ஜெயம் ரவியின் நன்றி அறிவிப்பு சந்திப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரதான நாயகன் அருள்மொழிவர்மனாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.அந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழலில் தனது பிறந்த நாளை ஊடகங்கள் மத்தியில் தனது மனைவியுடன் வந்திருந்து கொண்டாடினார் .அது மட்டுமல்ல அதை நன்றியறிவிப்பு சந்திப்பாகவும் நிகழ்த்திக் காட்டினார்.

அவர் பேசும் போது தனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் ஊடகத்துறையினரின் பங்கு மிகவும் முக்கியமானது. அப்படி தனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் அவர்களுடன் தனது பிறந்தநாளில் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதை மகிழ்ச்சியாகக் கருதி,அதை ஒரு நன்றி அறிவிப்பு சந்திப்பாகவும் நினைப்பதாகச் கூறினார்.

பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்றுக் காவியத்தில் நடித்ததற்காகத் தான் பெருமைப்படுவதாகவும் அதன் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் கூறினார். அறிமுகமானது முதல் இதுவரை நடித்த படங்களை எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடாமல், தேர்ந்தெடுத்து நடித்துள்ளதால் தரத்தின் அடிப்படையில் தேர்வு செய்து நடித்துள்ளதாகக் கூறினார்.

தனது முன்னேற்றத்தில் பெற்றோரைப் போலவே தனது சகோதரர் இயக்குநர் ராஜாவின் பங்கும் பெரிய அளவிலானது என்று கூறினார் .திருமணத்திற்குப் பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றி தனது மனைவி ஆர்த்தி வழிநடத்திச் செல்வதாகவும் கூறியவர் அவருக்கு நன்றி கூறினார்.

ஊடகங்களின் விமர்சனங்களையும் ஆலோசனைகளும் தான் எப்போதுமே எடுத்துக் கொள்வதாகவும் கூறினார். தவறுகளைச் சுட்டிக்காட்டும்படி வேண்டுகோள் விடுத்தவர் அப்படி சுட்டிக்காட்டப்படும் போதுதான் அந்த விமர்சனங்கள் தனக்குள் , கர்வம் வளரவிடாமல் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறினார்.