‘விக்ரம்’ வெற்றி தந்த நம்பிக்கை :இயக்குநர் ஹரி!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்த ’யானை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் அருண் விஜய், இயக்குநர் ஹரி, நடிகர் தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அருண் விஜய், “இந்தப் படத்தின் ப்ரொமோஷனுக்காக தமிழ் நாடு முழுவதும் சுற்றினோம். ரசிகர்களை நேரடியாக சென்று சந்தித்தது நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் அனைவரும் உண்மையான நேர்மையான உழைப்பை இப்படத்தில் போட்டுள்ளோம்.

நிச்சயம் இப்படம் உங்களை திருப்திப்படுத்தும். இப்படம் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம். ஜீவி.பிரகாஷ் அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளார். இப்படம் உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

மேலும் பேசிய இயக்குநர் ஹரி, ”ரசிகர்களை மரியாதை செய்யவே ஒவ்வொரு ஊருக்கும் சென்று அவர்களை சந்தித்தோம். ’விக்ரம்’ வெற்றியை பார்க்கும் போது சினிமா எப்போதும் ஸ்ட்ராங்கான ஒன்றுதான் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

தமிழ் இயக்குநர் எல்லாம் எதுவும் பண்ண மாட்டிங்களா..? என்ற கேள்விக்கு பதிலாக விக்ரம் படம் இருந்தது. உங்களது ஆதரவு என்றும் தேவை” என்றார்.