‘டிமான்ட்டி காலனி 2 ‘ திரைப்பட விமர்சனம்

அருள்நிதி இரு வேடங்களில் நடித்துள்ள படம்.ப்ரியா பவானி சங்கர் , ஆண்டி ஜாஸ் கெலைனன், டிசெரிங் டோர்ஜி, அருண்பாண்டியன், முத்துக்குமார் ,மீனாட்சி கோவிந்தராஜன் , சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர்.அஜய் ஆர் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஹரீஷ் கண்ணன், இசை சாம் சி எஸ்.தயாரிப்பு- BTG யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் .வெளியீடு ரெட் ஜெயண்ட் மூவீஸ்.

படம் தொடங்கியதுமே அதற்கு முன்னுரையாக டிமான்டி காலனி முதல் பாகத்தில் இருந்து சில காட்சிகளைக் காட்டுகிறார்கள் .ரீ கால் செய்ய வைக்கின்றார்கள்.முதல் பாகத்தைத் தொடர்பு படுத்தி ஆரம்பத்தில் சில காட்சிகள் வருகின்றன. பிறகு அருள்நிதி மீது கதை மையம் கொள்கிறது.

ஒரு அணுவில் இருந்து பிரிந்த இரு துகள்கள் ஒரே தன்மையுடன் இருக்கும் என்றும் சொல்வது போல் இரண்டு அருள்நிதி பாத்திரங்களில்,ஒருவர் உயிருக்கு ஆபத்து என்றால் இன்னொருவருக்கும் ஆபத்து என்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு ஒரு ஓட்டலில் கதை செல்கிறது. முதல் பாகத்தில் புதிய தளத்தில் கதையை கொண்டு சென்ற இயக்குநர் அஜய் ஞானமுத்து, இதில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை நம்பியுள்ளார்.

முதல் பாகத்தில் உயிருக்குப் போராடும் அருள் நிதியுடன் கதை முடிவது போல் இருக்கும். இரண்டாவது பாகத்தில் அந்த அருள் நிதியை பிரியா பவானி சங்கர் அவரது மாமனார் அருண் பாண்டியன் காப்பாற்றி மருத்துவமனை கொண்டு செல்கிறார்கள். பிரியா பவானியின் கணவரோ தற்கொலை செய்து கொண்ட வர். அவரது ஆவியுடன் பேச விருப்பப்படுகிறார் .வேறு ஒரு ஆவி அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.

அண்ணன் தம்பிகள் இடையே சொத்துப் பிரச்சினை வருகிறது.சொத்து பிரச்சினையால் உயிருக்கு போராடும் தம்பியை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்ற உத்தரவு பெற்று வருகிறார் அண்ணன். அவரிடம் நடந்தவற்றச் சொல்லி தம்பி அருள்நிதியைக் காப்பாற்ற ப்ரியா பவானி முயல்கிறார். இரண்டு அருள்நிதிக்கு மட்டுமல்ல பிரியாவுக்கும் ஆபத்து ஏற்படுகிறது .அதன் பிறகு என்ன ஆனது? எப்படிப்பட்ட ஆபத்து? அவற்றிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பது தான் மீதிக் கதை.

இதில் நாயகன் அருள்நிதிதான் என்றாலும் அவர் ஏற்றிருந்தது இரட்டை வேடம் என்றாலும் பிரியா பவானி சங்கருக்கு நிறைய நடிப்பு முக்கியத்துவம் கொண்ட இடங்கள் வருகின்றன.

பிரியா பவானியின் மாமனராக அருண் பாண்டியன் வருகிறார். புத்தம த சாமியார்கள் வருகிறார்கள்.மீனாட்சி கோவிந்தராஜன் வருகிறார் .தீய சக்திகளை விரட்டும் புத்தமத சாமியார் டி செரிங் டோர்ஜி வருகிறார்.

பாடல்களுக்கு அதிக வாய்ப்பு இல்லாத படம்.எனவே பின்னணி இசையில் தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார் சாம் சி எஸ்.

அறிவியலுடன் அமானுஷ்யத்தைக் கலந்து கதை அமைப்பது அஜய் ஞானமுத்துவின் தனித்துவம். இதில் அதிகமாகத் தொழில்நுட்பக் காட்சிகளுக்கு இடம் கொடுத்து அந்த தன்மையில் இருந்து சற்று மாறியுள்ளார்.
படத்தில் இரண்டாவது பாதியில் ஏகப்பட்ட தொழில்நுட்பக் காட்சிகள் கண்களை மிரள வைக்கின்றன. அதில் கவனம் செலுத்தியதால் கதையை விட்டு விலகிய உணர்வு.

வழக்கமான பேய் படங்களிலிருந்து விலகி வேறொரு ரகத்தில் வந்துள்ள இந்தப் படம் திகில் பட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.