ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் விரைவில் படக்குழு அடுத்த ஷெட்யூலை தொடங்க உள்ளது.
படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, “சென்னை முழுவதும் பென்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஷெட்யூலில் ராகவா லாரன்ஸ் நடித்த முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். உண்மையிலேயே இந்த ஷெட்யூல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சுதன் சார், ஜெகதீஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முழுமையான படைப்பு சுதந்திரத்திற்கும், ராகவா லாரன்ஸ் சாரின் முழுமையான ஒத்துழைப்பிற்கும் நன்றி. விரைவில் எங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். இதுமட்டுமல்லாது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறோம்” என்றார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, நிவின் பாலி வில்லனாக நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. ட்வின் ஃபிஷ் வால்டரின் கதாபாத்திர டீசர் ரசிகர்களை சில்லிட வைத்திருக்கிறது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கண்ணைக் கவரும் ஆடம்பரமான பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.