தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 ,2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.
ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த “தேஜாவு” திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான “வித்தைக்காரன்” படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது. அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், அஜித் நடித்த “துணிவு” மற்றும் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. தயாரிப்பிலும், விநியோகத்திலும் சமநிலையை பேணிக் கொண்டு வளர்ந்து வரும் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகஒயிட் கார்பெட் பிலிம்ஸ் இன்று திகழ்கிறது.
“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


