தமிழகத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘அந்தகன்’

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆக அல்லாமல் ரீமேடாக உருவாகியிருக்கிறது ‘அந்தகன்’. பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இபப்டத்தை தியாகராஜன் இயக்கி தயாரித்திருக்கிறார். சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அந்தகன்’ பிரமாண்டமான முறையில் வெளியாகிறது. மேலும், படத்தின் புரோமோஷன் பணிகளில் நடிகர் பிரஷாந்த், நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் ஆகியோர் பரபரப்பாக ஈடுபட்டு வருவதால், இணையதளம், சோசியல் மீடியா உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் அந்தகன் படத்தை பற்றிய செய்திகள் பரபரப்பாக வலம் வருகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘அந்தகன்’ ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது. படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரஷாந்த், “அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம். அதேசமயம் மர்மங்கள் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படமாகவும் இருக்கும். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை, ரீமெட் படம். 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும்.

கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது. இது நல்ல விசயம் தான்” என்றார்.