‘ படை தலைவன்’ திரைப்பட விமர்சனம்

சண்முக பாண்டியன் விஜயகாந்த் ,கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி.ஏ. வெங்கடேஷ், யூகி சேது, ஸ்ரீஜீத் ரவி, அருள்தாஸ், லோகு நடித்துள்ளனர்.இப்படத்தை யூ. அன்பு இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.விஜே கம்பைன்ஸ் -தாஸ் பிக்சர்ஸ் ஜெகநாதன் -பரமசிவம் தயாரித்துள்ளனர்.

இது தமிழகத்தில் தொடங்கி ஒடிசாவில் முடிகிற கதை. சண்முக பாண்டியன் ஒரு யானையைத் தனது சகோதரனைப் போல் பாசத்துடன் பேணி வளர்க்கிறார் .வனத்திலிருந்து பாதை மாறி வந்து சேர்ந்ததை அவரது அம்மா எடுத்து வளர்த்தார். அதையே தனது சகோதரனாக நினைத்து வளர்த்து வருகிறார்.அப்படிப்பட்ட யானைக்கு ஒரு ஆபத்து வருகிறது .அதில் இருந்து அதை எப்படி சண்முக பாண்டியன் காப்பாற்றுகிறார்? அந்த ஆபத்துக்குக் காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றிச் சொல்லும் கதை தான்’படை தலைவன்’.

ஆறடிக்கு மேல் உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் என்று நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன் முந்தைய படங்களை விட இதில் நடிப்பில் மாற்றம் காட்டியுள்ளார்.அவரது தோற்றம் ஆக்சன் சண்டைக் காட்சிகளுக்கு கை கொடுக்கிறது .ஆனால் நடிப்புக்கு அவர் மேலும் முயற்சியும் பயிற்சியும் எடுக்க வேண்டும்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா சண்முக பாண்டியனின் தந்தையாக வருகிறார்.பழங்குடியின பெண்ணாக யாமினி சந்தர் வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் அவரவர்க்கு இட்ட பணியைக் குறை இல்லாமல் செய்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்திருக்கிறார்.விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே படங்களில் ‘பொளந்து’ கட்டியவர் மகன் நடித்த படத்தில் அடக்கியே வாசித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த பகுதிகளை நன்றாகக்காட்சிப்படுத்தியுள்ளது. கிராமத்து பகுதிகளை அழகாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை வணிகப் படத்திற்கு ஏற்ற வகையிலும் படமாக்கியிருக்கிறது.காட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சிகள் சரியான விஷுவல் ட்ரீட்.

திருப்பங்கள் இல்லாத திரைக்கதை ஒரு பலவீனம்.அடுத்தது என்ன நடக்கும்? என்பதை பார்வையாளர்கள் கற்பனை செய்து கொள்ள முடியும்.என்றாலும் தனது வேலையைச் சரியாகப் புரிந்து படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் எஸ்.பி.அஹமத்.

பல்வேறு மொழிகளில் வெவ்வேறு படங்களில் பார்த்த ஒரு கதையை சண்முக பாண்டியனை வைத்து இயக்கி ஒரு புது நிறம் காட்ட முயன்றுள்ளார் இயக்குநர் யு.அன்பு.

தனது யானையைக்‌ காப்பாற்ற போராடும் ஒரு நாயகனின் பயணத்தை, ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமாக சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர் யு.அன்பு.விஜயகாந்தை ஏஐ மூலம் மீண்டும் திரையில் தோன்ற வைத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள்.அது  புத்திசாலித்தனமான முயற்சியாக இருக்கிறது. தெள்ளிய நீரோட்டம் போல் சென்று கொண்டிருக்க வேண்டிய கதை ஆங்காங்கே தத்தித் தாவுகிறது. படம் முழுவதும் யானை பயன்படுத்தப்பட்டிருப்பதும், அதற்காக படக்குழு மெனக்கெட்டிருப்பதும் திரையில் தெரிகிறது.அது படம் பார்ப்பவருக்குப் புதிய அனுபவத்தை நிச்சயமாகத் தரும்.

மொத்தத்தில், ‘படை தலைவன்’ பொழுதுபோக்கு நோக்கில் பார்க்கக்கூடிய வணிகப் படம்.