ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா!

 
 நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார்.
 
இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார். இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார். அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்ற இயக்குநர்களின் கைகளில் தன்னை ஒப்படைத்ததற்காகவும் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்’’ என்றனர். 
 
படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த தன் தாயாரை அங்கு பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக அறிமுகப்படுத்தினார் ஸ்ருதிஹாசன். அதன்பின் தன் தாயாரின் எண்ணத்தை நன்றாக உணர்ந்திருந்த ஸ்ருதி, படத்தில் தான் ஏற்றிருக்கும் கேரக்டரைப் பற்றியும், இயக்குநர் தன்னிடம் வேலை வாங்கும் நுட்பத்தையும் அழகாக சரிகாவிடம் விவரித்தார். தன் மகளின் நேர்த்தியான விளக்கத்தைக் கேட்ட  சரிகா, படபிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தார். படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தன்னை உற்சாகப்படுத்தியதற்காக நடிகை ஸ்ருதியும் சந்தோஷத்துடனேயே வலம் வந்தார்.