தந்தை திருவுருவப்பட திறப்பு விழா : கவிஞர் சினேகன் பேச்சு!

தன் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா வில் சினேகன் பேசியதாவது:

“உங்களோடு பயணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்குத் தெரியாமலோ, உங்களிடம் சொல்லாமலோ எதையும் நான் செய்தது இல்லை.

முதல் முறையாய் ஒரு இடைச்செருகலாக ஒரு தகவலை உங்களிடம் தெரிவிக்க முயல்கிறேன் மன்னிக்கவும்.

நான் பிக்பாஸ் நிகழ்வில் இருக்கும் போது அதில் வென்றால் எனது சொந்தக் கிராமத்தில் ஒரு நூலகம் கட்டுவேன் என்று சொல்லிருந்தேன் என்பது அனைவரும் அறிந்ததே.

எனக்கு ஒரு பிடிவாதக்குணம் இருக்கிறது. அது சரியா, தவறா என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை .

நாக்கும் -வாக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த பிடிவாதக் குணம். ஒன்றை வாய் மொழியாகக் கூறினாலும் அதனை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக உழைப்பேன்.

பிக்பாஸ் நிகழ்வில் நான் வெல்லவில்லை என்றாலும் எப்படியாவது ஒரு நூலகத்தை என் ஊரில் கட்ட வேண்டும் என்று முயற்சித்தேன்.

அதுவும் பூர்வீக இடத்தில் கட்டக்கூடாது என்னுடைய வருமானத்தில் தான் அந்த இடத்தை வாங்கிக் கட்ட வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தேன்.

என்னால் எப்போதெல்லாம் முடிந்ததோ அப்போதெல்லாம் ஒரு செண்ட் இரண்டு செண்ட் என்று கொஞ்ச கொஞ்சமாக இடத்தை வாங்கியும் முடித்து விட்டேன்.

அந்த இடத்தில் தற்போது நூலகம் மட்டுமல்ல நம் பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொள்ளும் ஒரு கலைக்கூடமும், வளரும் தலைமுறைகள் வந்தமர்ந்து படிக்கும் ஒரு படிப்பகமும் அமைப்பது என்று முடிவெடுத்தேன்.

அதற்கான கட்டட வரைபடப் பணிகளும் தொடங்கி விட்டன.
அதற்கு
நம்மவர் கலைக்கூடம்,
நம்மவர் படிப்பகம்,
நம்மவர் நூலகம் என்று
பெயரிட வேண்டும் என்றும் ஏற்கெனவே முடிவு செய்து இருந்தேன்.

இவை எல்லாம் முழுமை பெற்ற பிறகே உங்கள் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும் என்று இரகசியம் காத்துவந்தேன்.

ஆனால் காலம் இப்படி ஒரு நிகழ்வின் மூலம் உங்கள் பாதம் என் மண்ணின் மீது பதிய ஏற்பாடு செய்திருக்கிறது என்றதும் இந்த வாய்ப்பினை நான் என் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அமையவிருக்கும் ஒரு மாபெரும் கனவிற்கான கல்வெட்டைத் திறந்து வைக்குமாறு அன்போடு அழைக்கிறேன் …

அன்பே… அன்பை மன்னிக்கும்

மன்னிப்பை ஏற்று மறுதலிக்காமல் ஏற்பீர்கள் என்று அழைக்கிறேன் வாருங்கள்.”என்று கூறியிருந்தார். கலைஞானி கமல்ஹாசன் , தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.