இந்தக் குளத்தில் கல்லெறியாதீர்கள் : பாரதிராஜா கண்டனம்!

கவிஞர் வைரமுத்துக்கு ஓஎன் வி குறுப் விருது அறிவிப்புக்கு எதிராகப் பரப்பப்படும் சர்ச்சைகள் குறித்து கண்டனம் தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘வணக்கம் .என் படைப்புகளில் முன்கதை பின்கதை கதாபாத்திரங்களின் உணர்வுகளை பாடல்களில் வார்த்தைகளை அடக்கி ஆளத் தெரிந்த ஒரு கவிஞனைத் தேடி அலைந்து கொண்டிருந்த நேரம்.

சங்கம் வளர்த்த நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களாக மெய்ஞானம் அறிந்த விஞ்ஞான கவிஞனைக் கண்டெடுத்து ஒரு பொன்மாலைப் பொழுதில் விதைத்தோம்.

வார்த்தை கவிதை
வரிகள் காவியம்.
வியப்பு!

இரண்டு வரிகளின் இடைவெளி கதை சொல்கிறது.

வார்த்தை புதிது
வரிகள் புதிது
என் தாய்மொழி புதிதாக உணர்ந்தேன்.

அரைநூற்றாண்டு அருகில் நிற்கிறோம்

என் கவிஞனைத்
திரும்பிப் பார்க்கிறேன்.

வில்லோடு வா நிலவே

கருவாச்சி காவியம்

கள்ளிக்காட்டு இதிகாசம்

தண்ணீர் தேசம்

மூன்றாம் உலகப்போர்

பத்மஸ்ரீ

பத்மபூஷன்

சாகித்ய அகாடமி

ஏழுதேசிய விருதுகள்

எண்ணற்ற படைப்புகள்

எண்ணற்ற விருதுகள்

விருட்சமாய் என் தமிழ்
உயர்ந்து நிற்கிறது

கர்வம் கொள்கிறேன்.

கேரள சகோதரர்களின் பேரன்பினால்
மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ‘ஓ.என்.வி’ எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது
அறிந்து மகிழ்வுற்றேன். ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதைக் கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.

சமீபகாலமாக

எம் இனத்தின் மீதும்

மொழி மீதும்

அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ, தனிமனித மாண்பிற்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களைக் கொண்டு மதம், இனம் ,மொழியாகப் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட இயலாத போரினைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டிக் கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும்.

தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர் ,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘ இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’
எறியட்டும்
அவர்களின் தாகம் தீரட்டும்.

குளம் என்பது கானல்நீர்.

நீ சமுத்திரம்.

அன்புடன்,
பாரதிராஜா

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.