‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்பட விமர்சனம்

விஜய் ஆண்டனி ,சத்யராஜ் ,சரத்குமார் , மேகா ஆகாஷ்,சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா , ஏ.எல். அழகப்பன் நடித்துள்ளனர்.விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி சரத்குமார் உடன் இணைந்து ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார் .தான் விரும்பிய பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் எதிரிகளால் விஜய் ஆண்டனியின் மனைவி கொலை செய்யப்படுகிறார். அப்போது மழை பெய்தால் விஜய் ஆண்டனி மழையையே வெறுக்க ஆரம்பிக்கிறார்.அது முதல் மழை பிடிக்காத மனிதராக இருக்கிறார்.

நடந்த தாக்குதலில் அவரது மனைவி இறந்து விட்டார் என்பதுதான் உண்மை . ஆனால் மனைவியுடன் விஜய் ஆண்டனியும் இறந்து விட்டதாக அனைவரையும் சரத்குமார் நம்ப வைக்கிறார். அதற்கு பிறகு விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அனுப்பி இருக்கிறார்.அங்கே அவர் அடையாளமற்றவராக வாழப்பழகுகிறார் .அங்கே இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள் .அதில் ஒருவர் தான் மேகா ஆகாஷ்.அங்கேயும் தாதாக்கள் காவல்துறை என்று பிரச்சினை வருகிறது. அந்தச் சவாலை அடையாளம் இழந்து வாழும் அவர் எப்படி சமாளிக்கிறார்? அங்கு என்ன நடந்தது ? விஜய் ஆண்டனியின் வாழ்க்கை அதன் பிறகு எப்படி மாறியது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதை நல்லவனா கெட்டவனா? நன்மையா தீமையா? மோதல் தான். முடிவில் தீயவர்கள் அழிய வேண்டும் தீமை ஒழிய வேண்டும் என்பதைத்தான் படம் சொல்கின்றது. விஜய் ஆண்டனி ,அவரிடம் ஒரு அழகான நாய்க்குட்டி அவருக்கு மழை பிடிக்காது என அந்தப் பாத்திரத்தை உருவாக்கி உள்ள விதம் ரசிக்க வைத்தது.விஜய் ஆண்டனியின் பாத்திர அமைப்பும் நடிப்பும் அழகு.சண்டைக் காட்சிகளில் உழைத்துள்ளார்.

பொதுவாகத் தாங்கள் தோன்றும்போது படங்களில் பெரிதாக கவனம் இருக்கும் சரத்குமார், சத்யராஜ் இருவருக்கும் இந்தப் படத்தில் அந்த அளவிற்கு வாய்ப்பு தரப்படவில்லை.சத்யராஜ் கவுரவ வேடமாக வருகிறார். விஜய் ஆண்டனி நண்பராக வரும் பிரித்வி தனக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். வில்லன் தனஞ்செயா பாத்திரம் மேலும் வலுவானதாக இருந்திருக்கலாம்.

நாயகி மேகா ஆகாஷ் ,முரளி சர்மா, மற்றும் இயக்குநர் ரமணா நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.படத்தில் ஆக்சன் காட்சிகளுக்காக மெனக்கட்டுள்ளார்கள் .இருந்தாலும் அவற்றை மேலும் நேர்த்தியாக எடுத்திருக்கலாம்.ஆக்சன் காட்சிகளை உருவாக்கியதிலும் மிரட்டலான சில ஒளிப்பதிவு நுட்பத்திலும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது விஜய் மிலிட்டனின் உழைப்பு. எடிட்டர் கே எல் பிரவீன் கட்கள் பல இடங்களில் கை கொடுக்கின்றன. அச்சு ராஜா மணி மற்றும் விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்,என்றாலும் பின்னணியில் கவனிக்க வைக்கின்றனர். அந்தமான் தீவின் வீடுகள் தெருக்கள் ஊரின் அமைப்புகள் புதிய காட்சி அனுபவத்தை தருகின்றன. ஆனால் யூகிக்கும்படியான திரைக்கதையின் பயணம் படத்திற்கு பலவீனமாகிவிடுகிறது.

மொத்தத்தில் மழை பிடிக்காத மனிதன் படம் கனமழையாக எதிர்பார்த்து செடி மழையான கதையாக குறைந்த அளவே திருப்தி தருகிறது.