புதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை!

ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் ‘முன் பதிவு ‘. இப்படத்தை ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார்.இவர் பல குறும்படங்கள், விளம்பரப் படங்களை இயக்கியவர் .கதை திரைக்கதை சார்ந்து தீவிரமாக இயங்கிய அவர் நண்பர்கள் மூலம் மலையாளப் பக்கம் போய் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் .சென்ற ஆண்டு ‘ திரைக்கு வராத கதை’ என்றபடம் தமிழில் வந்தது. அது மலையாளத்தில் ‘கேர்ள்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. அதில் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
துரைபாண்டியன் இயக்கும் முதல் படம் தான் ‘முன்பதிவு’.டைரக்டர் துளசிதாஸ் எனது நண்பர் அவரிடம் பல படங்களுக்கு நான் பணிபுரிந்துள்ளேன்.

படத்தின் கதை என்ன என்ற போது, “இன்று இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிடும் ஒரு பிரச்சினை பாலினக் கவர்ச்சி என்கிற பிரச்சினைதான். பால்யப்பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாகப்புரிந்து கொண்டு தங்கள் எதிர்காலத்தையும் நண்பர்கள் பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் முன்பதிவு .இந்தக் கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது.

கதையைக் கேட்டவர் ஒரு நிபந்தனை விதித்தார். சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அது.

இளையராஜா இசை அமைக்கச் சம்மதித்ததும் படத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்துவிட்டது.” என்கிறார் இயக்குநர் துரைபாண்டியன்.

இளையராஜா ஒரு பாடலைப் பதிவு செய்து கொடுத்துவிட்டார். ஜூன் 26ஆம் தேதி மற்ற பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளன.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார் .தமிழ் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கூத்துப்பட்டறைக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு மஞ்ச்லால். இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் பணி பற்றியவர். எடிட்டிங் பீட்டர் பாபியா.

‘முன்பதிவு’ விரைவில் படப்பிடிப்பு .