அறிமுக நாயகன் ஆதவன் கதை கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதை கதாநாயகியாக நடித்துள்ளார்.ஜாக்குலின், லிடியா,சார்லஸ் வினோத், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் , உமர் பாரூக், காமன் மேன் கணேஷ், ஜெகத்ராமன், அபிமன்யு மீனா, வினோ நடுவன், இமைராஜ் குமார், ராம்போ விமல், சிதம்பரம் நடித்துள்ளனர்.
இப்படத்தை தமிழ் தயாளன் எழுதி இயக்கியுள்ளார்.இசை : பாலசுப்பிரமணியன் ஜி- சா.ராஜாரவிவர்மா,
ஒளிப்பதிவு : ஜெகன் ஜெயசூர்யா ,படத்தொகுப்பு : ஹரி குமரன், சண்டைப் பயிற்சி : டான் அசோக்
வசனம் : ராசி தங்கதுரை – கிருபாகரன் ஏசய்யா, ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா தயாரித்துள்ளனர்.ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.இப்படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
கொடைக்கானல் பகுதியில் கீழே உள்ள ஊர் வெள்ளக் கெவி.அந்த மலைவாழ் கிராமத்தில் திருமணமாகி உள்ள மலையனும் மந்தாரையும் தங்களது அனைத்து குறைகளையும் கவலைகளையும் அன்பால் நிரப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மந்தாரை கர்ப்பமாக இருக்கிறாள். அவள் குழந்தையைப் பற்றி ஆயிரம் கனவு, கற்பனைகளுடன் இருக்கிறாள். இந்த சூழ்நிலையில் அங்கே மலைச் சரிவில் ஐந்து பேர் இறந்து விடுகிறார்கள். மருத்துவமனை வசதி இல்லாததால் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் மேலே ஏழு கிலோமீட்டர் செல்ல வேண்டும்.மருத்துவ வசதி எட்டாததால் மரித்துப் போகிறார்கள். அந்த நேரத்தில் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் மலையன் கேள்வி கேட்க அது விவாதம் ஆகி மோதலில் முடிகிறது. இதனால் மலையனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழிவாங்கத் துடிக்கிறார்.மனைவி பிரசவ காலத்தில் இருந்து கொண்டிருப்பதால் தனது மைத்துனர் வாங்கி வந்த சீர்வரிசைப் பொருள்களை எடுப்பதற்காக சந்தைக்குச் செல்கிறான் மலையன் . வரும் வழியில் பழிவாங்கத் துடிக்கும் போலீஸ் கும்பல் அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்து போய் அடித்து உதைத்து சித்திரவதை செய்கிறது.
இதற்கிடையில் பிரசவத்திற்கு குறித்த நாட்களுக்கு முன்பே மந்தாரைக்கு வயிற்று வலி வருகிறது. துடியாய்த் துடிக்கிறாள். அவளைக் காப்பாற்ற ஊரே அல்லோகலப்படுகிறது. இந்த நேரத்தில் மலையன் பகைவர்களிடம் சிக்கிக் கொண்டு அடி வாங்கிக் கொண்டிருக்கிறான்.ஊரே திரண்டு வந்தாரையை மருத்துவமனை நோக்கி டோலி மூலம் தூக்கிச் செல்கிறது.மருத்துவர்களை வரச் சொன்னாலோ அவர்கள் இவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் அவளுக்கு குழந்தை பிறந்ததா? மலையனுக்கு என்ன ஆயிற்று? அவன் மனைவியைச் சந்தித்தானா?போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதே 132.35 நிமிடங்கள் கொண்ட ‘கெவி’ படத்தின் மீதிக் கதை.
படம் தொடங்கியதும் மலைவாழ் கிராம மக்கள் எப்படி மலைப்பகுதியில் சென்று தங்கினார்கள் என்பதற்கான வரலாறு சொல்லப்படுகிறது.அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலுக்குப் பயந்த மக்கள் மறை பிரதேசமாக மலைப்பகுதிக்குச் சென்ற பூர்வக் கதை கூறப்படுகிறது.
படத்தின் கதாநாயகன் ஆதவன் அறிமுக நாயகன் என்றாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அசத்தியுள்ளார். மனைவியிடம் காதலையும் பாசத்தையும் பொழியும் போதும் உரிமைக்காக அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பும் போதும் சண்டைக் காட்சிகளில் ஆவேசமாகப் பொங்கி எழும்போதும் இறுதியில் தனது பிள்ளையைப் பார்க்க தவிக்கும்போதும் என பல்வேறு நடிப்புத் தருணங்களை அழகாக பயன்படுத்திக் கொண்டு வெளிப்படுத்தி உள்ளார்.
மந்தாரையாக நடித்திருக்கும் ஷீலா ஏற்கனவே பல படங்களில் தனது நடிப்பை நிரூபித்தவர்.
இந்தப் படத்தில் அந்த மந்தாரை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். கணவரிடம் உரிமையாய் காதலாய் பேசும்போதும் குழந்தைக் கனவில் மிதக்கும் போதும் அச்சு அசலாக உணர்வுகளைக் கடத்துகிறார். பிரசவத்திற்கான அதன் உச்சகட்ட வலியினை முகத்தில் காட்டியும் படம் பார்ப்போர் அனைவரையும் கவலையிலும் கண்ணீரிலும் ஆழ்த்தி விடுகிறார். படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஊரே சுமந்து சென்றாலும் ஒரு கட்டத்தில் படத்தைக் கைப்பற்றி அவர் தானே சுமந்து செல்கிறார் .அந்த அளவிற்கு படத்தில் அவரது நடிப்பு ஆக்கிரமித்துள்ளது.
ஷீலாவின் தம்பி கடுக்காயாக நடித்துள்ள விவேக் மோகன் நல்ல குணச்சித்திர நடிப்பை வழங்கி உள்ளார். குணச்சித்திரத்தில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.போலீஸ் நரசிம்மனாக நடித்த சார்லஸ் வினோத் வில்லத்தனத்தை இயல்பாகக் காட்டியுள்ளார்.
பிற துணைப் பாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் அந்தந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து திரைப்படத்தைப் பலப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெய சூர்யா மலை முகடுகளிலும் அகடுகளிலும் புகுந்து கொடைக்கானல் பகுதியின் பள்ளம் மேடுகள் என்று நம்மை கால் வலிக்க அழைத்துச் செல்கிறார்.
மருத்துவமனையை நோக்கிய அந்த கால்நடை பயணம் இரவில் நடக்கிறது.அந்தக் காட்சிகளில் குறைந்த வெளிச்சத்தில் எடுத்து இருப்பது சவாலானது. அதைச் சரியாகச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்.அந்த போலீஸ்காரர்கள் மலையனைத் துரத்தி தாக்கும் காட்சிகளும் தீப்பந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கேயும் ஒளிப்பதிவாளர் தனது கைவரிசையைக் காட்டி அசத்தியுள்ளார் .
படத்திற்கு இசையமைத்துள்ள பாலசுப்பிரமணியன் ஜி- சா.ராஜாரவிவர்மா என இரண்டு இசையமைப்பாளர்களும் பாடல்களிலும் பின்னணி இசையிலும் அவர்களது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் பாடல்கள் மிளிர்ந்து ஒளிர்கின்றன.’மாமலையே எங்கள் மலைச்சாமியே’, ‘ஒரு வார்த்தை பேசிடாமல்’ எனப் பாடல்கள் இதயத்தின் அடியாழம் சென்று இறங்குகின்றன.
படத்தை தொய்வின்றித் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஹரி குமரன் .சினிமாத்தனம் இல்லாமல் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார் டான் அசோக்.ராசி தங்கதுரை – கிருபாகரன் ஏசய்யா எழுதி இருக்கும் வசனங்கள் இயல்பு மீறாதவை;பாத்திரங்களின் குணச்சித்திர கோடுக் தாண்டாதவை.
கொடைக்கானல் போன்ற மலைவாழிடங்களுக்குச் செல்லும் போது ஒரு சுற்றுலா தளமாகச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடுகிறோம். அங்கே வாழும் மக்கள் வாழ்க்கையைப் பற்றி நாம் கண்டு கொள்ளாமல் வந்துவிடுகிறோம்.அப்படி மலை வாழ் பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து வசதி இல்லாததால் ஒரு உயிரின் அடிப்படைத் தேவையான பிரசவத்தை கூட எவ்வளவு பெரிய அபாய சுழலில் எதிர்கொள்கிறார்கள் என்பதை இப்படத்தில் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்கள். 
மலைவாழ் கிராம மக்களின் இயல்பாக நடக்க வேண்டிய பிரசவத்திற்கான மருத்துவமனைப் பயணம் பெரும் பாடாக மாறி உள்ளதையும் அதற்காக எவ்வளவு ஆபத்தான சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் மிகச் சரியாக கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கூறியுள்ளார் இயக்குநர்.கதை, காட்சிகள் ஊடாக சமகால அரசியலையும் பேசி குரலற்றவர்களின் குரலை உலக சமுதாயத்திற்கு முன் ஒலிக்க விட்டுள்ளார் இயக்குநர் .
அடிக்கடி வந்து போகும் கேளிக்கைப் படங்கள் நடுவே இம் மாதிரியான படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன .இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் வாழ்க்கையைக் கண் முன் நிறுத்துவதோடு நல்ல திரை அனுபவத்தையும் தருகிறது.


