அயலி அனுபவம் மறக்க முடியாதது: நடிகை அனுமோள்!

அனுமோள் கேரள சினிமாவின் இளம் நடிகை. தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்கள் மட்டுமே செய்யும் நடிகை. சினிமாவில் நடித்த படங்களில் எண்ணிக்கை குறைவே என்றாலும் நிறைவான கதாப்பாத்திரங்களால் ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடம் பிடித்துள்ளார். நாயகியாக மட்டுமே நடிக்க விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில் வலுவான கதாப்பாத்திரங்களை தயக்கமே இல்லாமல் செய்பவர். தமிழில் ‘ஓர் இரவினில்’ படத்திற்கு பிறகு தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் #அயலி தொடரில் அம்மாவாக கலக்கியிருக்கிறார்.

பெரும் பரபரப்பை கிளப்பின #அயலி தொடரில் அவரின் பயணம் குறித்து உரையாடியதிலிருந்து…

அயலிக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

உண்மையில் இந்த அளவு வரவேற்பு இருக்குமென நினைக்கவில்லை. எல்லோரும் பாராட்டுகிறார்கள். நினைக்காத இடத்திலிருந்தெல்லாம் பாராட்டு குவிந்து வருகிறது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ஒரு நாள் இரவில் ‘ படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளை என்றாலும் அயலி நல்ல பேரை வாங்கி தந்துள்ளது.

அயலி அனுபவம் எப்படி இருந்தது ?
இந்தக்கதை கேட்டவுடனேயே இதை மிஸ் பண்ணக்கூடாது என நினைத்தேன். ஏனென்றால் இது எனக்கு தெரிந்த வாழ்க்கை, என் அம்மாவுக்கு எனக்கு நடந்தது இது சொல்லப்பட வேண்டிய கதை. முத்துக்குமார் சார் அதை அத்தனை அழகாக திரையில் கொண்டு வந்தார். இப்போது எங்களுக்கு கிடைத்து வரும் பாராட்டு எல்லோருக்குமானது. எல்லோரும் அத்தனை உழைத்திருக்கிறார்கள். ஒரு சில படங்களில் தான் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அயலிக்கு அது நடந்துள்ளது.

அயலி புதுக்கோட்டை ஷூட்டிங் மறக்கவே முடியாது . இதில் நானே டப்பிங் பேசினேன் வழக்கு மொழி பேசி நடித்தது புது அனுபவமாக இருந்தது.

மலையாள திரைப்படம் பொதுவாக கலைநயம் சார்ந்த திரைப்படங்கள் மீது கவனம் செலுத்தும், தமிழ் சினிமா வணிக பாதைக்கான சினிமாவை அதிகமாக உருவாக்கும், இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் எதை பார்க்கிறீர்கள்?

அனைத்து சினிமாக்களிலும், வணிகமும் கலையும் இருக்க தான் செய்கிறது. பணம் இல்லாமல் இங்கு சினிமா உருவாவது இல்லை, அப்படியென்றால் எல்லா படங்களும் வணிகப்படங்கள் தான். நான் பணி புரியும் ஒரு சில சினிமாக்கள் நன்றாக வரும், சில படங்கள் நன்றாக வராது, இந்த இரண்டு வகை தான் இருக்கிறது. இப்போது வணிக்கப்படம், கலைப்படம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கிறேன், முதலில் தான் அப்படி இருந்தது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு மார்கெட் பெரியது. நிறைய தியேட்டர்கள் இருக்கிறது,அதுபோக கலாச்சாரமும் இங்கு வேறு மாறி இருக்கிறது. அது எல்லாம் சேர்த்து இங்கு ஒரு படத்தை உருவாக்குகிறது. படம் ஓடினால் வெற்றி அவ்வளது தான்.

அதிகமான தமிழ் படங்கள் நடிக்காதது ஏன்?

சரியான கதைகள் எனக்கு வருவதில்லை. இப்போது நல்ல கதைகள் வருகிறது. அதில் ஒன்று தான் இந்த அயலி. அடுத்து டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் #ஃபர்ஹானா வில் ஒரு நல்ல கேரக்டர் செய்துள்ளேன். நான் தமிழ் சினிமாவில் தான் எனது திரைப்பயணத்தை துவங்கினேன். எனது முதல் ஓடிடி வெப் சீரீஸும் தமிழில் தான் அமைந்து இருக்கிறது. அதுபோக தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் தமிழ்மொழிக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழில் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்க ஆவல்?

எனக்கு அனைத்து தமிழ் இயக்குநர்களையும் பிடிக்கும், எல்லோரது படங்களையும் விரும்பி பார்ப்பேன். அனைவரது படத்திலும் நடிக்க ஆசை. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது பார்க்கலாம்.

தமிழில் சமீபத்தில் நீங்கள் பார்ந்து வியந்த படம் ?
தமிழில் நிறைய படம் பார்ப்பேன்

ஜெய்பீம் திரைப்படம் என்னை மிகவும் ஈர்த்தது. அந்தப்படம் ஒரு பெரிய அதிர்வை உண்டு பண்ணியது.

எந்த மாதிரி கதாபாத்திரத்தை செய்வதற்கு ஆவலாய் இருக்கிறீர்கள்?

எந்த ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காகவும் நான் காத்திருக்கவில்லை. எனக்கு வரும் கதாபாத்திரங்களை நன்றாக செய்ய வேண்டும், அனைவரும் இதை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு இருக்கிறது. ஒரு கதாப்பாத்திரம் முதலில் எனக்கு பிடிக்க வேண்டும் என்னால் கனக்ட் செய்து கொள்ள முடிந்தால் அதை செய்துவிடுவேன் அவ்வளவுதான்.

இது உங்களது முதல் ஓடிடி சீரிஸ், சினிமாவிற்கும், வெப் சீரிஸ்-க்கும் உள்ள வேறுபாடு என்ன??

எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. சினிமாவை தொடர்ந்து பார்க்கலாம், ஆனால் வெப் சீரிஸ்க்கு நாம் இடைவெளி எடுத்து கொள்கிறோம். இது தான் எனக்கு வித்தியாசமாக தெரிகிறது. மற்றபடி சினிமாவுக்கான அத்தனை உழைப்பும் இதில் இருக்கிறது.

சினிமா இல்லாமல் டான்ஸராகாவும் கலக்கினீர்கள். ஆனால் முன்பு போல அதிகமாக நடன நிகழ்ச்சிகள் செய்வது இல்லையே?

ஆம்., கொரோனாவிற்கு பிறகு நடன நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டது. மீண்டும் அந்த பாதையில் பயணிக்க வேண்டும். திரைப்படங்கள் நேரத்தை அதிகமாக எடுத்து கொள்கிறது. அனைவரும் கேட்கிறார்கள், மீண்டும் பயிற்சி செய்து அதை தொடர வேண்டும்.

மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா?

முதலில் எனக்கு மொழி பற்றிய பயம் இருந்தது. ஆனால் நான் சமீபத்தில் ஒரு பெங்காலி படமும், சமஸ்கிருத படமும் நடித்து இருக்கிறேன். அதை செய்த பிறகு தான் கொஞ்சம் முயற்சி எடுத்தால், அனைத்து மொழிகளிலும் நடிக்கலாம் என்ற உத்வேகம் எனக்கு வந்தது. அயலி தெலுங்கிலும் வெளியாகி இருக்கிறது. அதனால் இனிமேல் தெலுங்கிலும் திரைப்படம் வரும் என்று நம்புகிறேன்.

உங்களுடைய அடுத்த படங்களை பற்றி கூறுங்கள்?

மலையாளத்தில் Tha Thavalayude Tha, Pendulum என்ற படங்களும், தமிழில் பர்கானா என்ற படமும் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. அதுபோக ஒரு சில படங்கள் போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது. இந்த வருடம் அயலி என்ற ஒரு நல்ல தொடருடன் துவங்கி இருக்கிறது. நல்ல கதைகள் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.