நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன்,ரவிவர்மா ,அர்ஜய் நடித்துள்ளனர். லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஏ ஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி, தயாரித்துள்ளனர்.
படத்தின் முதல் காட்சியில் ஆந்தை வருகிறது.அதைப் பார்த்ததுமே திகிலும் மர்ம மும் கொண்ட திரைப்படம் என்ற அறிகுறி தென்படுகிறது. அடுத்து ஒரு கொலை செய்து எரிக்கப்படுவது போன்ற காட்சி வருகிறது. அப்படி ஆரம்பமே திகில் கிளம்பி தொடங்குகிறது படம்.சரி படத்தின் கதை என்ன?
வரிசையாக மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. எட்டு கொலைகள் நடந்திருக்கின்றன. போலீஸ் மோப்பம் பிடிப்பதற்குள் அடுத்தடுத்த கொலைகள்.அதன் ஒற்றுமையைப் பார்த்தால் இரட்டையரில் ஒருவர் அப்படி கொலை செய்யப்பட்டு இறந்திருப்பது தெரிகிறது. போலீஸ் தீவிர விசாரணையில் இறங்குகிறது.கொலைக்கான காரணம் தேடிய பயணத்தில் இரட்டையர்களாகவே படித்த ஒரு பள்ளியின் முன் கதை விரிகிறது .ட்வின் பேர்ட்ஸ் என்ற அந்த பள்ளிக்கூடத்தில் அனைவரும் இரட்டையர்களாகவே படித்து வருகிறார்கள். அவர்களில் பெஞ்சமின் – பிரான்சிஸ் என்ற இரட்டையரது கதையைத் தோண்டித் துழாவுகிறது போலீஸ் விசாரணை. இந்தக் கொலைகளுக்கான காரணம் தெரிய வருகிறது. அவர்கள் அனாதை இரட்டர்களாகப் பிறந்து அந்தப் பள்ளியில் படித்தபோது பிற மாணவர்களால் துன்புறுத்தப்பட்டனர்.பெஞ்சமின் தம்பி பிரான்சிஸ்க்கு நிக்டோபோபியா( Nictofobia) உளவியல் பிரச்சினை. அதாவது இருட்டு என்றால் பயம் .ஆனால் அந்த இருட்டை வைத்து அவனைத் துன்புறுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அவன் இறந்து விடுகிறான்.தன் உடன் பிறந்த சகோதரன் இறந்ததற்குக் காரணமாக இருந்த மாணவர்களைப் பெரியவனாக வளர்ந்த பிறகு பழிவாங்க பெஞ்சமின் செய்வதே இந்த கொலைகள் என்று பிறகு தெரிகிறது. பெஞ்சமினைத் தேடி போலீஸ் நெருங்குகிறது .அப்போது எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன. முடிவு என்ன என்பதுதான் 137.04 நிமிடங்கள் கொண்ட இந்தப் ‘லெவன்’ படத்தின் கதை.
ஒரு ஹாரர் தில்லர் போல் தொடங்கினாலும் செண்டிமெண்டலான காட்சிகள் மூலம் நம்மை கலங்க வைக்கவும் செய்கிறார்கள். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் வரும் கதை பிரமாதமான சகோதர பாசத்தையும் ,தனிமையின் கொடுமை, தாய்ப் பாச ஏக்கம் ,புறக்கணிப்பின் வலி போன்றவற்றையும் வெளிக்காட்டுகிறது.
படத்தில் அரவிந்தன் என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நவீன் சந்திரா மிடுக்கு குறையாமல் மீட்டர் தவறாமல் தனது பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார் . படத்தில் ஒரு வங்கிக் கொள்ளை வருகிறது அதில் அரவிந்தன் புகுந்துக் குற்றவாளிகளைக் குறிவைத்துப் பிடித்து துவம்சம் செய்வதிலிருந்து அவரது மிடுக்கான ஆட்டம் ஆரம்பமாகிறது. அவரது கையில் இந்தக் கொலை வழக்கு விசாரணை வருகிறது. அவர் படத்தில் பிற்பாடு எடுக்கும் வேறொரு அவதாரம் அதிர்ச்சி ஊட்டுகிறது. அந்த வகையில் அந்தப் பாத்திரத்தையும் அவர் சிறப்பாக செய்துள்ளார்.
இந்தப் படத்தில் அபிராமி ‘ட்வின் பேர்ட்ஸ்’ ஸ்கூல் நடத்தும்ஆசிரியராக வருகிறார் .அவரது பாந்தமான தோற்றமே அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்து விடுகிறது. அலட்டிக் கொள்ளாமல் அந்தப் பாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
பெஞ்சமின், பிரான்சிஸ் இரட்டை சகோதரர்களும் நன்றாக நடித்துள்ளார்கள்.பிரான்சிஸ்க்கு நடிப்பு வாய்ப்புகள் அதிகம். அதைச் சரியாகப் பயன்படுத்தி கலங்க வைக்கிறார். மற்றபடி படத்தில் ஏராளமான இரட்டை சகோதர சகோதரிகளே நடித்துள்ளது படத்திற்கு புதிய நிறம் காட்டுகிறது. அது ஒரு புது விதமான திரை அனுபவமாக மாறுகிறது.அரவிந்தனுடன் விசாரணையில் பயணிக்கும் போலீஸ்காரராக திலீபன் வருகிறார். உயர் அதிகாரியாக ஆடுகளம் நரேன் .இப்படி வரும் இவர்கள் தங்கள் பணியைக் குறையின்றிச் செய்துள்ளனர்.
எந்த தவறு செய்தவர்களையும் மறக்க வேண்டும் மன்னிக்க வேண்டும் என்று உலகத்தில் பேசப்படுகிறது. ஆனால் அந்த வலியைச் சுமந்தவனுக்கு மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்ற உணர்வை பெஞ்சமின் கதாபாத்திரத்தின் மூலம் வெளிக்காட்டி உள்ளார் இயக்குநர்.
பள்ளி வாழ்க்கையில் குழந்தைகள் சந்திக்கும் தனிமை, சீண்டல்,புறக்கணிப்பு, அவமானம் அவர்களை எந்த அளவிற்கு உணர்ச்சியின் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறது என்பதையும் படம் பேசுகிறது. பள்ளியை தேடி போன போது பள்ளி எரிந்து விட்டது என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.
படத்தில் மீரா -தாரா, சுதாகர் – சுரேந்தர், சஞ்சனா – ரஞ்சனா, தீரன் – தீரஜ் என்று ஏகப்பட்ட இரட்டையர்கள் பாத்திரங்கள் வருகின்றன. ஆனாலும் குழப்பம் இல்லாமல் கதை செல்கிறது.
இமானின் பின்னணி இசை யும் கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவும் பின்னிப் பிணைந்து படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. படத்தில் ‘சிரி சிரி சி’ரி என்ற பாடலும் பிறகு வரும் பாடலும் ரசிகத்தக்கதாகவும் சார்ந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளைச் சொல்லும் விதத்திலும் உள்ளன.
நல்ல திரைக்கதை அமைப்பில் நாடகத்தனங்கள் இல்லாமல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. மொத்தத்தில் இயக்குநர் லோகேஷ் அஜ்ல்ஸ் நம்பிக்கை தரும் இயக்குநராக முத்திரை பதித்துள்ளார்.மனமுவந்து பாராட்டித் தட்டிக் கொடுக்கலாம்.
ஒரு ஹாரர் படம் போல் தோன்றினாலும் பாசத்தின் அருமையையும் படம் வெளிப்படுத்தி யாரையும் புறக்கணிக்கக் கூடாது துன்புறுத்தக் கூடாது என்ற உணர்வையும் பார்வையாளர்களுக்கு தந்து விடுகிறது .எனவே இது ஒரு பொழுதுபோக்குப் படம் என்று புறந்தள்ளிவிட முடியாது. நல்ல கருத்தையும் விதைத்துள்ளது எனலாம் .மொத்தத்தில் ‘லெவன் ‘ரசிகத்தக்கது.