‘மனிதர்கள்’ திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில்,  “மனிதர்கள்” திரைப்படம்,  மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம், பிரேம் ஆகியோர்  நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.,ஒளிப்பதிவு – அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்,இசை – அனிலேஷ் எல் மேத்யூ ,படத்தொகுப்பு – தின்சா,கலை – மகேந்திரன் பாண்டியன்,பாடல் – கார்த்திக் நேத்தா,ஒப்பனை – அ சபரி கிரிசன்,சண்டை பயிற்சி – வின் வீரா.தயாரிப்பு ஸ்டுடியோ மூவிங் டர்ட்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார் , எம்.கே. சாம்பசிவம்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர், திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

வெளியீட்டுக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எழுப்பி இருக்கும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா? வாருங்கள் பார்ப்போம்.

ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, பெரும் பிரச்சனையாகி அதில் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். மற்றவர்கள் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு நெருக்கடியில் இருந்து  தப்பிக்க முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களுக்கு எத்தகைய விளைவைத் தேடிக்கொடுத்தது என்பதை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருப்பதே ‘மனிதர்கள்’. பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.

கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம், பிரேம் ஆகியோர் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்கள்.

எதிர்பாராத அதிர்ச்சி சம்பவத்தால் மனம் உறைந்து பதற்றத்தில் பரிதவிக்கிறார்கள். அப்போது சிலர் மிகை நடிப்பை வெளிக்காட்டுவதும், சிலர் எந்தவித பதற்றமும் இன்றி பிரச்சினையை எதிர்கொள்ளத் துணிந்து தயாராவதும் என்று மனிதர்களின் மனநிலையை இயல்பாக தங்களது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரே இரவில் முழுக்க குறிப்பிட்ட சில முகங்கள், என்று அவர்களைத் திரைப்படம் முழுக்கப் பார்க்க வைப்பது ஒரு சவால். அப்பணியை மிக சாமர்த்தியமாகச் சாத்தியமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ்.
இயற்கை வெளிச்சம், கார் மற்றும் சாலை விளக்குகளின் ஒளியில் காட்சிகளைப் படமாக்கிய விதம் வியக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் அனிலேஷ் எல்.மேத்யூ இசையில் பின்னணி இசை கதாபாத்திரங்களின் அச்சத்தையும் பதற்றத்தையும் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.

ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும், கதை முழுவதுமே இருள் சூழ்ந்த பகுதிகளில் நடப்பதும், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களுடன் பயணிப்பது என்று தடம் மாறி தொய்வடைய வாய்ப்புகள் இருந்தும், படத்தைச் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தின்சா.

எழுதி இயக்கியிருக்கும் இராம் இந்திரா, கிரைம் சஸ்பென்ஸ் ரகத்திலான படத்தை எளிமையான முறையில் வித்தியாசமான கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது வித்தியாசமான முயற்சி படத்திற்குப் பெரும் பலவீனமாக அமைந்து விட்டது.

படம் முழுவதுமே இருள், ஒரே முகங்கள், அவர்களுக்கு இடையே ஒரே மாதிரியான விவாதங்கள், என்று கதை ஒரே இடத்தில் பயணிப்பது  படம் முழுவதும் அது நீண்டு கொண்டே செல்வது ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு அலுப்பை வரவழைத்து விடுகிறது.

ஒரு குறும்படத்திற்கான கச்சாப் பொருளை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.முழு நீளப்படத்திற்கு தேவையான மூலப்பொருள்கள் குறைவாக உள்ளது ஒரு பெரிய பலவீனம்.
இரவு நேரத்தையும், சில மனிதர்களையும் வைத்துக் கொண்டு இயக்குநர் தனக்கு எட்டும் விதத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். மொத்தத்தில், இந்த முகம் தெரியாத ‘மனிதர்கள்’  சோதிக்கிறார்கள்.