‘கண்ணை நம்பாதே’ படம் குறித்து நடிகை ஆத்மிகா!

தனது ஈர்க்கக்கூடிய அழகு மற்றும் நடிப்புத் திறனால் நடிகை ஆத்மிகா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை ஆத்மிகா பகிர்ந்துள்ளார்.

நடிகை ஆத்மிகா கூறும்போது, ​​“ஒவ்வொரு நடிகைக்கும் தங்களின் திறமையை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்புள்ள கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ‘கண்ணை நம்பாதே’ எனக்கு அப்படிப்பட்ட ஒரு படம். இது என் சினிமா பயணத்தில் முக்கியமானதொரு படமாக இருக்கும். மு. மாறன் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது, கதையோடு ஒன்றி விட்டேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பது போல் இருந்தது. அவருடைய எழுத்தாற்றறில் உள்ள திறமை, அதை காட்சியனுபவமாக மாற்று விதம் அபாரமானது. உதயநிதி ஸ்டாலினுடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம். அவர் நிறைய சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை முடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவமுள்ள ஒரு படம். இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஆத்மிகாவும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.