வரலட்சுமி சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் சதீஷ் சூர்யா படத் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர் . இசை ஆதித்யா ராவ்.தயாரிப்பு அக்னி என்டர்டெய்ன்மென்ட்.
இந்தப் படத்தின் கதை அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்ற பகுதியில் நடக்கிறது. ஒரு மரணத்தில் அப்பாவியான ஒரு பெண் கொலைப் பழி சுமக்கிறாள். சாட்சியங்கள் அனைத்தும் அவளுக்கு எதிராகவே உள்ளன.அவளைத் திட்டமிட்டு கொலையாளியாக வலையில் சிக்க வைத்துள்ளனர்.தனக்கு எதிரான அனைத்து தடயங்களையும் ஆதாரங்களையும் எப்படி எதிர்கொண்டு அவள் வெளிவருகிறாள் என்பதுதான் படத்தின் கதை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்பது தான் உலகெங்கும் பின்பற்றப்பட்டு வருகிற சட்ட அறம். அது மீறப்படும் போது சாட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்பளிக்காமல் உண்மையைத் தேடி சட்டமும் வழக்கறிஞர்களும் செல்கின்ற கதை என்றும் கூறலாம்.
வெர்டிக்ட் என்றால் தீர்ப்பு என்று பொருள். இது ஒரு கொலை சார்ந்த விசாரணை என்கிற ரீதியில் கதை திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படம் தொடங்கியதும் அமெரிக்காவின் நீதிமன்றக் காட்சிகள் விரிகின்றன.நம்ருதா மீது விழும் கொலைப் பழி, அது சார்ந்த பல்வேறு நிலைகளிலான விசாரணைகளும் தீர்ப்பும் என்று முதல் பாதிப் படம் முடிகிறது.சந்தர்ப்ப சாட்சியங்கள் அவளுக்கு எதிராக இருக்கிறபோது அலசி ஆராய்ந்து நம்ருதா நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்படும் போது படம் பார்க்கிற பார்வையாளர்கள் மனதிலும் அப்பாடா என்று நிம்மதி கலந்த ஒரு விடுதலை உணர்வு கிடைக்கிறது.கொலைப்பழியில் இருந்து அந்தப் பாத்திரம் விடுவிக்கப்பட்ட பிறகு வேறு என்ன கதை இருக்க முடியும் என்று யோசித்தால், அதற்குப் பிறகு தான் படத்தின் பிரதான திருப்பங்களும் முடிச்சுகளும் இருக்கின்றன. கடைசி நிமிடம் வரை அந்தப் பரபரப்பைத் தக்க வைத்துக் கொண்டு பார்வையாளர்களுடன் சுவாரஸ்ய கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிப் படத்தை முடிக்கிறார்கள்.
படத்தில் பணக்காரப் பெண்மணி எலிசாவாக சுஹாசினியும் ,அவருடன் நெருங்கிப் பழகும் பெண்ணாக நம்ருதா பாத்திரத்தில் ஸ்ருதி ஹரிஹரனும், அவரது காதலன் வருணாக பிரகாஷ் மோகன்தாசும்,நம்ருதாவுக்காக வாதாடும் வழக்கறிஞர் மாயாவாக வரலட்சுமி சரத்குமாரும், இன்னொரு வழக்கறிஞர் ஸ்யாமாவாக வித்யுலேகா ராமனும் நடித்துள்ளனர்.
படத்தின் கதையில் எலிசாவாக வரும் சுஹாசினி வயதானவர்,கால் நூற்றாண்டு காலம் தாண்டி வாழ்ந்து தனது காதல் கணவன் ஹென்றியை இழந்தவர். தன் கணவனது நினைவிலேயே வாழ்பவர்.மில்லியன் கணக்கில் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்.மருத்துவ உதவி தேவைப்படும் உடல்நிலை கொண்டவர். எனவே அவர் உட்கார்ந்த படியும், படுத்தபடியும் இருந்து கொண்டே நடித்து ஸ்கோர் செய்கிறார்.சின்ன சின்ன அசைவுகளில் கூட அவரது அனுபவ நடிப்பு தெரிகிறது.
நம்ருதாவாக வரும் ஸ்ருதி ஹரிஹரனுக்குப் பல்வேறு நடிப்புத் தருணங்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு.வெள்ளந்தியாக சுஹாசினியுடன் பழகி அன்பைப் பொழிகிறார்.காதலனுடன் நம்பிப் பழகுகிறார் . ஆனால் அவனது மனதில் அழுக்கு படிந்ததைக் கண்டு உள்ளுக்குள் புழுங்குகிறார்.
தன் மீது விழுந்துள்ள கொலைப்பழியை எதிர்கொண்டு மீண்டு வரப் போராடுகிறார். இப்படி பல்வேறு உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் அனைத்திலும் இயல்பாக நடித்து அசத்தியுள்ளார்.
மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சியின் மனநிலை கொண்ட வருண்,நம்ருதா பிரக்ஞயா என்று இருவரிடமும் தொடர்பில் இருக்கிறான். பசுத்தோல் போர்த்திய புலியாக சுபாவம் கொண்ட அந்தக் கதாபாத்திரத்தில் பிரகாஷ் மோகன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார்.ஆணாதிக்க சிந்தனையையும் பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மனநிலையையும் தன் பாத்திரத்தின் மூலம் அழகாகப் பிரதிபலித்துள்ளார்.
துணிச்சல் ,சட்ட அறிவு ,தன் வழக்கில் வெற்றி பெற எந்த நிலைக்கும் செல்லும் சாதுரியம் கலந்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வரலட்சுமி பளிச்சிடுகிறார்.அவரது தோற்றமும் ஆண்மை கலந்த குரலும் அவரது அனாயாசமான ஆங்கில உச்சரிப்பும் அதற்குப் பக்கபலமாக உள்ளன.இன்னொரு வழக்கறிஞராக வித்யுலேகா ராமன் வருகிறார்.இதுவரை அசட்டுத்தனமான நகைச்சுவைக் காட்சிகளில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தவர் எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அந்த வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்குச் சரியாகப் பொருந்தியுள்ளார்.அதுமட்டுமல்ல படத்தில்
பிரக்ஞயா பாத்திரத்தில் வரும் நடிகையும்,அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெசிகாவாக வரும் ஆனாவும்,
சுஹாசினி வீட்டு வேலைக்காரர் ரஃபேல் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆங்கிலேயரும், நீதிமன்றக் காட்சிகளில் வரும் அமெரிக்க நடிகர்களும் சிறப்பாகவே நடிப்பில் வெளிப்பட்டுள்ளனர்.
மனித மனத்தின் ஊசலாட்டங்கள் பணம், காமம், காதல் போன்றவற்றை முன்னிட்டு அதன் எண்ணங்கள் மாறுவதையும் மனித குணச்சித்திரம் பிறழ்வதையும் இந்தக் கதையின் ஊடாகக் காட்டியுள்ளார்கள்.
இந்தப் படம் அரவிந்த் கிருஷ்ணாவின் துல்லியமான ஒளிப்பதிவின் மூலம் நல்ல காட்சி அனுபவத்தைத் தரும் வகையில் படமாகி உள்ளது.மிகக்குறைந்த அளவிலான படப்பிடிப்பிடங்களில் படப்பதிவு நடத்தி அந்தக் குறையே தெரியாத அளவிற்குச் சலிப்பூட்டாமல் காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தில் தலைப்பு வரும்போது தொடங்குகிற ஆதித்யா ராவின் பின்னணி இசை இறுதி வரை நேர்த்தியுடன் இயக்குநருக்குப் பக்கபலமாக பயணித்துள்ளது.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா நீளமான காட்சிகளோ, தொடர்பில்லாத காட்சிகளோ இல்லாத வகையில் சரியாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் நீதிமன்றக் காட்சிகளில் நாம் பார்த்துள்ள நீளமான ஆவேசமான வாதப் பிரதிவாதங்கள் செயற்கையானவை. ஆனால் அதற்கு நேர்மாறான வகையில் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றக் காட்சிகள் இருக்கின்றன. அந்த நடைமுறைகள் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் எப்படி ஆறஅமர நிதானமாக அலசி ஆராய்ந்து அதன் பின்பு தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அழகாகக் காட்டியுள்ளார்கள்.
தீர்ப்பு என்பது பழிவாங்கலாக இருக்கக் கூடாது .நியாயம் கிடைக்கச் செய்வதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும் போன்ற நறுக் வசனங்கள் ஆங்காங்கே உள்ளன.
படத்தின் ஆரம்பத்தில் வரும் நீதிமன்ற விவாத வசனங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கின்றன. தமிழில் சப்டைட்டில் போடப்பட்டாலும் அவற்றையும் தமிழில் பேச வைத்திருந்தால் புரிதலுக்கு எளிதாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ்த் திரைப்பட முயற்சிதான் இந்த ‘தி வெர்டிக்ட் ‘திரைப்படம் எனலாம்.வழக்கமான மாமுல் படங்களிலிருந்து இந்தப் படம் இந்த விதத்தில் தான் மாறுபட்டுத் தெரிகிறது.