அன்பைப் பற்றி அதிகம் பேசுகிற படம் ‘மெய்யழகன்’டைரக்டர் ச.பிரேம்குமார்

’96 ‘திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ச. பிரேம்குமார், கார்த்தியை வைத்து 2டி நிறுவனத்திற்கு இயக்கும் படம் ‘மெய்யழகன்’ . இப்படம் படம் பற்றி அவர் இங்கே பேசுகிறார்!

”மதம் – சித்தாந்தம் இதன் ஒவ்வொரு உணர்வுக்கும் அடிப்படையான அன்பைப் பற்றி அதிகம் பேசுகிற படம். இவ்வுலகில் வெறுப்பு என்பது பழகி போன ஒன்றாகி விட்டது. மிதமான அன்பையே அழுத்தி சொல்லியாக வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். அன்பாக இருக்கிறவர் பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள்..! எல்லா உணர்ச்சிகளுக்கும் தாயுணர்வு அன்புதான். அன்பாக இருப்பது எவ்வளவு அழகான விஷயம்னு சொல்றதுதான் இந்த மெய்யழகன்.

என்னை பாதித்த விஷயம் தான் இந்த ஸ்கிரிப்ட். இதை ஒரு வாழ்க்கையாகத்தான் பார்க்கிறேன். வாழ்க்கை தான், நாம் யோசிக்கவே முடியாத சினிமா. இலக்கியமும் சினிமாவும் தான் மனிதனை அன்பால் தொடுகிறது. சினிமாவின் மொழி எப்பவும் எளிமையானது. இன்னும் நம் கண்ணுக்கு கட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்த மெய்யழகன்.

இங்கே காதலும் வீரமும் இருக்கத்தான் செய்கிறது, அன்பு என்பது இல்லாது போகும் காலகட்டத்தில் இருக்கோம். ஆனால் அன்பே உருவாக இருக்கக்கூடியவர்களும் இருக்காங்க. எனக்காகவும் உங்களுக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவங்களால் முடிந்த அன்பை காட்டுவதால் தான் இந்த உலகம் இன்னும் உயர்ந்திருக்கு. சிலரால் அன்பு செலுத்தாமல் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. அப்படி எல்லோராலும் இருக்க முடிந்தால் இங்கே குற்றங்களும் குழப்பங்களும் அன்பால் குறையும்.

என்னுடைய ‘96’ படம் காதல் படம் இல்லை. அதுவும் அன்பை போதிப்பது தான். அதில் ரொமான்ஸ் கிடையாது. அன்போட முதல் புள்ளியாக 96ஐ வைத்துக் கொண்டால் ‘மெய்யழகன்’ இரண்டாவது புள்ளி. மக்கள் வெறுப்புக்கு பழகிட்டாங்க. எல்லோரையும் சேர்த்தே சொல்றேன். அன்பை நயமா கலைநயமா நுண்ணறிவோட சொல்ல முடிந்தால் நல்லதுன்னு நினைச்சேன். நாமளும் அன்பை விதைக்கிறதுக்கான முயற்சி தான் என் முதல் வேலை. மத்ததெல்லாம் அப்புறம்தான். அப்படி ஒரு நல்ல முயற்சியாக மெய்யழகன் இருக்கும்.

கொரோனா சமயத்தில் மூன்று கதை எழுதி வைச்சிருந்தேன். ஒரு சிறுகதையும் எழுதினேன். அதை படித்த இயக்குநர் நண்பர்கள் சிலர், கதை நல்லா இருக்குன்னு சொல்ல அதையே நாவலாக எழுத உட்கார்ந்தேன். இதில் ஒரு பகுதி தான் 96. நாவலாக வெளியிடுவதற்கு முன்னாடி ஒரு தடவை விஜய் சேதுபதி கிட்டே படிக்க கொடுத்தேன். சேது படிச்சிட்டு கொண்டாட ஆரம்பிச்சிட்டார். சபையாக கூடி எல்லோர்கிட்டேயும் வாசித்து காட்டி கண்கலங்கி கட்டிப்பிடித்து கொஞ்சினார். என்னோட ரைட்டிங் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்தான் என்னை டைரக்டர் ஆக்கினார். பிறகு புத்தகமாக போடலாம் முதலில் படமாக பண்ணுங்கன்னு சொன்னார். 96 ஷூட்டிங்கின் போது, இந்தக் கதையை நான் பண்ணலைனா வேறு யார் பண்ணலாம்னு சேது கேட்டார். நான் சொன்ன ஒரே பெயர் கார்த்தி. எனது இந்த நாவலை படித்துவிட்டு எப்படிங்க இப்படி ஒரு கதையை எழுதினீங்க என கேட்டார், கார்த்தி.
எனக்கு பெருமூச்சு வந்தது. பிறகு சூர்யா சாரை பார்த்ததும் 2D மூலமாகவே ‘மெய்யழகன்’ ஆரம்பமானது.

தஞ்சாவூர் நீடாமங்கலத்தில் நடக்கிற கதை. இரண்டு பேருக்கு இடையில் நடக்கிற உரையாடல் மனமாற்றம் தான் படம். படத்தில் முக்கியமாக இரண்டே கேரக்டர்கள். கார்த்தி, அரவிந்த்சாமி. கார்த்தி மனதில் இந்தக் கதை நல்லபடியாக இறங்கியிருக்கிறது. அவருக்கு அன்பே உருவான கேரக்டர். அவரால் கோபத்தைக் கூட அன்பால்தான் காட்ட முடியும். வருத்தத்தை கூட அன்பு கலந்து தான் சொல்ல முடியும். இதில் வெறுப்புக்கு இடமே இருக்காது. சிலரிடம் குழந்தைத்தனம் மாறாமல் பரிசுத்தமாக இருப்பாங்க. ஒரு சீனை படிச்சிட்டு நன்றாக நடிப்பது வேறு. அதன் சாரத்தையும் பிடித்து விட்டால் வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை.

அரவிந்த்சாமி வந்து நின்னாலே கம்பீரம் ஆளுமை வேணுங்கிற மாதிரி ஒரு இடத்தில் வரணும். ரொம்பவும் பேசாத வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து மீள முடியாமல் அமைதியானவர். உள்ளுக்குள்ளே பெரிய அன்பிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தனக்குள்ளே தன்னை அடக்கிக் கொண்ட கேரக்டர். யாரையும் அதிகம் நம்பாமல் நம்மையே நாம் பார்த்துக்கணும்னு நினைக்கிறவர் அரவிந்த்சாமி. ஒரு இழப்பின் காரணமாக இப்படி மாறியிருப்பார். அவர் அழகு, நிறம், ஆளுமை மட்டுமில்லை அவர்கிட்டே பேராண்மையும் சேர்ந்திருக்கும். அது அவருக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். ஃபேமிலியில் ஒரு மூத்த அண்ணன் மாதிரி இருந்தார்.

ராஜ்கிரண், அரவிந்த்சாமியோட தாய் மாமன். கார்த்திக்கு பெரியப்பா. ரொம்ப சென்டிமென்ட் ரோல். அவரோடு காமெடியான ரோலும் இணைஞ்சிருக்கு.

தேவதர்ஷினி அரவிந்த்சாமியின் ஜோடி. அவங்களோட பெஸ்ட் ரோல் இது. கிட்டத்தட்ட ஒரு ஹீரோயின் இடம் இருக்கு. கார்த்திக்கு இணை ஸ்ரீதிவ்யா. வெள்ளந்தியான கணவனை விட்டுத் தராமல் அவனை அப்படியே ஏத்துக்கிற மனைவி. கருணாகரன் ஒரே ஒரு சீனில் கண்டக்டர் ரோலில் வருவார். கதையின் திருப்பமே அங்கேயிருந்து தான் ஆரம்பிக்கும். ஜே.பி சார் அரவிந்த்சாமியின் அப்பாவாக நடிச்சிருக்கார்.

மேலும், சுவாதி கொண்டே, ஶ்ரீரஞ்சனி, இளவரசு, சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி,
ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கேமரா மகேந்திரன் ஜெயராஜூ.
படத்தின் இன்னும் அசல் முகம் வேண்டி லைவ் சவுண்ட்தான் படத்தில் உபயோகப்படுத்தியிருக்கோம்.
கோவிந்த வசந்தாவின் மியூசிக் இதில் ஊர் விருந்து மாதிரியிருக்கும். அப்படியே மனதை தட்டி தூக்கிட்டார். கதை சூழல் தெரியாமல் கேட்டவங்க கூட அழுதாங்க. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.

‘மெய்யழகன்’ – உங்கள் சொந்த ஊரை ஞாபகப்படுத்துவான். நாம் பேச வேண்டாம்ன்னு நினைச்சவங்க கிட்ட மன்னிப்பு கேட்க தோணும். படத்த பார்த்துட்டு  உங்ககிட்டே இருக்கிற அன்பு வெளிப்படும்”