களிப்பை அளித்தால் பசித்தவர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
raindrops4ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

ரெயின்ட்ராப்ஸ், ஆசிப் பிரியாணி மற்றும் நெச்சுரல்ஸ் சலூன் இணைந்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிப் பிரியாணி உணவகத்தில் இருந்து வாகனம் புறப்பட்டது. பிரபல சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட், நெச்சுரல்ஸ் சலூன் நிர்வாக இயக்குநர்கள் சி கே குமரவேல், வீனா குமரவேல், ஆசிப் உணவக நிர்வாக இயக்குநர் அஹ்மத் ஆகியோர் கொடியசைத்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சாலையோரங்களில் பசித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியது.

ரெயின்ட்ராப்ஸ் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது இது முதல் முறையல்ல. விருந்தாளி என்ற திட்டத்தின் மூலம் வாரந்தோறும் வாகனம் மூலம் சாலையோர மக்களின் பசியை தீர்த்து வருகிறது. உலக பசித்தவர்கள் தினத்தை முன்னிட்டு இம்முறை அதிக அளவிலான மக்களுக்கு உதவும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வருடம் வெயிலின் தாக்கத்தை குறைக்க உணவுடன் இளநீர் மற்றும் கேழ்விரகு கூழ் வழங்கப்பட்டது என்றார்  ரெயின்ட்ராப்ஸ்  நிறுவனர்  அரவிந்த் ஜெயபால்.

ரெயின்ட்ராப்ஸ் ஆர்வலர்கள், சீர்ஸ் கேர்ள்ஸ் ஹோம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு  விநியோகிப்பதில் உதவி புரிந்தனர்.