அருண் விஜய்- ஏமி ஜாக்சன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக 3.5 கோடியில் லண்டன் சிறை செட் !

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கிறார்கள்

இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

முன்பே திட்டமிட்டபடி படத்தின் ஷெட்யூல் மிகச் சரியாக போய் கொண்டிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச்சரியாக படப்பிடிப்பை முடித்து விடக்கூடியவர். அதைப் போலவே ‘அச்சம் என்பது இல்லயே’ படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து விடும்.

லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார். பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் துன்புறுத்துகிற இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார்.

ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். நிமிஷா விஜயனுடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏமி.