நந்தமூரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

தெலுங்குத் திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவிபுடி – ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், ‘NBK108’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மாஸ் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கிறார். சி. ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். தம்மி ராஜு படத் தொகுப்பாளராக பணியாற்ற, கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார். சண்டைப் பயிற்சி இயக்குநராக வி. வெங்கட் பணியாற்றுகிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் சாஹூ கரபதி மற்றும் ஹரிஷ் பெடி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தெலுங்குத் திரையுலகின் மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். முதல் காட்சிக்குப் பிரபல இயக்குநர் கே. ராகவேந்திரா ராவ் கௌரவ இயக்குநராகப் பணியாற்றினார். இத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் யெர்னேனி, கிலாரு சதீஷ் மற்றும் தயாரிப்பாளர் சிரிஷ் ஆகியோர் படத்தின் திரைக்கதையைத் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

‘NBK 108’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சண்டைக் காட்சிகளுடன் தொடங்கியது. கலை இயக்குநர் ராஜீவன் மேற்பார்வையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்தப் படத்தில் இதுவரை திரையில் தோன்றாத புதிய தோற்றத்தில் மாஸ் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரது கதாபாத்திரமும் இதுவரை அவர் ஏற்றிராத வேடமாகும்.

பாலகிருஷ்ணாவின் ஆக்சன் முத்திரை- இயக்குநர் அனில் ரவிபுடியின் திருப்பங்கள் நிறைந்த விறுவிறு திரைக்கதை.. என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் மாஸ் என்டர்டெய்னராக இப்படம் தயாராகிறது. மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நட்சத்திர அந்தஸ்தை மனதில் வைத்து, இயக்குநர் அனில் ரவிபுடி சக்தி வாய்ந்த கதையை எழுதி இருக்கிறார். மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவுடன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார்.
படத்தின் பணிகள், படப்பிடிப்புடன் தொடங்கி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.