பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமானஆர். எஸ். இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள திரைப்படம் ‘மண்டாடி’.
நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அறிமுக நடிகரான சுகேஷ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை S. R. கதிர் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை D. R. K. கிரண் கவனித்துள்ள நிலையில், எடிட்டிங் பணியை பிரதீப் E. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் மற்றும் மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளனர். இயக்குநர் மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத் தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் பேசும்போது, “படத்திற்கு எது நல்லதோ அதை செய்வேன். கடலில் ஒளிப்பதிவு செய்வது சுலபமல்ல. பெரும்பாலும் கடலில் படம் எடுத்து தோற்று போனவர்கள்தான் அதிகம். ஒரு சில காட்சிகளை மட்டும் கடலில் எடுத்துவிட்டு மீதியை க்ரீன் மேட் போட்டு சிஜே வேலைகள்தான் பார்ப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், படம் முழுக்க கடலிலேயே எடுத்து வந்திருந்தார்கள். அப்போதுதான் தயாரிப்பாளருக்கு சினிமா மீதிருந்த ஆர்வம் புரிந்தது. சூரி சார் இந்த படத்திற்கு பிறகு மிகப் பெரிய இடத்திற்கு செல்வார். சத்யராஜ் சாரின் கெட்அப்பை பார்த்து அசந்துவிட்டேன்” என்றார்.
நடன இயக்குநர் அசார் பேசும்போது, “என்னை முதன்முதலில் அங்கீகரித்தது ஜி.வி.சார்தான். கதிர் சாருடன் சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து பயணிக்கிறேன். ‘மண்டாடி’ பாடல் ஏசி செட்டில் எடுத்தோம். சூரி அண்ணன் இடைவெளியில்தான் வந்து ஆடினார். மஹிமா சிறப்பாக ஆடினார். சத்யராஜ் சாருடைய கெட்அப்பை பார்த்து நானும் அசந்து விட்டேன்..” என்றார்.
சண்டை இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசும்போது, “சூரி அண்ணன் இந்தப் படத்தில் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். வெற்றி மாறன் சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் சார் எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. உண்மையான மீனவர் கெட்அப்பில் சத்யராஜ் சாரை பார்த்து மெய் மறந்து நின்றோம்” என்றார்.
நடிகர் மிதுன் ஜெய்ஷங்கர் பேசும்போது, “சுகா சார், நீங்கள் படத்தில் வில்லன். ஆனால் நிஜத்தில் அழகான மனிதர். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நான் இரண்டு படங்கள்தான் நடித்திருக்கிறேன். அந்த படங்களை அவர் பார்த்ததில்லை என்பதை முதலிலேயே கூறிவிட்டார். இருந்தாலும் இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி. அவர் நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் 29 நிமிடங்கள் இருக்கும். அதன் படப்பிடிப்பு நடந்தபோது சூரி சாருக்கு பலத்த அடிபட்டது. எனக்கும், என்னுடன் நடித்தவர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டது. நாங்கள் சோர்ந்து இருந்த சமயத்திலும் சிறிதும் சோர்வு குறையாமல் சூரி சார் இருந்ததை பார்த்துதான் நாங்களும் சக்தியைப் பெற்றோம்” என்றார்.
நடிகை கிருத்திகா பேசும்போது, “இது போன்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மிக்க நன்றி. சூரி சார் உங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் போராடித்தான் வந்திருப்பீர்கள். எங்களை போன்று வளர்ந்து வரும் கலைஞர்களின் போராட்டங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி” என்றார்.
நடிகர் பால சரவணன் பேசும்போது, “இந்த ‘மண்டாடி’ மாபெரும் படம். பட்ஜெட்டில், பிரமாண்டத்தில் எப்படி வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், உழைப்பால் மாபெரும் படம் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
2014ஆம் ஆண்டு ‘டார்லிங்’ படத்தின்போது தினமும் ஜி.வி.பிரகாஷ் அலுவலகத்தில்தான் எப்பொழுதும் இருப்பேன். அவர், “நீ ஏன் எப்பொழுதும் எங்கே இருக்கிறாய்?” என்று கேட்பார். அதேபோல், “இங்கு வர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்க வேண்டும்” என்று கூறுவார். அதுபோல் இன்று நான் இருக்கிறேன். அதற்கு நான் அவருக்கு நன்றியும் கூறுகிறேன். அவர் அலுவலகத்திற்கு வர முடியாததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
விடா முயற்சி, கடின உழைப்பு என்று என்ன பெயர் வைத்தாலும் அதற்கு மொத்த உருவமும் எங்கள் சூரி அண்ணன்தான். அடிபட்டு ரத்தம் கொட்டினாலும் மருந்துகூட போடாமல் தொடர்ந்து நடித்தார். “பத்து நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் மருந்து கூட போடாமல் ஏன் நடிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “இது கடல் என்பதால் படகு மற்றும் கேமரா லைட் மறுபடியும் செட் செய்வதற்கு அரை நாள் ஆகிவிடும் என்பதால் தொடர்ந்து நடித்தேன்” என்று மற்றவர்கள் மீதும் அக்கறை கொண்டு பேசினார்.இப்படத்தில் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். படமும் நன்றாக வந்திருக்கிறது. செப்டம்பர் 10 அன்று நீங்கள் அனைவரும் இந்த படத்தைப் பார்க்கும்போது அனைவருக்கும் புரியும்” என்றார்.
நடிகை மஹிமா பேசும்போது, “எல்லாருக்கும் வணக்கம். இந்த ‘மண்டாடி’ படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இந்தப் படத்துக்காக ஒட்டுமொத்த குழுவும் போட்ட உழைப்பும், ஆர்வமும் ரொம்பப் பெருசு.
ஆரம்பத்துல இந்தப் படத்தை வெறும் 35 நாள் ஷூட்டிங்ல முடிச்சிடலாம்னுதான் பிளான் பண்ணோம். இது ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிரும்னுதான் நானும் நெனச்சேன். ஆனா, மதி இந்த படத்தை இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு படைப்பா மாத்தியிருக்கார்ங்குறது நிஜமாவே நம்ப முடியல. அவரோட அந்தப் பார்வை நான் ஆரம்பத்துல எதிர்பார்த்ததைவிட பல மடங்கு பெருசா வந்திருக்கு.
இந்தப் படத்துல வேலை செஞ்ச குழு சந்திச்ச சவால்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. குறிப்பா நடுக்கடல்ல தினமும் 14 மணி நேரம் ஷூட்டிங் பண்றதுங்குறது சாதாரண விஷயம் கிடையாது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் சாரோட உழைப்பைப் பத்தி சொல்லியே ஆகணும். கடலோட அந்த ஆழமான தன்மையை இவ்ளோ தத்ரூபமா கேமரால கொண்டு வர்றது ஈஸியான காரியமே கிடையாது, ஆனா அதை அவர் மிகச் சிறப்பா செஞ்சிருக்கார்.
அதே மாதிரி பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்… எனக்குத் தெரிஞ்ச மிகவும் கடின உழைப்பாளியான, தைரியமான ஒரு ஆக்ஷன் டைரக்டர் அவர்தான். இந்தப் படத்துல அவரோட அசாத்தியமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ் அவரோட ஷார்ப்பான கட்ஸ் மூலமா படத்தோட அந்த விறுவிறுப்ப கொஞ்சமும் குறையாம கொண்டு போயிருக்கார்.
முக்கியமா சூரி… இந்த படத்துல சூரியோட உழைப்பும், அவரோட அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் ரொம்பப் பெருசு. அவ்ளோ டயர்டா இருந்தாலும், உடம்புல சின்னச் சின்ன காயங்கள் பட்டாலும்கூட எந்தவொரு ஷாட்டுக்கும் அவர் சமரசம் செய்யவே இல்லை. ஒரு துணை நடிகரா தன் பயணத்தைத் தொடங்கி, இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்துல ஒரு ஹீரோவா உயர்ந்திருக்கார்னா, அதுக்கு அவரோட அந்த விடாமுயற்சிதான் காரணம்.
‘மண்டாடி’ படம் கமர்ஷியலா ஒரு மாபெரும் வெற்றியைப் பெறுவதோடு மட்டுமில்லாமல், இந்த படத்துல வேலை செஞ்ச அத்தனை பேரோட அசாதாரண திறமைக்கும் இது ஒரு அடையாளமா இருக்கும்னு நான் உறுதியாக நம்புகிறேன். படம் பெரிய வெற்றியடைய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி!” என்றார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, “இயக்குநர் மதியுடன் ‘உதயம் என்.எச்4’ படத்திலிருந்தே நெருங்கிய நட்பு இருக்கிறது. அவருடைய இரவு, பகல்பாராத கடின உழைப்பும் சினிமா மீதான ஆழமான பார்வையும் அவரை இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விரைவில் உயர்த்தும். எந்த ஒரு சவாலான விஷயத்தையும் துணிச்சலாகவும் பிரமாண்டமாகவும் கையாளும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இந்த படத்தையும் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்து மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்” என்றார்.
சண்டை இயக்குநர் பீட்டர் ஹெயின் பேசும்போது, “இந்த ‘மண்டாடி’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், குறிப்பாக நடுக்கடலில் படமாக்கப்பட்ட படகு துரத்தல்(Boat Chase) காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் அனுபவமாக அமையும். தனது 34 கால சினிமா பயணத்தில் எக்ஸ்ட்ரீமான ஒரு சண்டைக் காட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசையை இயக்குநர் மதி இந்தப் படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கும் எனது நன்றி. நள்ளிரவிலும் சுறுசுறுப்பாக பணியாற்றிய இயக்குநர் மதியின் அர்ப்பணிப்பு இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இப்படத்தின் நாயகன் சூரி, எந்தவொரு கடினமான காட்சிக்கும் ‘முடியாது’ என்று சொல்லாமல் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஒரு சண்டைக் காட்சியின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், மீண்டும் கரைக்குத் திரும்பாமல் நடுக்கடலிலேயே சக்கர நாற்காலி உதவியுடன் படகில் அமர்ந்தபடியே காட்சிகளை முடித்துக் கொடுத்த சூரியின் அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அவருக்கு இணையாக நடிகர் சுஹாஸும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மோட்டார் போன்ற எந்தவித நவீன தொழில் நுட்பமும் இன்றி, இயற்கையோடு போராடி காற்றின் விசையை மட்டுமே நம்பி சுமார் 20 கிலோ மீட்டர் தள்ளி நடுக்கடலில் படமாக்கப்பட்ட இந்தப் படகு துரத்தல் காட்சிகள் மிகவும் சவாலானதாக அமைந்தது.
இப்படிப்பட்ட மிகக் கடினமான சூழலிலும் ஒவ்வொரு படகிலும் கேமராக்களை பொருத்தி நேர்த்தியாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநரின் உழைப்பு மிகப் பெரியது. சண்டைக் கலைஞர்கள் மட்டுமின்றி, படப்பிடிப்பிற்கு உறுதுணையாக இருந்த உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் இப்படம் சிறப்பாக உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.
சில நாட்களில் மோசமான வானிலையால் ஒரு காட்சிகூட படமாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், மணி மற்றும் சொக்கு ஆகியோர் எவ்வித அழுத்தமும் இன்றி நடிகர்களுடன் படகிலேயே தங்கி முழுமையான ஆதரவை வழங்கினர். ஒரு போர்க்களத்தில் நிற்பது போன்ற சவாலான சூழலிலும் ஒட்டு மொத்தக் குழுவும் இணைந்து உருவாக்கியுள்ள ‘மண்டாடி’, திரையரங்குகளில் ஒரு மாபெரும் ஆக்ஷன் விருந்தாக அமையும்” என்றார்.
நடிகர் ரவீந்திர விஜய் பேசும்போது, “எனக்காக இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் நேரடி தமிழ்ப் படம். சின்ன வயதிலிருந்தே தமிழ் சினிமாவின் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையும் ஈர்ப்பும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு இண்டஸ்ட்ரியில் இவ்வளவு சிறப்பான, சவாலான மற்றும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம். என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மதிமாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ஒரு பொண்ணுகிட்ட காதலைச் சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்காகக் காத்திருப்போம் இல்லையா? அந்த மாதிரி ஒரு மனநிலையில்தான் நான் இப்போ இருக்கேன். தமிழ் மக்கள் என்னையும் என் நடிப்பையும் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்.
எங்களுடைய தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாரைப் போல ஒரு தைரியமான தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. எந்தவொரு இடத்திலும் படத்திற்காக சமரசம் செய்துகொள்ளவே மாட்டார். இயக்குனர் ஒரு காட்சிக்கு 500 துணை நடிகர்கள் வேண்டும் என்று கேட்டால், எந்த கேள்வியும் கேட்காமல் 1500 பேரை ரெடி பண்ணிக் கொடுக்கும் மாஸான ப்ரொடியூசர் அவர். இந்த படத்திற்காக அவர் கொடுத்த ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி சார்.
சத்யராஜ் சார் இவ்வளவு பெரிய லெஜண்ட்டாக இருந்தாலும் எங்களிடம் ரொம்பவே எளிமையாகப் பழகினார். அவருக்கு என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் கதிர் சாருடைய பணிக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவர் கேமராவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை. மஹிமா, மிதுன், பாலசரவணன் என அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். சுஹாஸைப் பற்றி சொல்லணும்னா, அவரோட முகத்துல ஒரு டுவாலிட்டி (Duality) இருக்கும். ஒரு பக்கம் ரொம்ப அப்பாவியாவும் தெரிவார், இன்னொரு பக்கம் மிரட்டலான வில்லனாகவும் மாறுவார். இந்த படத்தில் அது நன்றாக வேலை செய்திருக்கிறது.
சண்டைக் காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்ன், மகேஷ் மாஸ்டர், திலீப் சுப்பராயன் மற்றும் அசார் மாஸ்டர் ஆகியோருக்கு ரொம்ப நன்றி. முக்கியமா தொண்டி கிராமத்தில் நடுக்கடலில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, எங்கள் உடனே இருந்து எங்களைப் பாதுகாத்த அந்த ஊர் படகு ஓட்டிகளான சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நீங்கள் இல்லையென்றால் அந்த கடலில் நாங்கள் எதுவுமே செய்திருக்க முடியாது.‘மண்டாடி’ திரைப்படம் தியேட்டரில் ஒரு பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். ரொம்ப நன்றி!” என்றார்.
இயக்குநர் மதிமாறன் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் படக் குழுவினர், ஊடக நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். முக்கியமாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தொண்டி, பாசிப்பட்டினம், முள்ளிமுனை மற்றும் ‘மண்டாடி’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கம். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் எல்லார் பெயரையும் கூறிவிட்டார், அதனால் நான் பெயர்களை சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
இந்த ‘மண்டாடி’ படம் எனக்கு ஒரு பெரிய பயணம். என் மனதின் ஆழத்திலிருந்து முதல் நன்றியை இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் இவ்வளவு பெரிய பிரமாண்டமாக உருவாக அவர்தான் காரணம். வாழ்க்கையில் நான் எந்த இடத்திற்குச் சென்றாலும் எனக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பவர் வெற்றி சார். அவர் இல்லையென்றால் என்னால் இன்று இங்கு நிற்க முடியாது. நான் அவர் எடுத்த ‘ஆடுகளம்’ படத்தில் வேலை செய்யவில்லை என்றால், இன்று இந்த ‘மண்டாடி’ படத்தை எடுத்திருக்க முடியாது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தை உருவாக்குவதற்கு மூன்று முக்கிய நபர்கள் காரணம். முதல் நபர், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார். ஒரு இயக்குநரின் கனவை நம்பி அதை நிறைவேற்றிக் கொடுக்கும் தயாரிப்பாளரை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அடுத்து என்னை இந்தக் கதையுடன் இணைத்தது ‘கடல்’.
கடல் சார்ந்த இந்த கதைக்காக நான் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரைத் தேடினேன், அப்போதுதான் எனக்கு சார் கிடைத்தார். நான் கேட்டதை அவர் கொடுத்தார், அவர் கேட்டதை நான் கொடுத்தேன். என்னிடம், “எனக்கு பிரஷர் ஹேண்ட்லிங், டெட்லைன்லாம் வராது” என்று கூறினார். படப்பிடிப்பு நேரத்தில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் மணி அவர்களுக்கு என் நன்றிகள்.
இரண்டாவது நபர், சூரி சார். நீங்கள்தான் இந்த படத்தின் உயிர். படப்பிடிப்பின்போது உங்களுக்கு நிறைய கஷ்டங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் நான் உங்களைக் கவனிக்க முடியாமல் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சூரி சாருக்கும் எனக்கும் நடந்த ஒரே ஒரு சம்பவம் பற்றி சொல்கிறேன்.
‘பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம், காதலில் முடிந்தது’ என்பது போலத்தான் சூரி சாருக்கும் எனக்குமான உறவு இருந்தது. படப்பிடிப்பு முடிந்து வந்துவிடுவோம். மறுநாள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அதே ஈடுபாட்டுடன் சூரி சார் வந்து நிற்பார். ஒருநாள் அவரிடம், “ஏன் சார், தூங்கவில்லையா?” என்று கேட்டேன். “ஆமாம், ஊர் புதுசா இருக்கிறதால தூக்கம் வரல” என்றார். இரண்டாவது நாளும் தூங்கவில்லை என்று சொன்னார். மூன்றாவதாக என் உதவி இயக்குநர் என்னிடம், “சூரி சார் தூங்காததற்கு நீங்கள் தான் காரணம்” என்று கூறினார். அப்போதுதான் நான் சூரி சாரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தப் படத்திற்காக அவர் செய்த தியாகங்கள், யூடியூப் கமெண்ட்ஸில் அவர் பெற்ற பாராட்டுகள் அனைத்திற்கும் அவர் தகுதியானவர். சூரி சாருக்கு இந்தப் படம் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின்போது எங்களுக்குச் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டன. இருப்பினும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு எனக்காகவும் படத்திற்காகவும் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுஹாஸ் சார், ஜி.வி. சார், சத்யராஜ் சார், மகிமா, மற்றும் ஒட்டுமொத்த டெக்னிஷியன்ஸ், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனக்கு இந்தப் படத்தைக் கையாளுவதற்குப் பெரிய சவாலாக அமைந்தது தொழில் நுட்பக் கலைஞர்கள்தான். என்னைச் சுற்றி எப்போதுமே பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், கதிர் சார் போன்ற பெரிய டெக்னிஷியன்ஸ் இருப்பார்கள். பீட்டர் மாஸ்டருக்கு நிறைய டார்ச்சர் கொடுத்திருக்கிறேன். கதிர் சார், “கேமரா கடலில் விழுகக் கூடாது, ஒரு பாதுகாப்பான கோணத்தில் வைக்கலாம்” என்று சொன்னபோது, அவர் ஒரு ப்ரொபசர்போல வரைபடம் வரைந்து காட்டி, நான் நினைத்ததைச் சாதித்துக் கொடுத்தார். எடிட்டர் பிரதீப், பாலா சார் மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றி.
மகிமா, உங்கள் வயதிற்கு மீறிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததற்கு நன்றி. இந்த பெரிய படகை இயக்குவதற்கு எனக்கும் மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது என் உதவி இயக்குநர்கள்தான். குறிப்பாக அமீர் மற்றும் ஹாரிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படம் என்னைக் கண்டுபிடித்ததா அல்லது நான் இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி பாரம்பரிய விளையாட்டோ, அதேபோல்தான் மீனவர்களின் இந்த பாய்மரப் படகுப் பந்தயமும். இதற்கும் அரசாங்கம் மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கி அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி நடந்தால் அதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி!” என்றார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “எல்லாருக்கும் வணக்கம். கிளீன் ஷேவ் பண்ணிட்டு இந்த ஈவென்ட்டுக்கு வந்தவங்களுக்கு எல்லாம் இப்போ தாடியே முளைச்சிருச்சு! நானே கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்னு நினைச்சேன், ஆனா நான் வந்ததுக்கு அப்புறமே ஒரு மூணு நாள் ஆகியிருக்கு இந்த ஈவென்ட் நடந்து முடியறதுக்கு.
ராமநாதபுரம் மாவட்டத்துல இருந்து பாசிப்பட்டினம், தொண்டி மற்றும் இன்னும் சில ஊர்கள்ல இருந்து வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் மிகப் பெரிய நன்றி. நீங்க இல்லைன்னா இந்த ஈவென்ட்ல இந்த ஆரவாரமும் கூச்சலும் இருந்திருக்காது; இவ்ளோ சிறப்பா நடக்குறதுக்கு நீங்கதான் காரணம்.
இந்த படத்தோட டைரக்டர் மதி, செமையா பேசுனீங்க. நீங்க ஒரு ஃபர்ஸ்ட் டைம் டைரக்டர் மாதிரி பேசல. உங்ககிட்ட ஒரு தனி ‘Swag’ இருக்கு. இது உங்களுடைய முதல் பிளாக்பஸ்டரா அமைய வாழ்த்துகள். கதிர் சார், செம எடிட்டர் பிரதீப் ஈ ராகவ், பாலசரவணன், மிதுன், மகிமா, சுஹாஸ் சார்னு எல்லாருக்கும் என்னோட வாழ்த்துகள். மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், கடலுக்கு நடுவுல அவ்ளோ கஷ்டப்பட்டு கோர்ட் போட்டு ஷூட் பண்ணிருக்கீங்க.
நான் வெற்றிமாறன் சார்கிட்ட கேட்டப்போ, ‘அவர் கோர்ட் போடாம வந்த ஒரே ஸ்பாட் என்னோட செட்டுதான்’னு சொன்னாரு. இப்படி ஒரு படத்துக்காக இவ்ளோ தூரம் உழைச்ச அத்தனை டெக்னீஷியன்களுக்கும் வாழ்த்துகள்.
இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு நீங்க நினைக்கலாம். நான் இங்க வந்திருக்கறதுக்கு ஒரே காரணம் என் நண்பர் சூரி சார்தான். அன்பாலே அடிப்பீங்க சூரி சார். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சதில்ல, எங்களுக்குள்ள எந்த வொர்க்கிங் ரிலேஷன்ஷிப்பும் கிடையாது. ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் மானசீகமான அன்பும், மரியாதையும் வெச்சிருக்கோம்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க காமன் ஃப்ரெண்ட் உதய் மூலமாதான் நாங்க பேச ஆரம்பிச்சோம். எனக்கு ஒரு பிரச்னை வந்தப்போ, ஃபர்ஸ்ட் கால் பண்ணி ஆறுதல் சொன்னது அவர்தான். படம் ஜெயிச்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டதும் அவர்தான். நீங்க எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் சார்.
1999-ல வந்த ‘சங்கமம்’ படத்துல விஜயகுமார் சாரோட கார் வரும்போது, கேட்டைத் திறந்து விட்டுட்டு 10 பேர் இடிச்சிட்டு போவாங்க; அதுல ஒருத்தர் பறந்து போவாரு, அதுதான் சூரி சார். அந்தப் படத்துல இருந்து, ஒரு ஹீரோவா அவர் தனக்கான இடத்தைப் பிடிக்க 25 வருஷம் ஆகியிருக்கு.
அவர் யாருக்காகவும் தன்னோட இடத்தை விட்டுக் கொடுக்கல. ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டா, எலக்ட்ரீஷியனா, கார்பென்டரா, காமெடியனா இவ்ளோ தூரம் போராடி ஜெயிச்சிருக்காரு. இந்த இடத்துல முன்னாடி எல்லாம் இவ்வளவு ஈஸியா உள்ள வர முடியாது. எல்லாரும் ‘அவன் ஆக முடியாது, இவன் ஆக முடியாது’னு சொல்லுவாங்க. ஆனா, விடாமுயற்சியால எவ்ளோ தூரம் வர முடியும்னு அவர் நிரூபிச்சிருக்காரு.
இன்னைக்கு நான் வீட்ல இருந்து வரும்போது எல்லா இடத்துலயும் சூரி சாருக்கு பிறந்த நாள் போஸ்டர் ஒட்டியிருந்தது. அதுதான் உண்மையான வளர்ச்சி. போஸ்டர் நம்மளே ஒட்டிக்கலாம், ஆனா அந்த அன்பை மக்கள் கொடுக்கணும்.
படத்துல உங்களோட டான்ஸ் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. உங்க ஃபேமிலி டிசைன் பண்ண இந்த டிரஸ்ல, கோர்ட் போட்டுட்டு, கால் மேல கால் போட்டு இன்னும் நிறைய வளருங்க. செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் ‘மந்தாடி’ படம் இந்த வருஷத்தோட மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைய ஒட்டு மொத்த படக் குழுவுக்கும் என் வாழ்த்துகள். நன்றி!” என்றார்.
இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது, “எனக்கு ‘வெற்றிமாறன்’னு பேர் வச்சதே ‘மதிமாறன்’னுடைய அப்பாதான். அந்த வகையில எனக்கு இவரு மாமா பையன்தான். அவர் என்னைவிட பெருமையா இருக்கிறதுக்கு அவருக்கு எல்லாத் தகுதியும் இருக்கு. மதி என்கிட்ட, ‘நான் சினிமாக்கு போறேன், நீங்களும் வர்றீங்களா?’ன்னு கேட்டாரு. நான் இன்ஜினியரிங் முடிச்சதுக்கப்புறம் அவர்கிட்ட நான் அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை செய்ய விருப்பம்ன்னு சொன்னேன். ஆனா அவங்க அம்மா ‘நீ ஒரு செமஸ்டராவது முடிச்சிட்டு வா’ன்னு சொல்லிட்டாங்க.
நான் செமஸ்டரை முடிச்சிட்டு, நேரா அவர்கிட்ட போகாமல் ஜி.வி. ஸ்டுடியோல போய் ‘ஷார்ட் ஃபிலிம்’ ஒண்ணை எடுத்து அவருக்குக் காட்டுனேன். ஏன்னா அவர் எப்பவுமே தகுதி அடிப்படையிலதான் வேலை செய்வார். எனக்குத் தகுதி இருக்கான்னு அவர் பார்த்தாரு. அதுக்கப்புறம்தான் என்னை அவருக்கு அசிஸ்டன்ட் ஆக்கினார்.
அவர் எப்பவுமே ஒரு விஷயத்தை செஞ்சதுக்கப்புறம்தான் எல்லாரிடமும் காட்டுவார். அப்படி ஒரு முறை எனக்கு ஒரு ஷார்ட் ஃபிலிம் காமிச்சதுக்கப்புறம், ‘அடுத்து ஒரு படம் எடுக்கப் போறேன்’னு சொன்னாரு. அவரோட ‘விஷன்’ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
அதுக்கப்புறம் ‘விடுதலை’ படத்துல நான் ஒர்க் பண்ணும்போது, போஸ்ட் புரொடக்ஷன்ல அவர் என்னையும் என் டீமையும் நைட் 3 மணிவரைக்கும்கூட ஒர்க் பண்ண சொல்லுவாரு. அப்போ அவருடைய கமிட்மென்ட், ஸ்கிரிப்ட் மேல இருக்கிற தெளிவு, எல்லாமே ரொம்பப் பெருசா தெரிஞ்சது. இதுக்கெல்லாம் காரணம் எல்ரெட் குமார் சாரும், மணி சாரும்தான். அவங்க கொடுத்த சுதந்திரம்தான் இதைச் சாத்தியமாக்கியது.
இப்படி ஒரு பெரிய படத்தைப் பண்றதுக்கு எல்ரெட் குமார் மாதிரி ஒரு தயாரிப்பாளரால மட்டும்தான் முடியும். ஏன்னா அவர் ஒரு தயாரிப்பாளர்ங்கிறத மறந்துட்டு, டைரக்டர்கிட்ட என்ன வேணும்னு கேட்டுச் செய்வாரு. அதுமட்டுமில்லாமல், இந்த ‘மண்டாடி’ படம் எந்த அளவுக்குப் பெரிய சவாலா இருந்துச்சுன்னு எனக்கு நல்லா தெரியும். கடல் நடுவுல படமாக்குறது எவ்வளவு கஷ்டம்னு, அந்த டீமுக்கும், பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கும், கதிர் சாருக்கும்தான் தெரியும். ஒரு பெரிய சவாலை அவங்க எல்லாரும் கையாண்டவிதம் ரொம்பவே பாராட்டத்தக்கது.
இந்த படத்தோட முக்கியக் கதாபாத்திரமான சூரி அண்ணனைப் பத்தி சொல்லணும்னா, நான் அவரைப் பார்த்ததிலிருந்து அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காருன்னு எனக்கு நல்லா தெரியும். 1999-ல ‘சங்கமம்’ படத்துல ஜூனியர் ஆர்டிஸ்டா ஆரம்பிச்சு, இன்னைக்கு ஒரு ஹீரோவா மாறுறதுக்கு 25 வருஷம் அவர் கடுமையா உழைச்சிருக்காரு. எந்த இடத்திலயும் அவர் விட்டுக் கொடுக்கல. அவர் ஒரு உண்மையான இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்துல நான் அவர்கூட நடிக்கலனாலும், அவருடைய வெற்றியை நான் மனசார விரும்புறேன்.
இந்தப் படத்துல வேலை செய்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். படத்தோட டீசர் பார்க்கும்போது ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெறும்.
இந்த ‘மண்டாடி’ படம் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா மட்டுமில்ல, ஒரு சிறந்த மனித உணர்வுகளைப் பேசுற படமாவும் இருக்கும். செப்டம்பர் 10-ஆம் தேதி வரப் போகிற இந்தப் படத்துக்கு என் முழு ஆதரவும் இருக்கும். படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி!” என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, “எல்லாருக்கும் ரொம்ப, ரொம்ப நன்றி. முதல்ல ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டினம், தொண்டி போன்ற ஊர்களில் இருந்து வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் மிகப் பெரிய நன்றி. நீங்க இல்லைனா இந்த ஈவென்ட் சும்மா ஒரு மீட்டிங் மாதிரி ஆகியிருக்கும்; இவ்வளவு பிரமாண்டமா, ஒரு ஆரவாரத்தோட நடக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.
மதி, நீங்க ரொம்ப சிறப்பா பேசுனீங்க. ஒரு முதல் பட இயக்குநர் மாதிரி இல்லாம, அவ்ளோ கெத்தா, நம்பிக்கையோட பேசுறீங்க. உங்க டீம்ல இருக்கிற அத்தனை பேரையும் மேடைக்கு கூப்பிட்டுப் பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உங்களுடைய முதல் படமே பெரிய பிளாக் பஸ்டரா அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
கதிர் சார், உங்க கேமரா ஒர்க் கடலுக்குள்ள பிரமாதமா வந்திருக்கு. பிரதீப் ஈ.ராகவ் எடிட்டிங், பாலசரவணன் நடிப்பு, தம்பி மிதுன், மகிமா எல்லாருக்கும் வாழ்த்துகள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், கடலுக்கு நடுவே நீங்க கோட் போட்டுட்டு நின்னுகிட்டு பண்ணிய சாகசங்கள் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.
வெற்றிமாறன் சார் சொன்னது மாதிரி அந்த இடத்துல ரிஸ்க் எடுத்து ஒர்க் பண்ணது பெரிய விஷயம். சுஹாஸ் தம்பி, உங்க முகத்துல ஒரு அப்பாவித்தனம், அதே சமயம் மிரட்டலான வில்லத்தனம் ரெண்டும் இருக்கு. தமிழ் சினிமாவுக்கு உங்களை வரவேற்கிறேன்.
எல்ரெட் குமார் சார் மாதிரி ஒரு தைரியமான தயாரிப்பாளர் கிடைக்கிறதே பெரிய விஷயம். இயக்குனர் 500 பேர் கேட்டா, 1500 பேர் கொடுப்பாரு. அவர் கொடுத்த சுதந்திரம்தான் இந்த படம் இவ்ளோ பிரமாண்டமா வரக் காரணம்.
அதே மாதிரி, முக்காவாசி படம் நடுக்கடல்ல ஒரு 15-20 கிலோமீட்டர் தள்ளித்தான் எடுத்தோம். புயல், காத்துனு எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எங்களை பத்திரமா பாதுகாத்து கரையைச் சேர்த்த அந்த ஊர் பசங்க சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நீங்க இல்லைனா நாங்க கடல்ல ஷூட்டிங் பண்ணியிருக்கவே முடியாது. நீங்கதான் எங்களோட லைஃப் கார்ட்ஸ்.
இந்த படத்தோட ஷூட்டிங்ல என் கால்ல பலமா அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுருச்சு. கால் வீங்கி எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில, வீல்சேர்ல உட்கார்ந்துக்கிட்டுதான் வந்தேன். டைரக்டர் கூட, ‘வேணாம் சார். உடம்பு தான் முக்கியம், அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொன்னாரு. ஆனா, ‘பரவாயில்ல தம்பி, படகில் ஏறி உக்காந்துக்கிட்டு என்னால முடிஞ்சதை பண்றேன்’னு சொல்லி நடிச்சேன். அந்த வலியிலும் எனக்காக மொத்த யூனிட்டும் உறுதுணையா நின்றார்கள்.
நான் இன்னைக்கு இந்த மேடையில நிம்மதியாக நிற்கிறேன் என்றால் அதுக்குக் காரணம் என் வீட்ல இருக்குற பெண்கள்தான். ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி கண்டிப்பா ஒரு பொண்ணு இருப்பாங்க. என் மனைவி, என் குழந்தைங்க எனக்குக் கொடுக்கிற சப்போர்ட்தான் என்னை எந்த கவலையும் இல்லாம ஓட வைக்குது. எல்லாரையும்விட என் அம்மா…
அவங்கதான் என் சாமி. ரெண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட போன்ல பேசும்போது எங்க அம்மா ரொம்ப அழுதாங்க. ‘அன்னைக்கு ஒரு நாள் 300 ரூபா வீட்டு வாடகை கொடுக்க முடியாம, சாப்பிட வழியில்லாம போன் பண்ணி அழுதியேயப்பா… இன்னைக்கு ஊர் முழுக்க உன் பிறந்த நாள் போஸ்டர் இருக்குறத பார்த்து எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு’னு சொல்லி அழுதாங்க. அந்த அம்மாவோட கண்ணீரும் ஆசீர்வாதமும், உங்களோட அன்பும்தான் என்னை வாழ வைக்குது.
எனக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என் நண்பர், சகோதரர் உதய் சங்கர் அண்ணனுக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ். செப்டம்பர் 10-ஆம் தேதி ‘மண்டாடி’ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது. இது ஒரு மிகப் பெரிய படமா வந்திருக்கு. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பார்த்து உங்க ஆதரவைக் கொடுங்க. ரொம்ப நன்றி, வணக்கம்!” என்றார்.


