விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடிக்க ஆசைப்படும் கேரளத்து புதுமுகம் மிர்துளா

mirdula4

தமிழ் சினிமாவின் வெற்றி பயணங்களுக்கு ஊன்றுகோலாக செயல்படுவது, கேரளாவில் இருந்து  உருவான கதாநாயகிகள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்த காலத்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த திருவாங்கூர் சகோதிரிகள் லலிதா, பத்மினி, ராகினி முதல் தற்போது அனைவரின் மனதையும் மெழுகு போல் கரைக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சிமா மோகன் வரை அனைவரும் உதயமானது கேரளாவில் இருந்து தான். அந்த வரிசையில், தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்  மிர்துளா.

பரதநாட்டியத்திலும், மாடலிங் துறையிலும் கை தேர்ந்தவரான மிர்துளா ஒரு சிறந்த தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆயால் நானல்ல’ என்னும் மலையாள படத்தில் பஹாத்தோடு ஜோடி சேர்ந்து நடித்த மிர்துளாவை வெகுவாக பாராட்டி உள்ளது  மலையாள சினிமா வட்டாரங்கள்.  தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே தொகுப்பாளராக இருந்த இவர், நடிப்பு தான் தனக்கு உலகம் என்கிறார். “என் சிறு வயதில் என்னிடம் நீ என்னவாக ஆக போகிறாய் என்று பல பேர் கேட்டதுண்டு. அவர்களுக்கு நான் அப்போது சொன்ன பதில், நடிகையாக வேண்டும் என்பது தான். அந்த நாட்களில் இருந்தே எனக்கு நடிப்பு என்னும் சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது.

கோலிவுட் கதாநாயகிகள் மேல் அவர்களின்  ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பையும் அவர்களை கொண்டாடும் தருணங்களையும் கண்டு நான் பல முறை வியந்ததுண்டு. எனவே இங்கு வெளியாகும் எல்லா தமிழ் படங்களையும் நான் தவறாமல் பார்த்துவிடுவேன். தற்போது தமிழ் படங்களில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் வித்தியாசமான நடிப்பும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை அம்சங்களும் என்னை பெரும் அளவில் கவர்ந்துள்ளது. எனக்கு நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருந்தால், அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையும்” என்கிறார் புதுமுக கதாநாயகி மிர்துளா. தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள இவர் கண்டிப்பாக வெற்றி பாதையை நோக்கி பயணிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.