வட சென்னை மக்களின் கதையைச் சொல்லும் ‘வாண்டு’

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘வாண்டு’,

புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் ‘தெறி’ வில்லன் சாய் தீனா, ‘தடையறத் தாக்க’ வில்லன் மகா காந்தி, ‘மெட்ராஸ்’ புகழ் ரமா, ஆகியோர் நடித்துள்ளனர்.

ரமேஷ் & V.மகேந்திரனின் ஒளிப்பதிவில், A.R.நேசனின் இசையில், பிரியனின் படத் தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜனின் வரிகளில், அறிமுக இயக்குநர் வாசன் ஷாஜியின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை, சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில்  நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி மற்றும்  நடிகரும், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு இருவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் டிரெய்லரை இயக்குநர் சமுத்திரக்கனி வெளியிட நடிகர் கஞ்சா கருப்பு பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். வாசன் ஷாஜியும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது கடின உழைப்பால் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். வடசென்னை மக்கள்தான் இம்மண்ணின் மைந்தர்கள். இப்படத்தின் டிரெய்லர் பார்க்கும்போது ‘கோலி சோடா’ படம்தான் என் நினைவுக்கு வருகிறது” என்றார்.

நாயகி ஷிகா பேசும்போது, “நிஜமாக என்னைச் சேரிப் பெண்ணாகவே மாற்றிவிட்டார் இயக்குநர் வாசன் ஷாஜி. ஒரு சேரியில் வசிக்கும் பெண் எப்படி பேச வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் என்று ஒவ்வொன்றையும் இயக்குநர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். இப்படத்தில் நடிப்பதற்கு எனது அப்பா உறுதுணையாக இருந்தார். மேலும், சென்னைக்குப் புதிதாக வந்ததால் மதி அண்ணா தன் குடும்பத்தில் ஒருவராக என்னைப் பார்த்துக் கொண்டார். பணத்திற்காக அல்லாமல் இப்படம் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கோடு அனைவரும் பணியாற்றியிருக்கிறார்கள்…” என்றார்.

நடிகை பாக்யஸ்ரீ பேசுகையில், “இரவு பகல் பாராமல் வடசென்னையில் படப்பிடிப்பு நடத்தினார் இயக்குநர். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் வாசன் ஷாஜிக்கு மிக்க நன்றி. இப்படத்தில் நடித்து விட்டு வீட்டிற்குச் சென்றால் வடசென்னை பாஷைதான் சட்டென்று வரும். அந்த அளவுக்கு இந்தப் படம் என்னைப் பாதித்திருந்தது..” என்றார்.

நடிகர் சாய் தீனா பேசுகையில், “ஒரு தடாகத்தில் மீன் எப்படி தானும் உண்டு குளத்தையும் சுத்தம் செய்கிறதோ அதைப் போல வட சென்னை மக்கள் தன்னுடைய தேவைகளை அங்கேயே பூர்த்தி செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். நானும் அங்குதான் வசிக்கிறேன். நாளைய வாழ்க்கையைப் பற்றிக் கவலையில்லாத மக்கள். அந்த மக்களை கௌரவிக்கும்விதமான கதை, திரைக்கதையில் இந்த ‘வாண்டு’ படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் வாசன் ஷாஜிக்கு நன்றி…” என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசும்போது, “மற்ற படங்களில் பாடல்கள் எழுதுவதைவிட, நெருங்கிய நண்பன் படத்திற்கு பாடல்கள் எழுதுவது ஒரு அலாதி இன்பம். தண்ணீரால் மூன்றாம் உலகப் போர் வருமோ வராதோ தெரியாது. ஆனால் குப்பையால் நிச்சயம் மூன்றாம் உலகப் போர் நிகழும். அந்த அளவிற்கு நாட்டில் குப்பைகள் பெருகி வருகின்றன…” என்றார்.

நடிகர் அபி சரவணன் பேசும்போது, “நான் சிகப்பாக இருக்கும் காரணத்தால் இப்படத்தின் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முறையாக நிறத்திற்காக பட வாய்ப்பு தவறியதற்காக பெரிதும் வருந்துகிறேன்…” என்றார்.

பாடகர் கானா பாலா பேசுகையில், “இந்தப் படம் மிகவும் கடினமான படம். குப்பை மேட்டில் 1 மணி நேரம் நின்றாலே அடுத்த 10-15 நாட்களுக்கு அந்த நாற்றம் நம்மைவிட்டுப் போகாது. ஆனால், அந்த இடத்தில்தான் பாடல் காட்சியை இவர்கள் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக வட சென்னை சார்பாக படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘அரசாங்கத்தின் தூய்மை இந்தியாவுக்காக’ என்கிற பாடலை இந்தப் படத்திற்காக நான் பாடியிருக்கிறேன்..” என்றார்.

நடிகர் கஞ்சா கருப்பு பேசும்போது, “இயக்குநர் வாசன் ஷாஜி என்னுடைய நண்பர். கடந்த 10 வருடங்களாக எனக்கு அவரை நன்கு தெரியும். நான் ஆரம்ப காலத்தில் சினிமா வாய்ப்பு கேட்டு ஏதாவது ஆபீஸுக்கு போனால், அந்த ஆபீஸ் பக்கத்திலோ அல்லது டீக்கடையிலோ நின்றிருப்பார். ‘என்னண்ணே இந்தப் பக்கம்?’ன்னு கேட்டால், ‘சும்மாதான் வந்தேன் தலைவரே..’ என்பார். அன்று முதல் இன்றுவரை அவர் ஓடி கொண்டுதான் இருக்கிறார். கடின உழைப்பு என்றும் வீண் போகாது. உங்கள் படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்…” என்று வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.நேசன் பேசும்போது, “இந்தப் படத்திற்காக வட சென்னையில் 6 மாத காலம் தங்கியிருந்து அந்தப் பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழி, வாழ்க்கை முறைகள் என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் கவனித்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் மோகன்ராஜ் எழுதியிருக்கிறார். கானா பாலா பாடியிருக்கிறார். வழக்கமாக சேரி என்றால் குத்துப் பாட்டுதான் இருக்கும். ஆனால், அப்படியில்லாமல் அங்கு வெஸ்டர்ன் பாடல் போடச் சொன்னார்கள்.

நான் இசையமைத்துக் கொடுத்த உடனேயே அதைக் கேட்ட மோகன்ராஜ், இரண்டு மணி நேரத்திலேயே பாடல் எழுதிக் கொடுத்தார். வட சென்னையில் இப்போது உள்ள நிலைமையை அப்படியே தனது பாடல் வரிகளில் பதிவு செய்திருக்கிறார் பாடலாசிரியர் மோகன்ராஜ்…” என்றார்.

மேலும், பாலு மதி மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள். இறுதியாக, இயக்குநர் வாசன் ஷாஜி அனைவருக்கும் நன்றி கூறினார்.