‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் முப்பெரும் விழா !

71 ஆண்டு பாரம்பரியத்துடன் இயங்கி வரும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் தீபாவளி மலர் வெளியீட்டு விழா … ஆகிய முப்பெரும் விழா, சென்னை, ‘பிரசாத் லேப்’ திரையரங்கில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர்கள் ‘மக்கள் குரல்’ ராம்ஜி, ‘டி.சி’ அனுபமா சுப்ரமணியம் , மூத்த பத்திரிகை புகைப்பட கலைஞர் ‘தேர்ட் ஐ’ பிரகாஷ்… மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா, நடிகர் செளந்தரராஜா , நடிகர் தங்கதுரை , நடிகர் ‘டீசல்’ மோரி …ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் ., இந்த சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் , பொருளாளர் ஏ.மரிய சேவியர் ஆகியோரது தலைமையின் கீழ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசியதோடு, தமிழ் சினிமாவின் மூத்த நிருபர்களால் தொடங்கப்பட்ட இந்த சங்கத்திற்கு புதிய இரத்தத்தை பாய்ச்சி, புத்துயிர் வழங்கி திறம்பட செயல்பட்டு வரும் அனைத்து நிர்வாகிகளையும் , செயற்குழு உறுப்பினர்களையும் பாராட்டினார்கள்.

மேலும், அக்காலத்தில் சுமார் 15- க்கும் மேற்பட்ட நிருபர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஊடகத்துறையின் அதீத வளர்ச்சியால் இன்று நிருபர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களின் முழுமையான பின்னணியை ஒருவருக்கொருவர் அறியாத சூழல் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றி, ஒவ்வொரு நிருபரின் பின்னணியையும் அவரது சிறப்புகளையும் சேகரித்து, அதை ஆவணப்படுத்த வேண்டும் …. என்ற கோரிக்கையை மூத்த பத்திரிகையாளர் ‘மக்கள் குரல்’ ராம்ஜி முன் வைத்தார்.

அதே மாதிரி பிரபல நடிகரும் இயக்குநருமான ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா பேசும்போது ., “தற்போது ,சினிமா விமர்சகர்களாக பலரும் களம் இறங்கியுள்ளனர் அவர்கள் இங்கிருக்கும் இந்த சங்கத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் போல் நாசுக்காக ., அந்த படம் சம்பந்தப்பட்டவரோ , செய்தி சம்பந்தப்பட்டவரோ …. படித்தாலும் , கேட்டாலும் அவரது மனசு வலிக்காதபடி விமர்சனம் செய்ய பழக வேண்டும். அந்த மாதிரி விமர்சனம் எழுதும் அல்லது பேசும் பண்பை இங்கிருக்கும் பத்திரிகையாளர்களும் ., சப்ஸ்கிரைப்பர்ஸுக்காக , லைக்குகளுக்காக .. புதிதாக விமர்சனம் செய்பவர்களைப் பார்த்து கைவிட்டு விடக்கூடாது… தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் !” என்று வலியுறுத்தினார்.

நடிகர் ‘பழைய ஜோக்’ தங்கதுரை , சில காமெடிகளையும் இறுதியாக ஒரு பாடலையும் மேடையில் பாடி , அந்த அவையை கலகலப்பாக்கினார்.

மேடையில் விழாவிற்கு வந்திருந்த திரை மற்றும் பத்திரிகை பிரபலங்களுடன் ‘சினிமா பத்திரிகையாளர் சங்க’ முக்கிய நிர்வாகிகளான தலைவர் , செயலாளர் , பொருளாளர் … மூவருடன் கெளரவதலைவர் ‘கலைமாமணி’ நெல்லை சுந்தர்ராஜன் , துணைத்தலைவர் ‘கலைமாமணி’ மணவை பொன்மாணிக்கம் உள்ளிட்டவர்களும் வந்து விழாவினை சிறப்பித்தனர்.

‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளிமலர் – 2025’ புத்தகத்தை சிறப்பு விருந்தினர் நடிகர் ,இயக்குநர் சரவண சுப்பையா வெளியிட .,  சிறப்பு விருந்தினர்களான நடிகர் சௌந்தர்ராஜா மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மூவரும் பெற்றுக் கொண்டனர்.  இளஞ்செழியன் இயகத்தில் உருவாகிவரும் ‘பயம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் இரண்டும் படக்குழுவினர் விருப்பத்திற்கிணங்க இவ்விழாவில் வெளியிடப்பட்டது .

சிவகாசி சிறப்பு பட்டாசு பரிசு , ஆரணி இனிப்புகள் , மணப்பாறை முறுக்கு பாக்கெட்டுகள் , ஒரு குடும்ப தலைவன் – தலைவிக்குமான வண்ண வண்ண புத்தாடைகள் …உள்ளிட்ட தீபாவளி பரிசுப் பொருட்களை வந்திருந்த திரையுலக வி.ஐ.பிகள் ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா, நடிகர் செளந்தரராஜா , நடிகர் தங்கதுரை , நடிகர் ‘டீசல்’ மோரி … மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் ‘மக்கள் குரல்’ ராம்ஜி, ‘டி.சி’ அனுபமா சுப்ரமணியம் , மூத்த பத்திரிகை புகைப்பட கலைஞர் ‘தேர்ட் ஐ’ பிரகாஷ்… ஆகியோர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி, சங்கத்தின் அடையாள அட்டையை உரியவர்களுக்கு அணிவித்தும் கௌரவித்தனர்.