‘வாய்தா’ விமர்சனம்

சட்டம் ஒரு இருட்டறை ,அதில் வக்கீலின் வாதம் தான் விளக்கு என்றார் அண்ணா. ஏழைகள் சட்டத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள்? சட்டம் அவர்களை எப்படி நடத்துகிறது? அதிகாரவர்க்கத்தின் முன் அவர்கள் எப்படி அலைக்கழிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றித் துணிச்சலாகப் பேசியிருக்கும் படம்தான் ‘வாய்தா’.

ஓர் ஏழைச் சலவைத் தொழிலாளியான ராமசாமி மீது இருசக்கர வாகனம் மோதி, அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றிப் பூட்டி வைக்கிறார். விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமிடயிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறு தொகையை நஷ் ஈடாகத் தர முயல்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் முக்கியபுள்ளி. போலீஸ் வந்து ராம்சாமியை மிரட்டுகிறது. படிப்படியாக மோதல் முற்றி விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அங்கே பல மாதங்களாக வழக்கு வாய்தா வாங்குவதிலேயே இழுத்தடித்துக்கொண்டு போய்விட, உதவி செய்யும் வக்கீலும் பணத்தைக் கேட்கிறார். முதலில் உதவி செய்ய வரும் அரசியல்வாதியும் இந்த முதியவருக்கு எதிராகத் திரும்புகிறார். தனியே அந்த முதியவர் வழக்கை எதிர்கொள்கிறார். இறுதியில் அந்த சலலைத் தொழிலாளிக்கு நீதியும் கிடைத்ததா? இழப்பீடு வாங்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு சிறிய சம்பவத்தைக் கருவாக்கி,அதில் எவ்வளவு சாதி, அதிகார அரசியல் நடக்கிறது என்பதை அலசியிருக்கிறார் இயக்குநர் மகிவர்மன் சி.எஸ்.

இப்படத்தில் நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிலரைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்தான்.அவர்கள் தங்களால் முடிந்தளவு இயல்பாக நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்களை விட பின்னணி இசையில் படத்திற்குள் நம்மை ஒன்ற வைத்துள்ளார் இசையமைப்பாளர் லோகேஸ்வரன்.

ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.

சாதி ஆணவம், காதல், பிளவு, ஏழை மக்களின் வலி, இழைக்கப்படும் அநீதி, இழப்பீடு கிடைத்தாலும் அறியாமையால் இழக்கும் அபாயம், உயர் சாதியினரின் அடக்குமுறை, நியாயம் கிடைக்க வேண்டிய இடத்தில் எதிர்பாராதவிதமாக தீர்ப்பு கிடைப்பது என்று சமூக அக்கறையோடு கொடுத்திருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும்.

சாதாரணரின் வாழ்க்கையில் வழக்கை எதிர்கொள்ளும் வலியை சொல்லும் படமாக ’வாய்தா’ முடிகிறது ..