50 பேர் இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை”

முதல் முறையாக 50 பேர்  இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை”

பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “நெடுநல்வாடை”.

”  மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்தான் “நெடுநல்வாடை”. நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது.

மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிழக்குச் சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற கிராமத்துப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் நிச்சயம் இடம்பெறும்.

இந்தப்படத்தை, என்னுடன் நெல்லை, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த என் நண்பர்கள் 50 பேர் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை பிடித்துப் போய் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதிக்கொடுத்தது கூடுதல் பலம்.
வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங்கைக் கவனிக்க, ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இசைவெளியீடு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது” என்கிறார் இந்தப்படத்தை எழுதி இயக்கும் செல்வகண்ணன்.