‘விக்ரம் வேதா’ விமர்சனம்

விக்கிரமாதித்தன்- வேதாளம் கதை சொல்வதை எல்லாம் தாத்தா பாட்டி சொல்லக்கேட்டு இருப்போம் . அதை திரை பாணியில் சொல்லமுடியுமா? அதில் வெற்றி பெற முடியுமா?  என்றால் முடியும் எனக்காட்டியுள்ள படம்தான் ‘விக்ரம் வேதா’ . 

விஜய் சேதுபதி- மாதவன் என்கிற வித்தியாச கூட்டணியினை வைத்து   ஓரம் போ, வா குவாட்டர் கட்டிங் படங்களுக்குப் பிறகு புஷ்கர் – காயத்ரி இயக்கியிருக்கும் படம் இது.

படத்தின் கதை என்ன? சென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா எனப்படும் விஜய் சேதுபதி. அவரை என்கவுண்டர் செய்து போட்டுத்தள்ள  வேண்டும் என்று காவல்துறையில் சிறப்புப் படை ஒன்று அமைக்கப்படுகிறது.

பிரேம் தலைமையிலான அந்த குழுவில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான மாதவனும் இருக்கிறார். விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்வதற்காக வேதாவை அந்தக் குழு தேடி வருகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் ஒன்று கிடைக்க, மாதவன் உள்ளிட்ட அந்த குழு சம்பவ இடத்திற்கு விரைகிறது. அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதில் குற்றவாளி இல்லாத அப்பாவியான ஒரு நபரையும் என்கவுண்டர் செய்து விடுகிறார்கள். மேலும் அந்த நபரைக் குற்றவாளி என்றும் போலீஸ் அறிக்கையில் கூறுகின்றனர். இதுஒருபுறம் இருக்க மாதவனுக்கு வழக்கறிஞரான ஷரத்தா ஸ்ரீநாத்துடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

ந்நிலையில், முதல் திட்டம் தோல்விக்குப்பின் மீண்டும் விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்த ரகசிய தகவல்  கிடைக்கிறது, இம் முறை விஜய் சேதுபதியை கட்டாயம் செய்துவிட வேண்டும் என்று பெரிய படையே செல்கிறது.  ஆனால் திருப்பமாக விஜய் சேதுபதி தானாகவே காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைகிறார்.

தானே தனி ஆளாக வந்து சரணடைந்த விஜய் சேதுபதியிடம் மாதவன் விசாரணை நடத்துகிறார். அப்போது, தனது வாழ்க்கையில் நடந்த அனுபவக்கதை ஒன்றைச் சொல்லும் விஜய் சேதுபதி, அதிலிருந்து ஒரு கேள்வி  கேட்கிறார்.

மாதவன் அந்தக் கேள்விக்கு பதில் சொன்ன உடனேயே, விஜய் சேதுபதிக்கு ஜாமீன் கிடைக்கிறது.அவர் வெளியே சென்றுவிடுகிறார். விஜய் சேதுபதியை ஷரத்தா ஸ்ரீநாத் தான் ஜாமீனில் எடுக்கிறார்.

எதிர்பாராத திருப்பமாக  பிரேம் கொலை செய்யப்படுகிறார். இதனிடையே மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பிரேமை கொலை செய்தது விஜய் சேதுபதி தான் என்று மாதவன், விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்ய தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்து அவரை கைதும் செய்கிறார்.

பின்னர் பிரேம் கொலை குறித்து விஜய் சேதுபதியிடம் மீண்டும் விசாரணை நடத்தும் மாதவனிடம், விஜய் சேதுபதி மீண்டும் ஒரு கதை சொல்லி ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

இவ்வாறாக வேதா(ளம்) எனப்படும் விஜய் சேதுபதி விக்ரம்(ஆதித்தன்) எனப்படும் மாதவனிடம் கதை சொல்லி, அதிலிருந்து கேள்வி கேட்டு, அதில் ஒரு புதிர் ஒன்றை வைக்கிறார். அந்த புதிருக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று தேடுகிறார் மாதவன் . பிறகு அதன் பின்னணியை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? அதில் என்ன உண்மை புதைந்துள்ளது? விஜய் சேதுபதி என்ன ஆனார்?  என்பதே படத்தின் மீதிக்கதை.

வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் விக்ரமாதித்தனாக நடித்திருக்கும் மாதவனின் கதாபாத்திரம் படத்திற்கே பாலம் ,பலம். தோற்றத்திலும் உடல் மொழியிலும் அசத்தியுள்ள மாதவனைத் தவிர இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யார் நடித்திருக்கமுடியுமா?  என்று கூறுமளவுக்கு ஒரு போலீசாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நேர்த்தியான நடிப்பால் காட்சிகள் ரசிக்கும்படி உளளன. இறுதிச் சுற்று படத்திற்குப் பிறகு மாதவன் முழு வீச்சுடன் வந்து மீண்டும் தனது ஸ்டைலை நிரூபித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி ஒரு அகலமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். வேதாளமாக புதிர் போட்டு அதற்குப் பதில் தேட வைக்கும் அவரது பாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது.  அவர் ஒரு ஒரு தாதாவாகவே வாழ்ந்திருக்கிறார்.  அவர் பேசும் யதார்த்த வசனங்களுக்கு நல்ல வரவேற்பு .

வழக்கறிஞராக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வரலட்சுமி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருவரது  நடிப்பும் ரசிக்கும்படி உள்ளன.

சென்னையை ஆட்டிப்படைக்கும் தாதாக்களுக்கும், அவர்களை ஒழிக்க நினைக்கும் போலீசுக்கும், அதனிடையே நடக்கும் புதிருக்கும் இடையே நடக்கும் பரபர கதையாக உருவாகி இருக்கிறது.

ஆறுஆண்டுகள்  இடைவெளிக்குப் பின் புஷ்கர் – காயத்ரியின் இருவரும்  திரைக்கதையை சிறப்பாக அமைத்து இயக்கியிருக்கிறார்கள். இரண்டு முரண்பட்ட முன்னணி நாயகர்களை ஒரே படத்தில் கையாளுவது என்பது சவால். அதேபோல் இருவருக்கும் சமன் செய்து கதாபாத்திர முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்துமே ரசிக்கும்படிஉள்ளன. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் படம் தனி நிறத்தில் மிளிர்கிறது.

விக்ரம் வேதா’ ரசிக்க வைக்கும் ரணகளம்.