நா. முத்துக்குமார் 50 : கொண்டாடும் திரையுலகம்!

பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இது சார்ந்து
விழாக் குழு சார்பாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘அன்புக்குரிய தமிழ் திரையுலக நண்பர்கள், பத்திரிகை, ஊடகங்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.
தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளினில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும், ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும், அழியாப் புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது.

வீசும் காற்று முழுக்க, தன் கவிதைகளைப் பாடல்களாகக் கலந்திட வைத்திருக்கும் இந்தக் கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும், பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம் பகிர நா.முத்துக்குமாரோடு பணியாற்றிய திரைப் பிரபலங்களும், நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

திரையிசைப் பாடல்களில் தனக்கென தனி முத்திரையை பதித்ததோடு, கோடானு கோடி இரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் விழாவை, நா.முத்துக்குமார் welfare core கமிட்டியோடு இணைந்து ACTC நிறுவனம் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக நடத்த இருப்பதில் பெருமை கொள்கிறது’.

நாள் : ஜூலை 5, 2025
இடம் : YMCA மைதானம், நந்தனம், சென்னை.

விழாக் குழுவில் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் , பாலா, லிங்குசாமி,மோகன் ராஜா, வசந்தபாலன், ராம், விஜய், ராஜேஷ்,எஸ் கே பி கருணா,, தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி,  எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா ஆகியோர் இருக்கிறார்கள்.