‘வீரையன்’ போன்ற படங்கள்தான் இன்றைய தேவை :இயக்குநர் சீனு ராமசாமி !

dir-seenuramasami-1

ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பரீத் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘வீரையன்’.

இந்தப் படத்தில் இனிகோ பிரபாகர் நாயகனாகவும், ஷைனி நாயகியாவும் நடித்திருக்கிறார்கள். மேலும், ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – S.N.அருணகிரி, ஒளிப்பதிவு – P.V.முருகேஷா, படத் தொகுப்பு – ராஜா, முகமது, பாடல்கள் – யுகபாரதி, நடனம் – சரவண ராஜா, சண்டைக் காட்சி – ராக் பிரபு, மக்கள் தொடர்பு – இரா. குமரேசன், எழுத்து-தயாரிப்பு-இயக்கம் – பரித்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

‘வீரையன்’ இசைத் தட்டை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம் மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ”முதலில் “வீரையன்” படத்தின் தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். ஏனெனில், இந்த மாதிரியான படங்கள்தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது. இந்த மாதிரியான படங்கள்தான் பல திறமையான கலைஞர்களை வழங்குவதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது என்று நான் சொல்வேன்.

 

எனவே இந்த மாதிரியான படங்களையும், கலைஞர்களையும் பத்திரிகை நண்பர்கள், மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். விண்ணில் பறக்க நினைக்கிற இந்த கலைஞர்களை உள்ளங்கையில் தாங்கி கைப்பிடித்து நடத்திச் செல்ல வேண்டும்.

நான் இங்கே வந்தது இனிகோ பிரபாகரன் என்கிற ஒற்றை மனிதனுக்காகத்தான். இனிகோ பிரபாகரன், தமிழ் சினிமாவில் இன்று இருக்கக் கூடிய முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருக்கும் நிகரான ஒரு கதாநாயகன். எனக்கும் இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது. கண்டிப்பாக அது நடக்கும். காலம் அந்த வாய்ப்பை வழங்கும்…” என்றார்.

 

இயக்குநர் சற்குணம் பேசுகையில், “திறமைகள் பல இருந்தும் தன்னடக்கத்தோடு பேசிய இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அருணகிரிக்கு என் அன்பான வாழ்த்துகள். ‘வீரையன்’ பாடல்கள் யதார்த்தமாக இருக்கிறது. பாடலாசிரியர்கள் யுகபாரதி, கார்த்திக் நேத்தாவிற்கும் வாழ்த்துகள்.

இந்தப் படத்தின் இயக்குநரான பரீத், என் முதல் படமான ‘களவாணி’ படத்தின் தயாரிப்பாளர் நசீர் சாரின் மச்சானாக எனக்கு அறிமுகமானவர். ‘களவாணி’ படம் முழுவதும் என்னுடன் நிர்வாக தயாரிப்பளராக பணியாற்றினார். மிகுந்த ரசனைக்காரர். இந்த கதையை என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறார். சொன்னது போலவே எடுத்திருக்கிறார்.

உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிகப் பெரிய கலைஞர்கள் யாரென்றால் சொந்தக் காசில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களும், சொந்தக் காசில் படம் எடுக்கிற கதாநாயகர்களும்தான். வீரையன் படத்தின் இயக்குநர் பரீத், படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரும் இந்த படமும் மிகப் பெரிய வெற்றியினை பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசுகையில், “இனிகோ பிரபாகரன் என் இனிய நண்பர். இனிகோ, என்னிடம் பேசும்போது, ‘சுந்தரபாண்டியன்’ படம்தான் எனக்கு மிகப் பெரிய அடையாளம்’ என்று சொல்வார். ஆனால், இனிமேல் இனிகோ பிரபாகரனுக்கு அடையாளமாக, இந்த ‘வீரையன்’ படம்தான் இருக்கப் போகிறது.” என்றார்.