அஜித்குமார், அர்ஜுன், திரிஷா , ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், ரவி ராகவேந்திரா, ரம்யா சுப்பிரமணியன், நிகில்சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் நடித்துள்ளனர்.
மகிழ்திருமேனி இயக்கி உள்ளார் .ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ், இசை அனிருத், எடிட்டர் என் பி ஸ்ரீகாந்த், சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஷ்கரன்.
அஜித் -திரிஷா நடுத்தர வயது தம்பதிகள் .காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் .திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லை.இந்த நிலையில் திரிஷா அஜித்திடம் விவாகரத்து கேட்கிறார்.அஜித் மறுக்கிறார் நாம் சேர்ந்தே வாழலாமே என்கிறார்.த்ரிஷாவோ பிடிவாதமாக இருக்கிறார்.திரிஷாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்கிறார் அஜித். அதற்குப் பிறகு விவாகரத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.இருந்தாலும் நட்பாக இருக்க விரும்புகிறார் அஜித்.இந்தக் கதை நடப்பதோ அஜர்பைஜான் நாட்டில்.அங்கே விவாகரத்து சம்பிரதாயங்கள் முடியும் காலகட்டம் வரை திரிஷா தன் தாய் வீட்டுக்குச் சென்று விட விரும்புகிறார்.அதனால் அவரது வீட்டில் கொண்டு போய் விடச் செல்கிறார் அஜீத்.ஒரு காரில் பயணமாகிறார்கள்.செல்லும் வழியில் தமிழ் பேசுவதால் அர்ஜுன், ரெஜினா நட்பு கிடைக்கிறது திரிஷாவிற்கு .போகிற வழியில் கார் பழுதுபட்டு விடுகிறது அர்ஜுனும் ரெஜினாவும் டிரக்கில் வருகிறார்கள். அவர்களை நம்பி திரிஷாவை ஒரு உணவகத்தில் விடச் சொல்கிறார் அஜித் .தான் காரை சரி செய்து கொண்டு விட்டு வந்து விடுவதாக கூறுகிறார் .அப்படியே திரிஷா அர்ஜுனுடன் செல்கிறார். மீண்டும் காரில் சென்று பார்த்த அஜித் அதிர்ச்சி அடைகிறார் அங்கே திரிஷாவைக் காணவில்லை .அவர் கடத்தப்பட்டதாக நினைக்கிறார் .அர்ஜுன் மீது சந்தேகப்படுகிறார். ஆனால் அதை அர்ஜுன் செய்யவில்லை என்று போலீஸ் கூறுகிறது. இதற்குப் பிறகு அஜித் திரிஷாவைத் தேடுவதும் அதன் பிறகு நடக்கும் பரபரப்புகளும் தான் படம்.
படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் வருகிறார் அஜித். அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் காணாமல் போன பிறகு பதற்றம், தவிப்பு, திரிஷாவைக் காப்பாற்ற போராட்டம் என பல்வேறு வகை நடிப்புத் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நடனம், சண்டைக் காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார்.
நாயகியாக கயல் பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா அவரது திரைத் தோற்றத்திலேயே ரசிகர்களைத் திருப்திப் படுத்தி விடுகிறார்.என்றும் மாறா இளமை இது,என்று கூற வைக்கிறார்.அவர் பாத்திரத்திற்கு ஏற்றபடி அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார். வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார் ரெஜினா. வில்லத்தனமாக மிரட்டி இருக்கிறார் அர்ஜுன். எதிர்பாராத பாத்திரத்தில் வருகிறார் ஆரவ்.
குற்றமும் அதற்கான தண்டனையும் என்கிற ரீதியில் தன் படங்களை இயக்கும் இயக்குநர் மகிழ்திருமேனி இதில் கடத்தல் பணம் பறிக்கும் கும்பலை மையமாக வைத்து கதை எழுதி இயக்கியுள்ளார். முதல் பாதி திரைக்கதை மித வேகத்தில் சென்றாலும் இடைவேளைக்குப் பிறகு கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது .துரத்தல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக அஜித் -ஆரவ் காரில் மோதிக்கொள்ளும் காட்சிகள் பரபர.
படத்தின் பெரும்பலமாக, ஓம் பிரகாஷ் செய்துள்ள ஒளிப்பதிவைக் கூறலாம் .நாம் இதுவரை தமிழ் திரையில் காணாத புவியியல் தோற்றத்தைக் கண் முன்னே நிறுத்தி அசத்தியுள்ளார். கதாபாத்திரங்களையும் பின்புலக் காட்சிகளையும் மிகவும் அழகாக எடுத்து ரசிக்க வைத்துள்ளார்.இதுவே ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தைத் தருகிறது. அதேபோல் அனிருத்தின் பாடல்களும் இசையும் படத்தைத் தூக்கி நிறுத்தும் பங்காற்றியுள்ளன.மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோ பஞ்ச் வசனங்களோ இல்லாதது கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன.பட உருவாக்கம் ஹாலிவுட் படங்களுக்குச் சவால் விடுகிறது.
லைக்கா நிறுவனத்தின் வெற்றி பெற வரிசையில் விடாமுயற்சி சேரும் அளவிற்கு அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளன. அதீதமான வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ, இல்லாதது குடும்பத்துடன் இந்தப் படத்தைக் காணத் தூண்டும் நேர்நிலை அம்சங்கள் ஆகும்.
விடாமுயற்சி வெற்றி தரும் படத்திற்கும் தான்.