‘அவள்’ பற்றி இவர்கள்!

ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் ‘அவள்’ படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனிலும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில், அறிமுக இயக்குநர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகியுள்ள ‘அவள்’,கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது. இப்படத்தை சித்தார்த்தின் ‘Etaki Entertainment’ நிறுவனம், ‘Viacom18 Motion Pictures’ நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளது. ‘அவள்’ படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ள ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பில் உற்சாகத்தின் உச்சியில் உள்ளார்.

‘அவள்’ குறித்து  ரவீந்திரன் பேசுகையில், ”படத்தை பார்த்துவரும் மக்களிடையும் விமர்சகர்களிடையும் இப்படத்திற்கு அபாரமான வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. இது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி அளித்தாலும், இது நான் எதிர்பார்த்தது தான்.ஏனென்றால் ‘அவள்’ அவ்வளவு சிறப்பான படம். ‘மிகப்பெரிய ஹிட் படம் ‘ என்ற அந்தஸ்தை நோக்கி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் உண்மையான, சிறப்பான திகில் படத்திற்குரிய ஆளுமையை நிருபித்துள்ளது.

இயக்குநர் மணி ரத்னத்தின் பள்ளியிலிருந்து பயின்று வந்து இப்படத்தை இயக்கியுள்ள மிலிண்ட் ராவ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள ஒரு முக்கியமான வரவு. அவ்வளவு சிறப்பாக இப்படத்தை செதுக்கியுள்ளார். கதையம்சத்திலும்,தொழில்நுட்ப ரீதியிலும் இப்படத்தை உச்சத்திற்கு கொண்டுபோயுள்ளார். இது மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இப்படத்தின் எல்லா நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ‘அவள்’ படத்தை ரிலீஸ் செய்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி மற்றும் பெருமை. எனது வெற்றி பட பட்டியலில் ‘அவள்’ ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது ”.