‘கூகுள் குட்டப்பா ‘ விமர்சனம்

அறிவியலையும் சென்டிமென்ட்டையும் இணைத்து ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.அது ஒரு வெற்றிகர பார்முலாவும் கூட.அப்படி ஒரு பார்முலாவில் எடுக்கப்பட்ட படமிது. இப்படத்தில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பார்க்கலாம்.

தந்தையின் பிள்ளையாக வளரும் கோவை ரோபோடிக் இன்ஜினியர் இளைஞருக்கு, வெளிநாடு செல்ல ஆசை. அவரது தந்தை அதற்கு நேர்மாறானவர். இயற்கையோடு ஒட்டி வாழ விரும்புபவர். அவரைச் சமாதானப்படுத்தி, ஜெர்மன் செல்கிறார் மகன். போகிற அவர், தனிமையில் இருக்கும் தந்தையைக் கவனிக்க, தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்குத் தருகிறார். ஆரம்பத்தில் அதை வெறுக்கும் முதியவர், பின்னர், ரோபோவின் அன்பில் ஆழ்ந்து, அதையே மகனாகப் பாவிக்கிறார். 

பரிசோதனை முடிந்து ரோபோவைக் கேட்கிறார் நிறுவன முதலாளி. தர மறுக்கிறார் தந்தை. மீட்க இந்தியா வருகிறார் மகன். ரோபோ என்ன ஆனது? தந்தை விருப்பம் என்ன ஆனது? இது தான் கூகுள் குட்டப்பா.

இப்படி எளிமையாக இந்தப் படத்தின் கதையைக் கூற முடிகிறது. ஆனால், அதை இரண்டரை மணி நேரத்திற்கு எடுத்து வர, படாதபாடு பட்டுள்ளனர். எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முதல் பாதி எங்கெல்லாமே அலைந்து திரிந்து கதைக்கு வரும் போது, இடைவேளை வந்து விடுகிறது. 

ரோபோ என்று வரும் போது, அதனுடைய பெரிய அளவிலான பங்களிப்பைக் காட்சியாக்கவில்லை. தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார், எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத நடிப்பு. அதே நேரத்தில் மகனாக வரும் பிக்பாஸ் தர்ஷனின் நடிப்பு சுமார். நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா! ஆனால், அவர் நடிப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார். 

யோகி பாபு, பிளாக் பாண்டி, பூவையார் என சிரிப்பை வரவழைக்க எத்தனையோ பேர் இருந்தும், சிரிப்பு என்னவோ கடைசி வரை வரவில்லை. ஆனால், கே.எஸ்.ரவிக்குமார்-ரோபோ கூட்டணி கொஞ்சம் ஆறுதல். ஃப்ராங்க் ஸ்டார் ராகுல், சீரியஸ் ஸ்டார் ராகுலாக வருகிறார். சிரிக்க வைப்பவர்கள் சீரியஸாக தெரிகிறார்கள்.

கதைக்குள் நேராக வராமல், கதாபாத்திரங்களை அறிய வைக்க எடுத்துக் கொண்ட நேரமும், கலகலப்பை குறைத்து, செண்டிமெண்ட் ஏற்றுவதாக நினைத்து, பொறுமையை சோதித்ததும் தான் படத்தின் மிகப்பெரிய குறை. கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி பெரிய இயக்குநர் தயாரிக்கும் படத்தில் இவை கொஞ்சம் ஏமாற்றம் தான். ஒரே ஆளாக, கே.எஸ்., மட்டுமே படத்தைச் சுமக்கிறார். அவருக்கு ஒருவர் கூட கைகொடுக்கவில்லை; சில இடங்களில் ரோபோவைத் தவிர. 

ஒரு கட்டத்தில் அஞ்சலி பாப்பா போல் ரோபோவும் நம்முடன் இணைந்து விடுகிறது .ஆனால் மேலும் சுவாரசியப் படுத்தி இன்னும் உணர்ச்சி மயமாக்கி இருக்கலாம்.தவற விட்டு விட்டார்கள்.

ஜிப்ரானின் இசையில் பின்னணி மிகச்சிறப்பு. ஓரிரு பாடல்கள் கேட்கும் ரகம். மலையாளத்தில் வந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பனை அப்படியே எடுத்திருக்கலாம்.இயக்குநர்கள் சபரி- சரவணன், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்க வேண்டும். அர்வியின் ஒளிப்பதிவு கண்ணும் குளிர்ச்சி. எடிட்டர் பிரவீன் ஆண்டனியையோ, இன்னும் பிற தொழில்நுட்ப கலைஞர்களையோ இதில் குறை சொல்ல ஏதும் இல்லை.  

கூகுள் இல்லாத மனிதனே இல்லை… அப்படி இருக்கும் போது, குறைகள் இல்லாத கூகுள் குட்டப்பாவை அல்லவா தந்திருக்க வேண்டும். புதிதாக ஏதோ செய்ய இயக்குநர்கள் முயன்றிருக்கிறார்கள்.பாதிக்கிணறு தாண்டிய கதை.திரைக்கதையில் செப்பம் செய்து காட்சிகளில் உயிரோட்டம் காட்டியிருந்தால் இந்த படம் அனைவரையும் கவர்ந்த படமாக இருந்திருக்கும்.