லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தின் ஆதரவு பாண்டவர் அணிக்குத்தான் !

ssrrலட்சிய நடிகர்  எஸ் .எஸ்.ஆர் அவர்களின் குடும்ப பத்திரிக்கையாளர்  சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில்  எஸ்.எஸ்.ஆர்.இளங்கோவன் , எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் , எஸ்.எஸ்.ஆர். கலைவாணன் , எஸ்.ஆர். செல்வராஜ் , எஸ்.ஆர். பங்கஜ் குமார் , எஸ்.ஆர்.விக்னேஷ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் , எஸ்.எஸ்.ஆர்.இராஜேந்திர குமார்  பேசியது , எஸ்.எஸ்.ஆர் அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அனைவரும் சேர்ந்து எங்கள் தந்தைக்கு ‘ நினைவஞ்சலி விழா’  ஒன்றை வருகிற அக்டோபர் மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை நடத்தவுள்ளோம்.அதன்  பிறகு வருகிற அக்டோபர் 24ஆம் தேதி மதுரைக்கு பக்கத்தில் உள்ள சேடப்பட்டியில் வைத்து நடைபெறவுள்ளது.
என்னுடைய மகனாகிய பங்கஜ் குமார் நடிகர் சங்கத்தில் கடந்த 7 வருடங்களாக உறுப்பினராக உள்ளார். அவர் தற்போது பாண்டவர் அணி சார்பாக தீவிரமாக நடிகர் சங்க தேர்தலில் ஈடுபட்டுவருகிறார். நாங்கள் எங்கள் தந்தையான எஸ்.எஸ் .ஆர் அவர்களுக்கு இந்த விழாவை நடத்துவுள்ளதை பாண்டவர் அணியினர் என்னுடைய மகனான பங்கஜ் குமார் அவர்கள் மூலமாக தெரிந்து கொண்டு இந்த விழாவை முன்னின்று நடத்த தயாராக இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
பாண்டவர் அணியினர் இந்த விழாவை காமராஜர் அரங்கத்தில் வைத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறியதால் அங்கே வைத்து நடத்த முடிவு செய்தோம். நடிகர் விஷால் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் வெளியூரில் பிரச்சார வேலையில் இருந்தும் எங்களிடம் ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வேலைகள் எப்படி நடைபெறுகிறது என்று விசாரித்து வருகிறார்கள்.
காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் எங்கள் தந்தை திரு. எஸ்.எஸ்.ஆர் அவர்களின் திருவுருவ சிலை திறக்கப்படவுள்ளது. நான் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையேறி பேசினேன். என்னை  ராதிகா அம்மா ‘ நடிகர் சங்கத்தில் உறுப்பினாராக இல்லாதவர்கள் மேடை ஏறி பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்’. நான் யாரோ இல்லை , லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் மகன். என்னுடைய தந்தை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்ததால் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேரவில்லை. நானும் சில படங்களில் நடித்துள்ளேன். நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் அரசியலில் ஈடுபட்டு வந்ததால் என்னுடைய தந்தை என்னை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டாம் சேர்ந்தால் மிகப்பெரிய அரசியல் உண்டாகும் என்று கூறினார்.
நடிகவேள் அவர்களின் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய பாரம்பரியம் இருக்கிறதோ அவ்வளவு பெரிய பாரம்பரியம் எங்களுடைய குடும்பத்துக்கும் இருக்கிறது. ராதிகா அவர்களுக்கு 10 வயது இருக்கும் போதே எனக்கு அவரை தெரியும். அவர் பல முறை எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடைய தாயாரும் என்னுடையும் தாயாரும் நெருங்கிய தோழிகள். என்னை யாரென்று தெரியவில்லை என்று கூறிய அவர் , அவருடைய  தாயாரிடம் சென்று என்னை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் .
பாரம்பரியம் மிக்க எங்கள் குடும்பத்தில் நடிகர் விஷால் பிளவு உண்டாக்கிவிட்டார் என்று கூறுவது மிகப்பெரிய தவறு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தான் இந்த விழாவை நடத்துகிறோம். எங்கள் குடும்பத்தை பற்றி அவர் அப்படி கூறியது மிகப்பெரிய தவறு.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் எங்கள் தந்தை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்  ஒற்றுமையாக இருந்து தான் இந்த நடிகர் சங்கத்தை துவக்கினார்கள். பின்னர் நடிகர் சங்கத்துக்கு கட்டிடத்தை புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் எங்கள் தந்தை ஆகியோர் முயன்று, நிதி திரட்டி கட்டினர்.
நாங்கள் பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருக்கிறோம் , எங்களுக்கு அவர்களை பிடித்திருக்கிறது . அது எங்களுடைய தனிப்பட்ட விருப்பம். எஸ்.எஸ் .ஆர் கண்ணன் அவர்கள் சரத் குமார் அவர்கள் அணியில் போட்டியிடுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதே போல் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் எல்லோருக்கும் பொதுவானவர் அவருக்கு யார்வேண்டுமானாலும் விழா எடுக்கலாம். நாங்கள் அவருடைய பிள்ளைகள் அவருக்கு விழா நடத்த எங்களுக்கு தான் இருக்கிறது. நாங்கள் நடத்தும் விழாவில் அவரும் எங்களோடு சேர்ந்து பங்கேற்கலாம்.
விழாவிற்கு நாங்கள் நடிகர் பிரபு அவர்களையும் அவருடைய குடும்பத்தினரையும் இன்று காலை சந்தித்து அழைப்புவிடுத்து வந்தோம். அதே போல் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட இன்னும் பல நடிகர்களை அழைக்கவுள்ளோம். இவ்விழாவில் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் மீது மரியாதை கொண்ட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று கூறினார்.