வீரத்தமிழச்சிகள் நாங்கள் : பாஜக தமிழிசை பெருமிதம்!

பொன்னேரி, வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பினால், மண் பேசும் சரித்திரத்தைக் கண்முன்னே காட்டும் “வீரமங்கை வேலுநாச்சியார்” இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டப் பெண்ணரசியின் வாழ்க்கை வரலாற்று நாடகமானது.

சென்னை, ஹாரிங்டன் சாலையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் மையத்தின் டோபோவான் அரங்கத்தில் அறங்கேற்றப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாகக் கல்விச் சேவையுடன், பொதுச் சேவையும் புரிந்து மிகச் சிறந்த முன்மாதிரிப் பள்ளிகள், பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி நன்மதிப்பினைப் பெற்றுவரும் “வேலம்மாள் கல்விக்குழுமத்தின்” ஓர் அங்கமான பொன்னேரி, வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியைச் சார்ந்த 125 மாணவர்களின் கலையாற்றலை வீறுடன் வெளிப்படுத்தும் விதமாகவும், சமூக உணர்வை வளர்க்கும் விதமாகவும் நடைபெற்ற இந்நாடகத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.17,00,000/- (ரூபாய் பதினேழு லட்சம்) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நாடகத்திற்கு வேலம்மாள் கல்விக் குழுமத்தின் நிறுவனர் தலைவர் திரு. M.V.முத்துராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.
வேலம்மாள் கல்விக்குழுமத்தின் இயக்குநர் திரு M.V.M. சசிக்குமார் அவர்களும், பொன்னேரி வேலம்மாள் அறிவுப்பூங்காவின் கல்வித்துறை நிர்வாக இயக்குநர் திருமதி. கீதாஞ்சலி சசிக்குமார் அவர்களும் முன்னிலைப் பொறுப்பேற்று விழாவிற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும் முக்கியபிரமுகர்களையும் வரவேற்றனர்.

OVM டான்ஸ் அகாடெமியின் நிறுவனர் இயக்குநர் திரு. ஸ்ரீராம் சர்மா அவர்களும், அவரது துணைவியார் திருமதி மணிமேகலை சர்மா அவர்களும் மாணவர்களை ஒருங்கிணைத்து 1 1/2 மணிநேர நேரலை நாட்டிய நாடகமாக மிகப்பிரம்மாண்டமாக அமைத்து இருந்தனர்.

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை செளந்திரராஜன் ,பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் திருமதி வானதி சீனிவாசன் ,திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் திருமதி. தமிழச்சி தங்கப்பாண்டியன் , சவுமியா அன்புமணி , நடிகர் ராஜேஷ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

நாடக நிகழ்வை கண்டுகளித்த தமிழிசை சவுந்திரராஜன் மேடையில் பேசியபோது …..

”இந்த “வேலு நாச்சியார்” நாடகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது நிஜமான வேலு நாச்சியார் நம் கண்முன்னே வந்தது போன்ற எண்ணம்தான் வந்தது, அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.

இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட நமது வரலாறுகளை சொல்லிக்கொடுப்பதன் மூலமாகவும் , அவர்களின் உடல் மொழியின் வாயிலாக வரலாற்று பெருமைகளை உள்வாங்கி நடிப்பதன் மூலமாக நமது வரலாறுகளை மீட்டெடுக்கலாம். நமது தமிழ்சமூகத்தில் வாழ்ந்த வீரப்பெண்மணி வேலு நாச்சியார் அவர்களின் திறமையையும், வீரத்தையும் ,துணிச்சலையும் இந்த நவீன காலத்திற்கு எளிதாக கண்முன்னே நிகழ்த்திக்காட்டிய மாணவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாடக நிகழ்ச்சி மூலமாக கிடைக்கும் நிதியை அடையார் புற்று நோய் மையத்துக்கு வழங்கும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றிகள்.

மிகப்பிரமாண்டமாக , சிறப்பாக இந்த நாடக நிகழ்வை நடத்திய வேலம்மாள் போதி பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி கீதாஞ்சலி சசிக்குமார் அவர்களுக்கு எனது பாராடுக்கள் தொடர்ந்து இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை கலை வடிவமாக நீங்கள் நிகழ்த்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த மேடையில் திருமதி வானதி சீனிவாசனோடும், தமிழச்சி தங்கபாண்டியனோடும் வீரத்தமிழச்சிகளாக நிற்பது பெருமையாக உள்ளது ” என்றார்.