கவிஞர் வைரமுத்து கொடுத்த விருதும் விருந்தும்!

நேற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள்.வழக்கமாக சென்னையில் விழா கொண்டாடுபவர், இந்த ஆண்டு அவரது சொந்த மண்ணில் கொண்டாடினார்.தனது பிறந்தநாள் கொண்டாட்டம் மகிழ்ச்சி பற்றி அவர் இன்று தனது ட்விட்டரில்,

“நேற்று என் பிறந்தநாள் கவிஞர் தோட்டம் நிகழ்விடமானது .

என்ன அன்பு எவ்வளவு ஆசை

அழைப்பிதழ் தயாரிக்காத போதே பிதுக்கி எடுத்தது பெருங்கூட்டம்

பழ.புகழேந்திக்குக் கவிஞர்கள் திருநாள் விருது  ரூபாய் 25ஆயிரம்

நலிவுற்ற குடும்பத்து மாணவர் ஐவருக்கு ஒரு லட்சம் கல்வித்தொகை

பெரியகுளம் நூற்றாண்டு நூலகத்துக்கு ஒரு லட்சம் தொண்டுத் தொகை

பொருள் பெற்றோர் புன்னகையை விடவும் பொருள் ஒன்றும் உயர்ந்ததில்லை

தமிழ்கொடுத்த பொருளைத் தமிழர்க்குத் தருகிறோம்

இவ்வுறவை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்!”

என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டு இருந்தார்.

கொடைக்கானல் அடிவாரத்தில் கெங்குவார்ப் பட்டியில் கவிஞர் வைரமுத்துக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம் உள்ளது. ‘கவிஞர் தோட்டம்’ என்கிற அந்தத் தோட்டத்தில் இந்த ஆண்டு பிறந்தநாள் விழா நடந்தது.

தனது பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பாகவே  அவர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவ்வகையில் பெரியகுளம் நூற்றாண்டு நினைவு நூலக விழாவில் கலந்து கொண்டு அந்நூலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியிருந்தார்.

தனது பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக அவர் கொண்டாடி வருகிறார் .அதை முன்னிட்டு தேர்வு செய்யும் கவிஞர்களுக்கு கவிஞர்கள் தின விருதும் பரிசும் வழங்கி வருகிறார்.  பாராட்டுப் பத்திரம் 25 ஆயிரம் ரூபாய் பரிசு கொண்ட இவ்விருது 1994 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை  கவிஞர்கள் சுரதா, நா.காமராசன்,கே.சி.எஸ்.அருணாசலம்,முகவை ராஜமாணிக்கம்,பூவை செங்குட்டுவன்,வா.மு.சேதுராமன், முத்துலிங்கம், தமிழன்பன்,இன்குலாப், காசி ஆனந்தன்,சிற்பி பாலசுப்ரமணியன்,இந்திரன், கல்யாண்ஜி, நெல்லை ஜெயந்தா’,தமிழச்சி தங்கப்பாண்டியன்,ஆண்டாள் பிரியதர்ஷினி,இளம்பிறை, வெண்ணிலா, சல்மா,ஈழத்துக் கவிஞர்கள் றகுமான் ஏ.ஜமீல், எம்.எம்.நெளபல்,மலேசியக் கவிஞர்கள்  சி.மா.இளங்கோ(தன்னாசி),இராஜேஸ்வரிவேடியன்,கலாப்ரியா, முத்தையா, மனுஷ்யபுத்திரன், தமிழ்நாடன், சக்திஜோதி, ராஜா சந்திரசேகர்,பா.சத்தியமோகன், தாராகணேசன்  உள்ளிட்ட கவிஞர்கள்  விருதை பெற்றுள்ளார்கள்.

இவ்வாண்டு சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ. புகழேந்திக்கு கவிஞர் திருநாள் விருது வழங்கப்பட்டு பணப்பரிசு வழங்கப்பட்டது. விருதுப் பத்திரத்தை மரபின் மைந்தன் முத்தையா வாசித்தார்.விருதை வைரமுத்து வழங்கினார்.அதன் பிறகு நலிவுற்ற குடும்பத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்
சக்தி வேல்,ஆர்த்திஶ்ரீ காளீஸ்வரி,சிரானா பாத்திமா,ரூபியா,பாண்டிச் செல்வி என ஐந்து பேருக்குக் கல்வி உதவித்தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்தினார்.

எப்போதும்  அவரது வெற்றித் தமிழர் பேரவை  முன்னெடுக்கும் கவிஞரது பிறந்தநாள் விழாவை இந்த ஆண்டு அந்த ஊர் மக்கள் ஒரு திருவிழா போல் மாற்றி விட்டார்கள்.
சுமார் 2000 பேர் கூடி அமர்க்களம் செய்து விட்டார்கள் .

சீர்வரிசைத் தட்டுகள், பலகாரங்கள்,கனிகள்,பரிசுப் பொருட்கள்,  இனிப்புகள்,மரக்கன்றுகள், புத்தகங்கள், ஆளுயர மாலைகள், பொன்னாடைகள், மலர்க்கிரீடங்கள் என்று அமர்க்களப் படுத்தினார்கள்.
அந்த பண்ணைத்தோட்டத்தில் ஆங்காங்கே கேக் வெட்டி மகிழ்ச்சியாகப் பிறந்தநாள் கொண்டாடினார்கள்.

அந்தப் பகுதியைச்சேர்ந்த  அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, தமிழக அரசின் முன்னாள் டில்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர் தங்க . தமிழ்ச்செல்வன் ,பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி  மகாராஜன்,பழனி  ஐ.பி.செந்தில்குமார்.
பெரியகுளம்  சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.மூக்கையாதேனி காவல்துறை ஏடிஎஸ்பி விவேகானந்தன்,விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்,தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஜீவனா,புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து, மலேசிய எழுத்தாளர் சஙக முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன், இந்நாள் தைலவர் ஞானசைமன்,மருத்துவர்கள் சி.செல்வராஜ்,ஜெயபால், வனசேகர்,தஞ்சை பல் மருத்துவர் ஆர்.பாஸ்கரன், மதுரை வெற்றி சினிமாஸ் ஐ.வெற்றிவேல் ,திருப்பூர் ஜீவானந்தம்,சென்னை ‘ பாஸ்ட்ராக் ‘ தமிழரசு ,ராசி பில்டர் ரங்கநாதன், டவுன்பஸ் ஓட்டல் வேலு,கோவை லாலா ஸ்வீட்ஸ் மாரியப்பன்,தஞ்சை பாம்பே ஸ்வீட்ஸ் சுப்பிரமணியசர்மா,திருச்சி ஆர்ச்சர்ட் பள்ளி மணி,ஃபேஷன்வுட் சண்முகம், உள்ளிட்ட தொழிலதிபர்கள் ,பேராசிரியர் நம்.சீனிவாசன், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் திருமலை,வெற்றித் தமிழர் பேரவை வி.பி.குமார், தஞ்சை செழியன்,ஒளிப்பதிவாளர் செல்லத்துரை,புதுவை வெற்றித் தமிழர் பேரவை வழக்கறிஞர் தி.கோவிந்தராசு, கர்நாடக வெற்றித் தமிழர் பேரவை பெங்களூரு இராஜேந்திரன், விமல், லோகநாதன்,கவிஞரின் படைப்புகளின் கன்னட மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் மலர்வழி, திருச்சி வெற்றித் தமிழர் பேரவை வி.பாஸ்கர்,சந்திரன்,பேராசிரியர் குபேந்திரன், சாத்தனூர் சிவா ,கவிஞர் தஞ்சை இனியன்,கவிஞரை முதலில் ஆதரித்து ஊக்கமூட்டிய தமிழாசிரியர் வெ.ஆ.உத்தமன்,நடிகர் இயக்குநர் கணேஷ்பாபு,வாய்மை,காக்கி படங்களின் இசை அமைப்பாளர் அவ்கத் ,ராமநாதபுரம் ராணி, தொழிலதிபர் கோவை ரமேஷ்,தேனி எஸ்.பி ஆர்.சிவப்ரசாத் ஐபிஎஸ்,வடுகபட்டி அழகர், ஆண்டிபட்டி வீரா, பிரபுதங்கம், தேனி மாவட்ட வெற்றித் தமிழர் பேரவை போகர் முருகன் போன்ற பல்துறைப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.

வாழ்த்து சொல்ல வந்த விஐபிகள் ஊர்க்காரர்கள் கூட்டத்தில் சிக்கிப் பிதுங்கி வெளியேறினார்கள்.

ஊர் மக்கள் குடும்பம் குடும்பமாக கவிஞருடன் ஆயிரம் பேராவது புகைப்படங்கள் எடுத்து இருப்பார்கள்.கவிஞர் சார்பில் அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்ட டிருந்தது.

விருந்து தடபுடலாக இருந்தது தலைவாழை இலையில் பிரியாணி, மட்டன் சுக்கா, மட்டன் கறி வறுவல், குடல் கறி, ஈரல் வறுவல் என்று ஆட்டின் சகல பாகங்களுக்கும் எனத் தனித்தனி தொடுகறிகளுடன்,பொரித்த முழுக்காடை, கரண்டி ஆம்லெட்,மீன் வறுவல் போன்றவையும் பரிமாறப்பட்டன.பீடா , ஜிகர்தண்டா வரை இருந்தது.

தங்கள் பகுதியில் இருந்து சிறந்து உயர்ந்து விளங்கிய ஒருவரை வியந்து அண்ணாந்து பார்த்து ஆனந்தம் கண்டனர். தன் மண்ணின் மைந்தர்களை ஆரத் தழுவி அவரும் ஊர்ப் பாசம் காட்டினார்.வெளியில் இருந்து வந்து பார்த்தவர்களுக்கு இது வித்தியாச அனுபவமாக இருந்தது