‘மாவீரன்கிட்டு’ படத்துக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு!

mvk1ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்தி ஒலிக்கின்ற ஒரு படமாக அமைந்துள்ளது என ‘மாவீரன்கிட்டு ‘ படத்தைத் தொல்.திருமாவளவன் பாராட்டினார்.
அவர் கூறும்போது ,”ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்தி ஒலிக்கின்ற ஒரு படமாக, அடித்தட்டிலே இருப்பவர்கள் ஆவேசமாக பேசும் குரலாக   இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘மா வீரன் கிட்டு’ திரைப்படத்தை இன்று காண வாய்ப்பு கிடைத்தது. சமுகத்தில் நடக்கின்ற எதார்த்தமான போக்குகளையும் சாதி இந்த சமுதாயத்தில் எப்படி ஒடுக்கப்படுகிறது எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றன, எந்தளவிற்கு முரண்பாடாகக் கொண்டு இருக்கின்றது என்பதனை மிக எதார்த்தமாக சொல்லும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் மட்டுமல்ல இப்படத்தை தயாரித்து இருப்பவர் ,வசனம் எழுதி இருப்பவர் அனைவரும் மிக துணிச்சலாக இதைச் செய்துள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தில் வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஓரிடத்தில் அதிகாரத்தில் இருப்பவரை நாங்கள் தவறு சொல்லவில்லை அதிகாரமே தவறு என சொல்கிறோம்  என்ற வசனம் மிக அழகாக உள்ளது. அதிகாரம் எந்தளவிற்கு எளியவர்களை ஒடுக்குகின்றது எனவும் கூறும் விதத்தில் சாட்சியமாக அமைந்துள்ளது இப்படம்.
காவல் அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி , அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் எந்தளவிற்கு சாதிக்குத் துணை நிற்கின்றனர் என்பதனை இப்படம் குறிப்பிடுகிறது. மேலும் சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில்உள்ளது .அதற்கும் மேலாக காதல் என்பது மேலானது உயர்வானது அதை கட்டுப்படுத்த இயலாது என்பதனையும். மேலும் ஒடுக்கபட்டவர்களில் சிலர் விலைபோகிறவர்கள் இருப்பதால் அந்த புரட்சிகரமான போராட்டம் தோல்வியாக அமைகிறது.
இறுக்கமான சாதி அமைப்பினுள் மிகச்சிறந்த ஜனநாயகவாதிகள் இருக்கின்றார்கள் என்பதனை உணர்த்தும் விதமாக மிகச் சிறந்த ஜனநாயகவாதியாக கதாநாயகனின் தந்தை மிகச் சிறந்த முறையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் போராடினால் ஒரு போராட்டம் வெல்லாது. அதனோடு சில ஜனநாயக மனிதர்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு போராட்டம் வெல்லும் என்பதனை இப்படம் விவரிக்கிறது. தியாகத்தினால் கிட்டு மாவீரனாக இருக்கின்றார். மக்களுடைய போராட்டம் என்பது ஒருவனை மாவீரனாக்குகிறது . ஒரு மாவீரன் மக்கள் போராட்டத்தை கட்டமைக்கிறான் என்பதனை உணர்த்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளது ”என்றார்   தொல்.திருமாவளவன்.