‘பாரத் யாத்ரா’ பிரச்சார நிகழ்வு : நடிகர் ஜெயராம் பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’ பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் சென்டர் ‘Social Inclusion of Persons with Disabilities’ என்ற விழிப்புணர்வுப் பயணப் பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது. 

இந்த நிகழ்வின் தொடக்க விழா செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்த முயற்சியின் பின்னணியில் இயங்கும் ஒட்டுமொத்த குழுவினரையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம் அக்டோபர்6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர்3, 2024 அன்று புதுதில்லியில் நிறைவடையும்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் தலைமை தாங்க, அவருடன் கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர், அனூப், நந்தகோவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில், தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் சென்டரின் சிறப்பு சிறுவர்களின் நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன், மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது.