ஆபாச தளத்தின் பெயரில் தலைப்பு ஏன்? இயக்குநரிடம் பத்திரிகையாளர்கள் காரசாரமான கேள்வி!

பத்திரிகை மற்றும் ஊடகங்களை ‘எக்ஸ் வீடியோஸ் ‘ படக்குழுவினர் சந்தித்தனர்.அப்போது ஆபாச இணையதளத்தின் பெயரில் தலைப்பு வைத்தது ஏன்? என்று செய்தியாளர்கள் இயக்குநர் சஜோ சுந்தரிடம் காரசாரமாகக் கேள்வி கேட்டனர்.

அவர்கள் இது ஆபாசப் படம் தானே? என்ற போது “ஆமாம் இது ஆபாசப் படம்தான் “என்று தைரியமாகக் கூறினார்.”எக்ஸ் வீடியோஸ்” படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர்.

“மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது .
இது உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஆபாச இணைய தளங்கள் பற்றிப் பேசுகிற படம். அப்படிப்பட்ட இணைய தளங்களின் பெயரில் உலகளாவிய மாபியா கும்பல் செய்யும் அநியாயங்களைச் சொல்கிற படம். ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரத்தில் ஊடுருவி அவனது நிம்மதியைக் குலைக்கும் ஆபத்தைச் சொல்கிற படம் ” என்றவர் ,

” இன்று பரவி இருக்கிற செல்ஃபி மோகம் எந்தளவுக்கு விபரீதமானது என்று சொல்லும் கதை. காதலர்கள் தம்பதிகள் தங்களுக்குள் உணர்ச்சி வேகத்தில் எடுத்துக் கொள்ளும் வீடியோக்கள் எந்தளவுக்கு அபாயகரமானவை என்று எச்சரிக்கிற படமிது. இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் .ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது.’’ என்கிற இயக்குநரிடம்

அதற்காக இப்படியா ஆபாசமாகத் தலைப்பு வைப்பது? என்றபோது,

” இன்று திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வருவதே சிரமமாக இருக்கிறது. குறைந்தபட்ச ரசிகர்களை இழுக்கவாவது இந்தக் தலைப்பு உதவலாமே. கிளு கிளுப்பான எண்ணத்துடன் நுழைபவனுக்குக் கூட நல்ல பாடத்தைச் சொல்லியனுப்பும் இந்தப் படம். இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாகக் கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ”

அந்த ஆபத்து எந்தளவுக்கு என்று கூறும் போது ,
“கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான்.

நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.
இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை.

அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் எக்ஸ் வீடியோஸ்.”

இந்த சஜோசுந்தர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார். ..

கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

சென்னை,பெங்களூர்,மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது.

தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது.

படத்தில் ஐடி துறையில் இருக்கும் வ இளைஞர்கள் ஜாலியாக பொழுது போக்காக த்ரில்லுக்காகச் செய்யும் செயல்கள் செல்லும் விபரீதமான பாதையை படம் எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.

இப்படத்தைப் பார்த்த இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் என்று சஜோசுந்தரைப் பாராட்டியுள்ளார்.

படத்தில் புதுமுக நடிகர் நிஜாய் தலைமைப் பாத்திரம் ஏற்றுள்ளார். அர்ஜுன், அபினவ் ஆகியோர் நெகடிவ் பாத்திரங்களில் வருகிறார்கள். நாயகியாக ஆக்ருத்தி சிங் நடித்துள்ளார். பல நடிகைகள் நடிக்க மறுத்து கடைசியாக இவர் தைரியமாக நடித்துள்ளார்.

நாயகன் நிஜாய் பேசும் போது ” இந்தப் படத்தை இயக்குநர் பல ஆய்வுகள் செய்து கதை உருவாக்கிய பின்புதான் எடுத்துள்ளார். இதில் நான் இந்த வலையுலக தாதாக்களை எதிர்த்துப் போராடும் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். நல்ல சக்தி மிக்க பாத்திரம்..” என்றார்.

இவர் இப்போது வளர்ந்து வரும் நடிகர். நாயகனாக ‘மகா’ ,விக்ரம் பிரபுவுடன் ‘பக்கா’ , சுசீந்திரன் இயக்கும் ‘ஏஞ்சலினா ‘, அசோக் செல்வனுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.

படத்தில் முக்கிய வேடமேற்றுள்ள அர்ஜுன் பேசும் போது ” இந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் சஜோ அவர் உதவி இயக்குநராக’ பெங்களுர் நாட்கள் ‘படத்தில் பணியாற்றிய போது எனக்கு அப்படத்தில் நான் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் . பிறகு ‘புழல் ‘படத்தில் நடித்தேன். அவர் இயக்கும் இப்படத்திலும் முக்கிய பாத்திரம் கொடுத்துள்ளார். நெகடிவ் ரோல்தான் ஆனாலும் நடிக்க வாய்ப்புள்ள ரோல் . ” என்றார்.

இன்னொரு முக்கிய வேடம் ஏற்றுள்ள அபினவ் பேசும் போது, “எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். அதற்காக மும்பை பேரிஜான் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றேன். இதில் தான் ஷாரூக்கான் பயிற்சி பெற்றார்.
சோனி டிவியின் ‘சிஐடி’ தொடரில் நடித்தேன். திரைப்படத்தில் இது எனக்கு பெயர் பெற்றுத் தரும் வாய்ப்பு என்று சொல்வேன். இதில் ஐடி நிறுவனத்தில் இருக்கும் இளைஞனாக வருகிறேன் ” என்றார்.

லைன் புரொடியூசர் பரத் பேசும் போது “நான் பல கன்டைப் படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவன் இப்படத்துக்கு 50 நாட்கள் படப்பிடிப்பு நான்கு மாநிலங்களில் நடை பெற்றது. மும்பையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சிரமப்பட்டுப் படமாக்கினோம்.  
இந்தியில் இப்படத்தைப் பார்த்து விட்டுப் பெண்கள் பலரும் பாராட்டியதை மறக்க முடியாது. இந்தப் படம் சமுதாயத்துக்கு ஏற்ற விழிப்புணர் ஊட்டும் படம் நிச்சயம் ஓடும். ” என்றார் நம்பிக்கையுடன் .

இறுதியில் இயக்குநர் சஜோசுந்தர் கூறும் போது “இந்த ஆபாச இணைய தளங்களை வளைகுடா நாடுகளில் அனுமதிப்பதில்லை. நம் அருகில் உள்ள பாகிஸ்தானில் கூட தடை செய்து உள்ளனர். நம் நாட்டிலும் இதை ஒழித்துக் கட்டலாம். அதற்கான முன் முயற்சியை நான் தொடங்கி விட்டேன் உங்கள் ஆதரவு தேவை ” என்றவர், “இந்தப் படத்தைப் பெண்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பெண் பிரபலங்களுக்கான காட்சி ஒன்றும் திரையரங்குகளில் முதல் காட்சியைப் பெண்களுக்கென்றும் திரையிட இருக்கிறோம்.” என்றார் .

இப்படத்துக்கு ஒளிப்பதிவு வின்சென்ட் அமல்ராஜ்,, இசை மெட்ரோ புகழ் ஜோஹன், படத்தொகுப்பு ஆனந்தலிங்க குமார், கலை இயக்கம் கே.கதிர்.
இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார். .லைன் புரொடியூசர் பரத்.

இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.