’மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட விமர்சனம்

காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஷெல்லி கிஷோர், விஷ்வா, ஜார்ஜ் மரியான், , சுனில் சுகதா , சாம்ஸ், மதுமிதா நடித்துள்ளனர்.கார்த்திகேயன் மணி இப்படத்தை இயக்கி உள்ளார். ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே,இசை கே.சி. பாலசாரங்கன். படத்தொகுப்பு சதீஷ்குமார் சமுஷ்கி.

வாழ்க்கைப் பாட்டுக்கான போராட்டத்தில் எனது வாழ்நாளைக் கழிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம், சாகசம் இருக்கப் போகிறது? அவர்களிடம் என்ன கதை இருக்கப் போகிறது? என்று  கதாசிரியர் சத்யராஜ் நினைக்கிறார்.அப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தலைவன் கதையை உன்னிப்பாகக் கவனித்து அதை எழுதிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.அப்படி ஒருவராக இருப்பவர் தான் காளி வெங்கட். அவரது வாழ்க்கையை பார்த்தால் நடுத்தர வர்க்கத்தினர் தினம் தினம் போர்க்களச் சூழலில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், அவர்கள் வறுமைக்கோட்டைத் தாண்டுவதற்கே வாழ்நாளை பணயம் வைக்கிறார்கள் என்பதும் தெரிகிறது அப்பொழுது அது ஒரு சாகசம் நிறைந்ததாகத் தெரிகிறது .சாதாரண வாழ்க்கை வாழும் ஆட்டோ டிரைவர் கண்ணன் ஆக வரும் காளி வெங்கட் வெங்கட் பாத்திரத்தின் மூலம்அது சாதாரண வாழ்க்கை அல்ல அசாதாரண வாழ்க்கை என்று புரிய வைப்பது தான் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் கதை.

படத்தில் ஆட்டோ டிரைவராக காளிய வெங்கட் நடித்து இருக்கிறார்.வழக்கம்போலவே தனது இயல்பான நடிப்பு மூலம் கண்ணன் என்ற கதாபாத்திரமாகவே மாறி மக்கள் மனதில் எளிதில் ஒட்டிக்கொள்கிறார்.சத்யராஜ் படத்தில் ஒரு கதாசிரியராகக் கதை சொல்பவராக ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டே சொல்கிறார். இருந்தாலும் அவரது திரைத் தோற்றம் படத்திற்குப் பெரிய பலமாக மாறி உள்ளது.காளி வெங்கட்டின் மகளாக நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன், அப்பாவை விட்டுக் கொடுக்காத மகளாக, சின்ன சின்ன பாவனைகள் மூலம் கூட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர், நடித்திருக்கிறார். அவரது தோற்றமே பாதி பாத்திரத்தை நிறைவு செய்துவிடுகிறது.இதுவரை அழுமூஞ்சி பாத்திரங்களின் நடித்து வந்த கீதா கைலாசம் முதல் முறையாக பச்சோந்தி பிரேமா பாத்திரத்தில் ஒரு அரசியல்வாதியாக வந்து கலகலப்பூட்டுகிறார்.

காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் கிஷோர், ஐடி நிறுவன  அர்ச்சனா, மின்வாரிய ஏஇ யாக நடித்திருக்கும் சுனில் சுகதா, ஊறுகாய் விற்பனையாளராக நடித்திருக்கும் சாம்ஸ், மதுமிதா என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வுகள்.ஆளாளுக்கு ஸ்கோர் செய்கிறார்கள்.

எளிமையான மக்களின் எளிமையான வாழ்வியலை அவரவர் வசிப்பிடங்களில் இருந்து இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே.இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் சமுஷ்கி, பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வகையில் கதையை நகர்த்திச் சென்றாலும், சில இடங்களில் தொய்வு ஏற்படும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார். இருந்தாலும், இயக்குநரின் புதிய வகை கதை சொல்லல் அந்த குறைகளை மறக்க செய்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அவர்களது எளிமையான வாழ்க்கையும் ஒரு சாகசம் தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இக்கதையை ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்துக் குடிமகனும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

வேகம் குறைந்த திரைக்கதை சற்றே பின்னடைவு போல் தோன்றுகிறது. இப்படிச் சில குறைகள் இருந்தாலும் கதாபாத்திரங்களை கையாண்ட விதம், கதை சொல்லும் முறையில் கடைபிடிக்கப்பட்ட புதிய உத்தி ஆகியவை குறைகளை மறந்து படத்தினைக் கவனிக்க வைக்கிறது.சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்து மேலும் திரைக்கதையில் நேர்த்தி காட்டியிருந்தால் இந்தப் படம் ஒரு புது அடையாளமாக மாறி இருக்கும்.

மொத்தத்தில், ‘மெட்ராஸ் மேட்னி’ மத்திம நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசி இருக்கிறது.