தேர்தல் ஆணையத்திடம் நடிகர் சங்கம் கோரிக்கை!

ponvannan-ecதென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது !!

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் 1000 க்கும்
மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம் என்பது திருவிழா காலங்களில் மட்டுமே நடத்தப்படும். அதற்கான சூழல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். அக்காலகட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் தான் வருடம் முழுவதும் குடும்பம் நடத்த வேண்டும். நவீன பொழுதுபோக்கு சாதனங்களால் நாடகம் துறை அழிந்து வருகின்ற இந்த காலகட்டத்தில் அதையே நம்பி வாழும் நாடகக் கலைஞர்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.ஆனால் கடந்த பொது தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால் இக்கால கட்டமான மூன்று மாதங்களும் எங்கள் நாடக கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வித் தொகை கட்ட கூட முடியாமல் போகிறது.

எனவே இதை தாங்கள் பரிசீலித்து இந்த காலகட்டத்தில் நாடகம் நடத்துவதற்கு சிறப்பு அனுமதி வழங்கி உதவிடவேண்டும் என்றும் ,
அதற்காக தேர்தல் ஆணையம் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் நடப்பார்கள்”. என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .

ec-nsதலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் துணை தலைவர் .பொன்வண்ணன் கூறியதாவது..

புதிய அணி பொறுப்பேற்றயுடன் , ஏற்கெனவே நாடக நடிகர்கள் வைத்த கோரிக்கையை மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக்கொண்டு , கடந்தமுறை தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்தித்தபோது இதை அவர்களிடம் ஒரு கோரிக்கையாகவே முன் வைத்தோம் .அப்போது நாடக நடிகர்களுக்கு எங்கள் அரசாங்கம் எப்போதும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறது.தேர்தல் காலகட்டத்தில் நாடக நடிகர்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை உள்ளதென்றால் அதை கோரிக்கையாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விண்ணப்பம் கொடுங்கள் என்று அம்மா அவர்கள் ஒரு வழிகாட்டுதலை சொன்னார்கள் .

அதன் அடிப்படையில் இன்று தேர்தல் அதிகாரி திரு.ராஜேஷ் லங்கோனி.IAS அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனுவை கொடுத்தோம் , அதற்கு தேர்தல் அதிகாரி  அவர்கள் ,தேர்தல் காலங்களில் சுதந்திரமாக மக்கள் செயல்படுவதற்கு சட்டப்படி எந்த தடையுமில்லை. நான் இது பற்றி விசாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்  மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார் . மேலும் முறைப்படி அவர்கள் முழு சுதந்திரமாக நாடகம் நடத்த வழிமுறை செய்கிறேன் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளார்.

எங்களுக்கு அது மிக சந்தோசமாக உள்ளது .அந்த காலக்கட்டத்தில் எங்களது நாடக நடிகர்கள் கட்சி ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நாடகங்கள் போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை . அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்க நாடக கலைஞர்களிடம் அறிவுறுத்துவோம். அத்தோடு தேர்தல் அதிகாரி எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்தலில் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடிகர்களின் வீடியோ பதிவை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் . இது போன்ற பொது மக்களினுடைய பணியில் எங்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இருப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். இந்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளோம்.  என்று கூறினார்.