’83’ விமர்சனம்

நடிகர் ரன்வீர் சிங்,நடிகை தீபிகா படுகோனே,இயக்குநர் கபீர் கான்,
இசையமைப்பாளர் பிரிதம், ஓளிப்பதிவாளர் அசிம் மிஷ்ரா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் உலகக் கோப்பை வென்ற வரலாற்றின் பின்னணியில் உருவாகியிருக்கும் கதை.

கபில்தேவ் (ரன்வீர் சிங்) தலைமையிலான அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து செல்கிறது. அங்கு, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறிவிடும் அபாய நிலை. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் செல்கிறது.

இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன் இந்திய அணி பல ஏளனங்களை,அவமானங்களைச் சந்திக்க நேரிடுகிறது. இதைக் கடந்து இறுதியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி எப்படி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இதுவரை கிரிக்கெட் வீரர்கள் களத்தில் விளையாடியதைப் பார்த்திருக்கிறோம். இப்படி ஏராளமான காட்சிகளை ரசிகர்கள் கண்டுள்ளார்கள். ஆனால் விளையாடுவதற்கும் முன்பின் விளையாடுபவர்களின் மன உணர்வுகளின் படப்பிடிப்பை இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்கள்.அந்தப் பின்புல உணர்வுகள் திரைக்குப் புதிது.

கபில்தேவ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரன்வீர் சிங். உடல் மொழி, விளையாட்டு, சோகம், அவமானம் என தன் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளர்கள் கேட்கும் போது நாங்க ஜெயிப்போம் என்று கூறும்போதும், பேருந்தில் டீம் மீட்டிங் நடத்தும் போதும், வெற்றி பெற்றும் மற்றவர்கள் அதை பெரியதாகப் பார்க்காத போதும், ரன்வீர் சிங்கின் முகபாவனைகள் ரசிகர்களை கவர்கிறது. செயல்தான் சிறந்த சொல் என்று நிரூபித்த கபில் தேவின் பாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது.

ரன்வீர் சிங்கின் மனைவியாக வரும் தீபிகா படுகோனே, ஊக்குவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆளும் அழகு நடிப்பும் அழகு. சிறிது நேரமே வந்தாலும் ரசிக்கும்படி அவரது கதாபாத்திரம் உள்ளது. மற்ற வீரர்களாக வருபவர்கள் அனைவரும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நம்மூர் ஜீவா,படத்தில் காமெடியன் இல்லாத குறையைப் போக்கி இருக்கிறார். அந்த வாய்ச் சவடால் பேசும் ஸ்ரீகாந்தின் பாத்திரம் சிறப்பாக வந்துள்ளது.

1983 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கபீர் கான். அன்று
தரையில் எழுதப்பட்ட கிரிக்கெட் வரலாற்றை திரையில் எழுதியுள்ளார்கள்.

கிரிக்கெட் வீர்களின் கனவாகக் கருதப்பட்டும் லார்ட்ஸ் மைதானத்திற்குள் இந்திய அணி அனுமதி மறுக்கப்படும் போது, 35 வருடங்களுக்கு முன்பு சுதந்திரம் கிடைச்சுது, ஆனால் இன்னும் மரியாதை கிடைக்கவில்லை என்ற வசனம் கேட்கும்போது பார்ப்பவர்களைப் பரிதாப்பட வைக்கிறது. அதுபோல், ரன்வீர் சிங் சிக்ஸ் அடிக்கும்போது வெளியில் இருந்து கபில்தேவ் பிடிப்பது, தன் விளையாட்டை அமர்நாத் ரசிப்பது மற்றும் திட்டுவது ஆகிய காட்சிகள் ரசிக்க வைக்கும்படி உள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களைப் போலவே இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததற்கு இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவைப் பாராட்டலாம்.

பல காட்சிகள் பார்க்கும்போது நாம் இந்தியர் என்ற உணர்வைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 83 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்களை திரைப்படத்தோடு காட்சிப் படுத்தியது சிறப்பு.நாம் கிரிக்கெட் களத்தில் அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது படம்.

அசிம் மிஷ்ராவின் ஒளிப்பதிவும், ஜூலியஸ் பக்கியத்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. பிரிதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

மொத்தத்தில் ‘83’திரையில் ஓர் உணர்ச்சிகர வரலாறு.

.