வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்!

vishal-hlpஇருட்டாக இருக்கிறதே என சபிப்பதை விட ஒரு சின்ன மெழுகுவர்த்தி ஏற்றுவது மேலானது.அந்தவகையில் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் செய்து வருகிறார்கள்.சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள்  பல வகைநில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் ‘மருது’ படப்பிடிப்பில் இருந்த விஷாலும் ஐதராபாத்தில் ‘தோழா’ படப்பிடிப்பில் இருந்த கார்த்தியும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி ‘ரெஸ்க்யூ சென்னை குரூப்’ என்ற பெயரில் புதிய ‘வாட்ஸ்-அப்’ குரூப்பை உருவாக்கினர்.

இந்த குரூப்பில் நடிகர்கள் நாசர், எஸ்.வி.சேகர், ராஜேஷ், விக்ரம் பிரபு, அதர்வா, அருள் நிதி, பொன்வண்ணன், மனோபாலா, உதயநிதி, கருணாஸ், சாந்தனு, ஜூனியர் பாலையா, ரமணா, நந்தா, உதயா, ஸ்ரீமன், பூச்சிமுருகன், பாடகர் கிரிஷ், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, குட்டிபத்மினி, லலிதாகுமாரி, சோனா, கோவைசரளா, சங்கீதா உள்பட பலர் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் உணவு, துணிமணிகள், பால் பவுடர்கள் போர்வைகள் போன்றவை சேகரிக்கப்பட்டன.

திருப்பூரில் இருந்தும் பல நிறுவனங்கள் மூலமாக துணிமணிகளை வரவழைத்தார்கள். சென்னையில் காலை சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு உணவுகளையும் தயார் செய்தார்கள். இவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. விஷால் வடசென்னை பகுதியில் முகாமிட்டு இவற்றை நேரில் வழங்கி வருகிறார். கார்த்தி, கே.கே.நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, பகுதிகளில் வினியோகித்து வருகிறார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினரும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இது தொடர்பாக நடிகர் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் விடுத்துள்ள அறிக்கை !
வெள்ள நிவாரண நிதிக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஹைதராபாத்தில் இருந்தும் பல்வேறு நிவாரண பொருட்கள்  வந்து கொண்டு இருக்கிறது.  வடசென்னை , கடலூர் , முடிச்சூர் ஆகியவை தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி. உங்களால் முடிந்த உதவியை இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறேன். உங்களால் முடிந்த அளவிற்கு  இப்போது அதிகம் தேவைப்படும் பொருட்களான பால் பவுடர் , சானீட்டேரி நாப்கின் , குடிநீர் , போர்வை ஆகியவற்றை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து உதவலாம். இவை தான் அப்பகுதி மக்களுக்கு முக்கிய தேவை. உணவு பொருட்கள் தேவையான அளவிற்கு அப்பகுதி மக்களுக்கு தேவையான அளவிற்கு தற்போது கிடைத்து வருகிறது.
karthi-hlpநடிகர் மற்றும் குறிப்பிட்டவர்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று இல்லை.இப்போது உதவி வரும் மக்கள் மற்றும் இளைஞர்கள் போல் மக்கள் ஒவ்வொருவரும்  முன்வந்து நிச்சயம் உதவ வேண்டும். நாங்கள் லேடி ஆண்டாள் பள்ளியை மையப் பகுதியாக கொண்டு இயங்கி வருகிறோம்.எல்லா பொருட்களும் இங்கே இருந்து வருகிறது , இங்கே இருந்து தான் மற்ற இடங்களுக்கும் செல்கிறது . ஆதலால் உங்களிடம் எந்த பொருட்கள் இருந்தால் லேடி ஆண்டாள் பள்ளிக்கு தாங்கள் அனுப்பி வைக்காலம். நாங்கள் “ரெஸ்க்யு சென்னை”  என்ற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம். எனவே அனைவரும் உடனே முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றனர் நடிகர் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர்.
 நடிகர் விஷால் , கார்த்தி மற்றும் குழுவினர் இன்று மாலை கடலூரில் பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு  சென்று நிவாரண பணிகளை மேற்கொள்கின்றனர்.