‘வேலைக்காரன்’  விமர்சனம்

கலகலப்பான ஜாலி பாதையில் இது வரை பயணம் செய்து வந்த  சிவகார்த்திகேயன், காமெடி பாதையிலிருந்து கருத்து சொல்லியிருக்கும் பாதைக்குப் பயணப்பட்டிருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’

இது வரை ரீமேக் ஸ்பெஷலிஸ்டாக இருந்த மோகன் ராஜா சொந்தமாக சிந்தித்து எடுத்துள்ள படம் இது.

பல கொடிய பழக்கங்களால் இளைஞர் சமுதாயம் அழிவை நோக்கி செல்கிறது. நமது அடுத்த சந்ததியான சிறுவர்களுக்கு நாமே விஷம் கொடுத்து வருகிறோம், என்கிற கருத்தை உரக்க சொல்லியிருப்பது தான் ‘வேலைக்காரன்’. 

சென்னை குடிசைப்பகுதியில் வசிக்கும் இளைஞன் சிவகார்த்திகேயன். அடி தடி, வெட்டு குத்து என்று  வன்முறை பாதையில் செல்பவர்களாக இருக்கும் தனது பகுதி மக்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.,  நல்ல வேலைக்கு அனுப்பி அவர்களை நல்வழிப்படுத்தி  வேண்டும் என்றும் நினைக்கிறார்.  

அதற்காக, தனது பகுதிக்கு என்று எப்.எம் ரேடியோ ஒன்றைத் தொடங்குகிறார்.

 அதன் மூலம், அனைவரிடமும் பேசி, தனது  பகுதி மக்களை திருத்த முயல்கிறார்.  ரவுடியான பிரகாஷ்ராஜ் இதை எதிர்க்கிறார். ரேடியோவை மூடிவிட்டு வேலைக்கு போக முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், சேல்ஸ்மேன் வேலையில் சேருகிறார். 

மார்கெட்டிங் என்றால் என்ன?, அதன்  தந்திரங்கள் ,நுணுக்கங்கள் என்ன? போன்றவற்றைத் தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகாரியான பகத் பாசிலிடம் கற்றுக் கொள்கிறார். கற்ற  

 தனது திறமையை நிரூபிக்க களத்தில் இறங்குகிறார்., அப்போது தான், தான் விற்கும் பொருளில் நஞ்சு இருப்பதை தெரிந்து கொள்கிறார்.

தனது நிறுவனப் பொருட்களில் மட்டும் அல்ல, பல நிறுவனங்கள் விற்கும் உணவு பொருட்களில் பல  நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் சேர்க்கப்படுவதோடு, அவை விளம்பரங்கள் மூலம்  மக்களிடம் திணிக்கப்படுவதையும்  அறிந்து கொள்கிறார். இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற சிவகார்த்திகேயன் முயல்கிறார். அப்படி அவர் , மேற்கொள்ளும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை. 

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்  போராட்டத்தை வித்தியாசமான முறையில் நடத்தியிருக்கும் இயக்குநர் மோகன் ராஜா, பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

காமெடியின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன், சமூக விழிப்புணர்வு   கருத்தைச் சொல்லும்  நாயகனாகியுள்ளார். அதனால் புது  நாயகனாக  வலம் வந்திருக்கிறார். 

படத்தின் விளம்பர பலத்திற்கு  மட்டுமே கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நயனதாரா, கதைக்காக சிறிது அளவுகூட பயன்படுத்தப்படவில்லை. சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் வில்லன் பகத் பாசில் நடிப்பில்   செய்திருக்கிறார். 

அனிருத்தின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருப்பதைச்சொல்லவேணடும். 

 சென்னை குடிசைப் பகுதியை நம் கண் முன் நிறுத்தும்  கலை இயக்குநர்முத்துராஜுக்கு  பாராட்டுகள்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இப்படி ஒரு பிரம்மாண்டமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் மோகன் ராஜா, நல்லதை நல்லபடியாக சொன்னால் போதும் என்று நினைத்து மசாலாத்தனத்தை தவிர்த்திருக்கிறார். சிவகார்த்திகேயனால் இப்படிப்பட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்.

நல்ல விஷயத்தை சொல்லும் இயக்குநர் மோகன் ராஜா அதை இடைவேளைக்கு பிறகே, தான் சொல்ல வந்ததை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்.  படம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதை பரபரப்பான காட்சிகளோடு சொல்லாமல், வசனங்கள் மூலமாகவே சொல்லியிருப்பது ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது.  பல வசனங்கள் அனல் தெறிப்பதோடு மக்களை யோசிக்க வைப்பவை என்பதையும் ஒப்புக்கொண்டு பாராட்ட வேண்டும். 

சிவகார்த்திகேயனை வித்தியாசமாக காட்டியிருப்பது,சில மசாலா ரசிகர்களுக்குச்  சலிப்பூட்டலாம். ஆனால் சொல்லப்பட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கது.

மொத்தத்தில்,  அனைவருக்குமான ஒரு தரமான படமாக இந்த ‘வேலைக்காரன்’ படத்தை இயக்குநர் மோகன் ராஜா கொடுத்திருக்கிறார்.